Leptospirosis 
ஆரோக்கியம்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

சுடர்லெட்சுமி மாரியப்பன்

மழைக்காலம் தொடக்கி விட்டாலே, பாதிப்புகள் அடுக்கடுக்காக வந்து விடும். அதுவும் தற்போது மக்களுக்கு எச்சரிக்கைகள் வந்த வண்ணமாகத்தான் இருக்கின்றன. சிறிது நாட்களுக்கு முன்புதான் XEC என்ற கொரோனா வைரஸ் 11 நாடுகளில் பரவுவதாக எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதாக சுகாதாரதுறை எச்சரித்துள்ளது. 

எலிக்காய்ச்சல்

  • எலிக்காய்ச்சல் என்பது சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவிலிருந்து விலங்குகளுக்கு பரவி அதன் வாயிலாக மனிதர்களிடம் தொற்றிக் கொள்ளும் ஒரு நோயாகும்.

எலிக்காய்ச்சல் பாதிப்பு

  • எலிக்காய்ச்சல் சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் தான் பாதிப்பை ஏற்படுத்துமாம்.  நாய்கள், பன்றிகள், கால்நடைகள் மூலமாகவும், குறிப்பாக எலிகளின் மூலமாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. பொதுவாக மழைப் பொழிவுக்குப் பிறகு இந்த நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்படும் என கூறப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

எலிக்காய்ச்சல் அறிகுறிகள்

  • விலங்குகளிடமிருந்து பாக்டீரியா கிருமிகள் மனிதர்கள் உடலுக்குள் நுழைந்த ஏழு முதல் பன்னிரெண்டு நாள்கள் கழித்து  எலிக் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் தென்படுமாம். முதல் வாரத்தில் குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படுமாம். 

எலிக்காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை

கடந்த 2021-ஆம் ஆண்டில் 1,046 பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை 2022-இல் 2,612-ஆகவும், கடந்த ஆண்டில் 3,002-ஆகவும் இருந்தது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் இந்த காய்ச்சல், நிகழாண்டில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டோருக்கு  உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

அதோடு, எலிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை குஜராத், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் அந்தமான் நிகோபர் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு தொடங்கியது என்றும் எலிக்காய்ச்சல் மூலம் நிகழும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, எலிக்காய்ச்சல் நோயைக் கண்டறிய மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உள்பட 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வகை தொற்றை உறுதிப்படுத்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் மாவட்ட நுண்ணுயிரியலாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்பதையும் பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மேலும்,  மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கூறியுள்ளது.

தன்னம்பிக்கையே ஒன்றே தன்னிகரில்லாதது!

விமான சாகச நிகழ்ச்சிகளுக்கு எப்படி பயிற்சிகள் எடுக்கப்படுகின்றன தெரியுமா? 

மூத்த குடிமக்களின் மனநிலையை மேம்படுத்த உதவும் வேடிக்கை விளையாட்டுகள்!

உங்கள் மனம்தான் அசைந்து கொண்டிருக்கிறது!

News 5 – (08.10.2024) இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா வர அழைப்பு!

SCROLL FOR NEXT