

வங்கிகள் வழங்கும் பெர்சனல் லோன் இஎம்ஐயை சரியான நேரத்தில் செலுத்தாதால் தாமதக் கட்டணம், கூடுதல் வட்டி, கிரெடிட் ஸ்கோர் 50–70 புள்ளிகள் வரை குறைதல், எதிர்கால கடன் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதில் சிக்கல், சட்டநடவடிக்கை, ரெக்கவரி ஏஜென்ட்கள் மூலம் சொத்து ஜப்தி போன்ற தீவிர விளைவுகள் ஏற்படும். ஆகவே பட்ஜெட், அவசர நிதி, குறைந்த கடன் மூலம் தவணை ஒழுங்கை பேண வேண்டும்.
முன்பெல்லாம் கடன் கொடுப்பதும் கடன் பெறுவதும் எளிதாக இல்லாத சூழல் நிலவியது. வங்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகே ஒருவரின் பொருளாதார நிலைக்கு தகுந்தாற்போல கடன் வழங்கப்பட்டது.
வாகனக்கடன், கல்விக்கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில் கடன் என பல்வேறு கடன்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், எல்லாக் கடன்களையும் எளிதாக அடைக்கும் வகையில் இஎம்ஐ (Equated Monthly Instalment) எனப்படும் மாதத் தவணை முறை அமல்படுத்தப்பட்டது.
கடன்களை திரும்பக் கட்டுவதற்கு எளிதான வழிமுறைகள் உள்ளதால் பல்வேறு தரப்பினரும் கடன் பெற்று தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். மருத்துவம், திருமணம், கல்வி, வீட்டுப்பழுது மற்றும் பயணச் செலவுகள் போன்றவை காரணமாக பர்சனல் லோன் ஒரு முக்கியமான நிதி உதவியாக உள்ளது. மற்ற கடன்களைவிட வட்டி அதிகம் என்றாலும் பர்சனல் லோன் கிடைப்பது எளிது என்பதால் இது பலருடைய தேர்வாக உள்ளது.
பர்சனல் லோன் என்பது ஒரு வங்கியிடமிருந்து அல்லது நிதி நிறுவனத்தில் இருந்து நம் தனிப்பட்ட தேவை களுக்காக பெறப்படும் ஒரு காப்புறுதி இல்லாத கடனாகும். இந்த லோனை எடுக்கும்பொழுது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் இஎம்ஐ வடிவில் மாதந்தோறும் ஒரு தொகையை செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த இஎம்ஐயை கட்டத் தவறுவதால் பல தீவிரமான விளைவுகள் ஏற்படுகின்றன.
பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தவில்லை என்றால் அது நம் நிதியை சீர்குலைத்து எதிர்காலத்தில் கடன் வாங்குவதை கடினமாக்கி விடும். தனிநபர் கடனுக்கான இஎம்ஐ செலுத்தத் தவறினால் ஏற்படும் முக்கிய விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
தாமத கட்டணம் மற்றும் அபராதம்:
இஎம்ஐ செலுத்தத் தவறும் ஒவ்வொரு மாதமும், 1% முதல் 2% வரை தாமதக் கட்டணம் மற்றும் அபராத வட்டி வசூலிக்கப்படும். கட்டப்படாத இஎம்ஐ தொகைக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுவது நம் ஒட்டுமொத்த கடன் தொகையை அதிகரிக்கும்.
கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு:
தனிநபர் கடன்களை செலுத்தாதது நம் கிரெடிட் ஸ்கோரை பெரிதும் பாதிக்கும். இஎம்ஐ கட்டத் தவறினால் அது நம் கிரெடிட் ஸ்கோர்(CIBIL Score) மதிப்பீட்டை 50 முதல் 70 புள்ளிகள் வரை குறைக்கக் கூடும். இதனால் எதிர்காலத்தில் புதிய கடன்கள், லோன் அல்லது கிரெடிட் கார்டு பெறுவது கடினமாகிவிடும்.
சட்ட நடவடிக்கை:
தொடர்ச்சியாக 90 நாட்களுக்கு மேல் இஎம்ஐ செலுத்தவில்லை என்றால் நம் கடன் கணக்கு (வாராக்கடன்) செயல்படாத சொத்தாக (NPS - Non-Performing Asset) மாற்றப்படும். இதற்குப் பிறகு வங்கி அல்லது நிதி நிறுவனம் நம்முடைய நிலுவைத் தொகையை வசூலிக்க சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பலாம்.
ரெக்கவரி ஏஜென்ட்கள்:
வங்கிகள் தங்கள் சார்பாக கடன் வசூல் முகவர்களை நம் வீட்டிற்கு அனுப்பலாம். இது ஒரு சிவில் குற்றம் ஆகும். வங்கிகள் உரிமையியல் நீதிமன்றத்தில் (Civil Court) வழக்கு தொடர்ந்து, தீர்ப்பின் அடிப்படையில் நம் சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிடலாம்.
எனவே நம்மால் இஎம்ஐ கட்ட முடியவில்லை என்றால் பயப்படாமல் உடனடியாக வங்கியை அணுகி வங்கி அதிகாரிகளை சந்தித்து நம் சூழ்நிலையை எடுத்துக்கூறலாம். கடன் தவணைக் காலத்தை அதிகரிப்பது அல்லது கூடுதல் அவகாசம் கேட்பது போன்ற தீர்வுகளை வங்கியின் மூலம் மேற்கொள்ளலாம்.
பெர்சனல் லோன் திருப்பிச் செலுத்தத் தவறுவதை தவிர்ப்பதற்கான வழிகள்:
*பட்ஜெட் போடுவது:
நம் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்க மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கி கடனை திருப்பி செலுத்துவதற்கு போதுமான நிதியை ஒதுக்கி உள்ளோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
*அவசரநிலைகளுக்கு திட்டமிடுவது:
எதிர்பாராத செலவுகளைக் கையாள அவசர நிதியை ஒதுக்கி வைக்கவும். இதனால் அதிக பணம் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
*ஒரே நேரத்தில் பல கடன்களை எடுப்பதைத் தவிர்க்கவும்:
பல கடன்களை ஒரே நேரத்தில் பெறுவது கடனை திருப்பிச் செலுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது. அவசர தேவைக்கு உண்மையிலேயே தேவைப்படும் அளவிற்கு பணத்தை வாங்குவதும், அவற்றை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துவதும் நல்லது. விருப்ப செலவுகளை விட கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள். இதன் மூலம் பாதி டென்ஷன் குறைந்துவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: