

நம்மிடம் போதிய பணம் இல்லாத காரணத்தினால் நாம் கடன் என்ற அபாயகரமான குழியில் இறங்குகிறோம். இந்தக் குழியிலிருந்து வெளியேறுவதற்கு நமக்கு பணம் என்ற ஏணி தேவை. இதில் முக்கியமான கவனிக்க வேண்டியது காலம் செல்ல செல்ல ஆழம் அதிகரிக்கும். ஏனென்றால், வட்டி என்பது கடனுடன் சேர்வதால், குழி இன்னும் ஆழமாகிறது. குழியிலிருந்து வெளியேற நமக்கு பணம் என்ற ஏணி அவசியம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, கடன் என்ற குழியை விட்டு வெளியேற வேண்டும்.
கடனிலிருந்து வெளியேற தேவைப்படும் பணத்தை இரண்டு வழிமுறைகளில் பெறலாம்.
1. அதிகமாக பணத்தைச் சம்பாதிப்பது
2. சம்பாதித்த பணத்தைச் சிக்கனமாக வாழ்ந்து அதிகமாக சேமிப்பது
மேலே குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளின் மூலம் நாம் பெறும் அதிகமான பணத்தைக் கொண்டு கடனை அடைத்து முடிக்கவேண்டும். இவற்றில் இரண்டாவது எளிமையானது. ஏனென்றால், ஏற்கனவே, நாம் சம்பாதிக்கிறோம். அந்தப் பணத்தைச் சேமிப்பது எளிதானது. ஒரு ரூபாய் சேமிப்பதென்பது, ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமமானது.
உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு என்ற இந்த நான்கும்தான் அத்தியாவசிய தேவைகள். இவற்றைத் தாண்டிய மற்ற செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து பணத்தைச் சேமிக்க முயலவேண்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளில் எவ்வாறு பணம் திரட்டுவது என்று யோசித்துப் பார்க்கவேண்டும். அந்த யோசனைகளை செயல்படுத்துவதன் மூலம் நாம் அதிக பணத்தைப் பெறமுடியும். இந்த யோசனைகள் நபருக்கு நபர் மாறுபடும். ஒருவருடைய திறமைகள், அவர் வசிக்கும் இடம், அவருக்கு முன்புள்ள வாய்ப்புகள் போன்றவறைச் சார்ந்து இந்த யோசனைகளைச் செயல்படுத்துவது நபருக்கு நபர் மாறுபடும். பின்வரும் யோசனைகள் நமக்கு ஒரு வழிகாட்டல் மட்டுமே. எந்த யோசனை நமக்கு ஒத்து வரும் என்று கண்டு, அதனைச் செயல்படுத்தி அதிக பணம் பெறலாம். யோசிக்க யோசிக்க இன்னும் பல்வேறு யோசனைகள் தோன்றும்.
அதிகமாக பணம் சம்பாதிக்க சில யோசனைகள்;
மோட்டார் சைக்கிள், சிற்றுந்து போன்றவை ஒட்டத் தெரிந்தால், பகுதி நேரத்தில் ஓலா, ஊபர் போன்ற வாகன வாடகை செயலிகள் மூலம், வாகனங்கள் ஓட்டலாம்.
மோட்டார் சைக்கிள், சிற்றுந்து போன்றவை கொண்டு, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பிக்கலாம்.
புகைப்படம் எடுக்கும் திறன் இருந்தால் விழாக்களுக்கு புகைப்படம் எடுக்கலாம்.
இந்தி, ஆங்கிலம் போன்ற வேறு மொழிகள் தெரிந்திருந்தால் அவற்றைக் கற்பிக்கலாம்.
இசைக்கருவிகள் வாசிக்க தெரிந்தால், இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம். இசைக் கருவிகள் வாசிக்க கற்றுக் கொடுக்கலாம்.
நல்ல வலுவான உடல் அமைப்பு இருந்தால், வீடு மாறுவதற்கு உதவும் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் போன்ற வீடு குடிமாற்றம் செய்ய உதவும் நிறுவனங்களில் பொருட்களை ஏற்றி இறக்க உதவலாம்.
திருமணமானவர் எனில், மனைவியும் வேலைக்கு செல்லலாம்.
எழுத்துத்திறன் இருந்தால் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், கதைகள் எழுதலாம். புத்தகங்கள் எழுதலாம்.
நிரல் மொழியில் திறன் இருந்தால், அது சம்பந்தமான நிரல்கள், செயலிகள் உருவாக்கலாம். வகுப்புகள் எடுக்கலாம்.
ஓவியம் வரையும் திறன் இருந்தால், ஓவியங்கள் வரைந்து விற்கலாம். ஓவிய வகுப்புகள் எடுக்கலாம்.
பொருட்களை வாங்கி அவற்றுக்கு மதிப்பு கூட்டி விற்கலாம்.
யூடியூப் காணொளிகள் பதிவேற்றி பணம் சம்பாதிக்கலாம்.
சுவர்களுக்கு வண்ணம் பூசும் திறன் இருப்பின், வீடுகளுக்கு வண்ணம் பூசலாம்.
வீட்டில் தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை விற்கலாம்.
விளையாட்டில் திறன் இருப்பின், விளையாட்டிற்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம்.
அதிகமாக பணம் சேமிக்க சில யோசனைகள்;
வெளியில் உணவு அருந்துவதை தவிர்த்து வீட்டிலேயே உணவு தயார் செய்து, எடுத்துச்செல்லலாம்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். பொருட்களை மொத்தமாக வாங்குவதன் மூலம், குறைந்த விலையில் அதிகமாக பொருட்கள் வாங்கலாம்.
ஏற்கனவே பயன்படுத்திய இரண்டாம் நபர் பொருட்களை வாங்குவதன் மூலம் மலிவான வேலையில் பொருட்களை வாங்கலாம்.
குளிர்சாதன பெட்டிக்கு பதிலாக, மின்விசிறி பயன்படுத்துவது, குண்டு பல்பிற்கு பதிலாக எல்.ஈ.டி பல்பு பயன்படுத்துவது போன்ற வகைகளில் மின்சாரத்தைச் சேமித்து, மின்சார கட்டணத்தைக் குறைக்கலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் தவிர, மற்ற வகுப்புகளைக் கடன் கட்டி முடிக்கும் வரை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
தேவையற்ற மாதாந்திர சந்தாக்களிலிருந்து வெளியே வரலாம்.
பரிசுப் பொருட்களை கடையில் வாங்காமல் நாமே கைப்பட தயாரித்துக் கொடுக்கலாம்.
நமது துணிகளுக்கு நாமே இஸ்திரி போட்டுக் கொள்ளலாம்.
வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு செல்வது, கடற்கரைக்கு செல்வது போன்ற செலவில்லாத பொழுதுபோக்குகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
வரவு செலவு கணக்கு எழுதி, மாதா மாதம் பணம் எவ்வளவு செலவாகிறது என்று கண்டு, செலவுகளைக் குறைக்க அல்லது தவிர்க்கப் பார்க்கவேண்டும். சிக்கனமாக வாழ்ந்து பணத்தைச் சேமிக்க முயலவேண்டும்.
மேலே சொன்ன இரண்டு வழிமுறைகளில் பெறும் அதிக பணத்தைக்கொண்டு சீக்கிரமாக கடனை அடைத்து கடனை விட்டு வெளியேற வேண்டும்.