

சிறு குறு நடுத்தரத் தொழில்களைப் பதிவு செய்வது எப்படி?
சிறு குறு நடுத்தரத் தொழில் (Micro Small and Medium Enterprises) தொடங்க விரும்புகிறீர்களா? எவ்வாறு தொடங்குவது? எவ்வாறு பதிவு (MSME பதிவு) செய்வது? எவ்வாறு நடத்துவது? என்பதைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை ?
சிறு குறு நடுத்தர தொழில்கள் இந்தியாவில் பொருளாதாரத்திற்கு பெருமளவில் உதவுகின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% இவற்றில் இருந்து கிடைக்கிறது. 11 கோடி பேர் இவற்றால் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 6 கோடி பதிவு செய்யப்பட்ட இத்தகைய நிறுவனங்கள் உள்ளன.
இவை நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கின்றன. புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றன. இத்தகைய சிறு குறு நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்க அரசானது பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அந்தத் திட்டங்களின் பலன்களை நாம் அடைய சரியான முறையில் நமது சிறு குறு நடத்தர தொழிலைப் பதிவு செய்ய வேண்டும்.
எவ்வாறு சிறு குறு நடுத்தரத் தொழிலைப் பதிவு செய்வது ?
சிறு குறு நடுத்தரத் தொழில் தொடங்குவதற்கு பொதுவாக ஒரு பதிவு போதுமானது. தேவை இருந்தால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிவுகள் செய்ய வேண்டி வரும்.
1) சிறு குறு நடுத்தர தொழிலை உத்யம் இணையத்தில் பதிவு செய்வது (Udyam)
2) சரக்கு மற்றும் சேவை வரி பதிவு செய்வது (GST)
3) எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு செய்வது (உணவு சம்பந்தப்பட்ட தொழிலுக்கு மட்டுமே) (FSSAI - FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA)
1) சிறு குறு நடுத்தரத் தொழிலை உத்யம் இணையத்தில் பதிவு செய்வது(Udyam)
இது மிகவும் எளிதானது. முழுக்க முழுக்க இணையத்தில் செய்யக் கூடியது. ஒரு ரூபாய் கூட செலவில்லாதது.
உத்யம் இணையத்தில் பதிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
அடமானம் அற்ற கடன்கள் , குறைந்த வட்டியில் கடன்கள் கிடைக்கும்.
அரசாங்கத்தின் மானியங்கள் கிடைக்கும்.
அரசாங்கத்தின் திட்டங்களின் குத்தகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
பொருட்களின் பணம் செலுத்துவதற்கு சற்று கூடுதல் காலம் கிடைக்கும். அதற்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு கிடைக்கும்.
வரி செலுத்தும் போது பல வரி விலக்கு சலுகைகள் கிடைக்கும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பல்வேறு ஊக்குவிப்புகள் கிடைக்கும்.
உத்யம் இணையத்தில் எவ்வாறு சிறு குறு நடுத்தர தொழிலைப் பதிவு செய்வது ?
2020 ஆம் ஆண்டு அரசாங்கம் சிறு குறு நடுத்தர தொழில் வகைப்படுத்தலை முதலீடு மற்றும் வருமானம் சார்ந்து மாற்றியது. பட்ஜெட் 2025 இல் இதனில் பல்வேறு சலுகைகளைச் செய்து தொழில்களின் உற்பத்தியை அரசாங்கம் ஊக்கப்படுத்தியது.
சிறு தொழில் (Micro) - 2.5 கோடி முதலீடு வரை. 10 கோடி வருமானம் வரை.
குறு தொழில் (Small) - 25 கோடி முதலீடு வரை. 100 கோடி வருமானம் வரை.
நடுத்தரத் தொழில் (Medium) - 125 கோடி முதலீடு வரை. 500 கோடி வருமானம் வரை.
எல்லா சிறு குறு நடுத்தர நிறுவனங்களும் தங்களைப் பதிவு செய்து கொள்வது அவசியம்.
* பின் வரும் ஆவணங்களைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஆதார் எண், பான் எண், கடையின் முகவரி, வங்கிக் கணக்கு விபரங்கள், செய்யும் தொழில் சார்ந்த விபரங்கள், தொழிலில் செய்த முதலீடுகள்( எந்திரங்கள் போன்றவை), வருடாந்திர வருமானங்கள்.
* https://www.udyamregistration.in/ இணையத்திற்கு செல்ல வேண்டும்.
* இதுவரை பதிவு செய்யாத சிறு குறு நடுத்தரத் தொழில் என்ற சுட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* ஆதார் எண் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
* பான் எண் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
* தனிநபர் மற்றும் தொழில் சார்ந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
* முதலீடு வருமானம் சார்ந்த விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
* உத்யம் பதிவு எண் வந்து, அதற்கான சான்றிதழ் கிடைத்து விடும்.
* இதை வாழ்நாளுக்கு ஒருமுறை செய்தால் போதும். இதற்கு ஒரு ரூபாய் கூட செலவு கிடையாது.
* வருடா வருடம் முதலீடு மற்றும் வருமானம் சார்ந்த விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
* நிறுவனத்தின் வகைப்பாடு மாறி இருப்பின் அதை வருடா வருடம் தெரிவிக்க வேண்டும்.
2) ஜிஎஸ்டி பதிவு செய்வது:
எல்லா சிறு குறு நடுத்தரத் தொழில்களும் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆண்டு வருமானம் 10,20,40 இலட்சத்தைத் தாண்டும் பட்சத்தில் (இருக்கும் மாநிலத்தைப் பொறுத்து) ஜிஎஸ்டி பதிவு செய்வது அவசியம். மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்தால் ஜிஎஸ்டி பதிவு அவசியம்.
ஏன் ஜிஎஸ்டி பதிவு செய்யவேண்டும்?
40 இலட்சம் வருமானம் தாண்டிய நிறுவனங்களுக்கு இது சட்டப்படி கட்டாயம்.
ஏற்கனவே வரி கட்டப்பட்ட விவரங்களைக் கொண்டு நமது நிறுவனத்திற்கு வரிச்சலுகைகள் (Input Tax Credit) பெற முடியும்
மாநிலங்களுக்கு இடையேயான வியாபாரங்களை (Inter State Business) எந்த ஒரு பிரச்னைகளும் இன்றி செய்ய முடியும்
ஜிஎஸ்டி எவ்வாறு பதிவு செய்வது?
* https://www.gst.gov.in/ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
* புதிய பதிவு என்ற சுட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும்
* நிறுவனத்தின் மாநிலம், நிறுவனத்தின் பான் எண், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்
* ஒருமுறை கடவுச்சொல் போன்றவற்றை உள்ளீடு செய்த பிறகு தற்காலிக பதிவு எண்(Temporary Registration Number) கிடைக்கும்.
* இதனைக் கொண்டு மறுபடி அதே இணையத்தில், புதிய பதிவு என்று தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருமுறை கடவுச்சொல்லை கொண்டு உள் நுழைய வேண்டும்.
* நமது பதிவு செய்த விவரத்தை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* இதற்குப் பிறகு இரண்டாவது பகுதி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். புகைப்படங்கள், வியாபார இடத்தின் அத்தாட்சி, வங்கி விபரங்கள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.
* தொழில் சம்பந்தமான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
* தொழில் பங்குதாரர்கள் சம்பந்தமான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
* தொழிலில் கையெழுத்திடுவதற்கு யார் உரிமையானவர் என்பது குறித்து விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.
* தொழில் நடைபெறும் இடம் சார்ந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
* வங்கி விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
* சரக்கு மற்றும் சேவை வரி சம்பந்தமான விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
* ஆதார் எண் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவு செய்த பின்னர், மாதாமாதம் நாம் செலுத்த வேண்டிய வரியை தவறாமல் செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி உள்ளடங்கிய திட்டத்தில் (GST Composition scheme) பதிவு செய்த தொழில்கள் இதில் சற்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் வரியைச் செலுத்தினால் போதுமானது. வரி செலுத்ததில் அவர்களுக்கு ஆவணங்களை வைத்திருப்பதில் பல்வேறு சலுகைகள் உண்டு. தொழில் செய்வதை எளிமைப் படுத்த இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
3. எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு செய்வது எப்படி?
2006 ஆம் ஆண்டு இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை கட்டுப்பாட்டு நிறுவனம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. அரசாங்க விதிகளின்படி உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் ஒவ்வொருவரும் இதில் பதிவு செய்ய வேண்டும்.
வீட்டிலிருந்தே உணவு வழங்குவது, உணவுப் பொருட்களை பதப்படுத்தி வைப்பது, உணவுப் பொருட்களின் சில்லறை விற்பனையாளர், மொத்த விற்பனையாளர் என எந்த ஒரு உணவு சார்ந்த வியாபாரம் செய்பவர்களும் இதில் பதிவு செய்வது கட்டாயம். இதில் பதிவு செய்த பின் 14 இலக்கப் பதிவு எண் வழங்கப்படும். 12 லட்சம் வரை வருமானம் உள்ள உணவு சார்ந்த நிறுவனங்களுக்கு அடிப்படை பதிவு (Basic Registration) போதுமானது. அதைவிட அதிக வருமானம் உடைய நிறுவனங்கள் மாநிலம் அல்லது தேசிய அளவிலான பதிவுகளைச் செய்ய வேண்டும்.
* பதிவு செய்வதற்கு அடையாள அட்டை (பான் எண் அல்லது ஆதார் எண்), வியாபாரத்தின் இடத்தின் அடையாளம் போன்றவை வைத்திருக்க வேண்டும்.
* http://foscos.fssai.gov.in/ இணையத்திற்கு செல்ல வேண்டும்
* கைப்பேசி எண்ணை கொண்டு பதிவு செய்ய வேண்டும்
* இடம், கைப்பேசி எண் போன்ற வியாபாரம் சம்பந்தமான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்
* தொழில் நடத்துவதற்கான உரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்
* உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அலுவலர்கள் உங்களது இடத்திற்கு வந்து உங்களது விவரங்களை சரி பார்ப்பார்கள்.
வருடாந்திரம் நமது விவரங்களை பதிவேற்ற வேண்டும். 12 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ள நிறுவனங்கள் இதனை வருடா வருடம் பதிவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இத்தகைய எல்லா பதிவுகளையும் நாமே செய்து கொள்ளலாம். பட்டய கணக்காயர் போன்ற நபர்கள் வாயிலாகவோ அல்லது இணையத்தில் இத்தகைய சேவை வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாகவோ செய்து கொள்ளலாம்.
இவ்வாறு சிறு குறு நடுத்தர நிறுவனங்களை ரூபாய் 50000 க்கு குறைவாக வீட்டிலேயே செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. உதாரணமாக, 10 நிறுவனங்களைப் பார்ப்போம்.
1. வீட்டிலிருந்தே சமையல் வியாபாரம் செய்வது.
2. வீட்டில் இந்தி, ஆங்கிலம், கணக்கு போன்ற வகுப்புகள் நடத்துவது.
3. நல்ல ஒரு கேமரா கருவி வாங்கி புகைப்படங்கள் எடுப்பது.
4. புத்தகங்கள் வடிவமைப்பது இணைய வழியாக விற்பது.
5. இணையதளங்கள் வடிவமைப்பது.
6. வீட்டிலேயே ஊறுகாய், பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் தயாரிப்பது.
7. வீட்டிலேயே கைவினைப் பொருட்கள் தயாரிப்பது.
8. யூடியூபில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது.
9. பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது.
10. மின்னச்சு இயந்திரம்(Printer), நகலெடுப்பது(photo copy) சார்ந்த தொழில்கள் செய்வது.
நாமும் இத்தகைய சிறு குறு நடுத்தரத் தொழில்கள் செய்து நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவோம்.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எந்த இடைத்தரகரும் இன்றி உங்கள் தொழிலை அரசு அங்கீகாரத்துடன் இலவசமாகப் பதிவு செய்து, குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள் மற்றும் அரசு மானியங்களைப் பெறுவதற்கான முழுத் தெளிவையும் சட்டப்பூர்வத் தகுதியையும் பெறுவீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: