

பெரும்பாலானவர்களின் பொழுதைப் போக்குவதில், வெள்ளித்திரையைப் பின்னுக்குத் தள்ளி, சின்னத்திரை ரேசில் முந்தி வருகிறது. ஒரே நாளில் இரண்டு, மூன்று டஜன் கணக்கில் மெகா சீரியல்கள், பல சானல்களாலும் ஒளிபரப்பப்படுகின்றன. இருந்தாலும், ஒவ்வொருவரின் மன நிலையைப் பொறுத்து அவர்களுக்குச் சில சீரியல்கள் பேவரிட் (favourite) ஆகி விடுகின்றன; பிடித்தும் போய் விடுகின்றன. ஆனால் ஒருசில சீரியல்கள் எல்லோருக்குமே பிடித்தவை ஆகி விடுவதும் உண்டு.
அந்த வகையில், சிங்கப் பெண்ணே சீரியல் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுவதாகத் தெரிகிறது. ஆங்கிலத்தில் மேட் ஃபார் ஈச் அதர் (Made for Each Other) என்பார்கள்.
'இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று!' என்று கவிஞர் சொல்வதைப் போல! உருவ ஒற்றுமை கருதி அவ்வாறு சொன்னதாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் உருவ ஒற்றுமையோடு குண நலன்களும் ஒத்துப் போவதையே அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அந்த விதத்தில் பார்க்கையில், சிங்கப் பெண்ணே ஆனந்தியும், அன்பும் மேட் ஃபார் ஈச் அதர்தான்!கிராமத்திலிருந்து கிளம்பி வரும் ஆனந்திக்குத் துணிச்சலும், நல் உழைப்புமே மூலதனம்!அன்பும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும், எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையை இழக்காத பாங்கும், நம்பியோருக்காக எதனையும் தியாகம் செய்யும் இயல்பும் அன்பு என்றழைக்கபடும் அன்புச் செல்வனின் மூலதனங்கள்.
அன்பு, தான் காதலிக்கும் ஆனந்தியை, முதலாளி மகேஷும் காதலிப்பதை அறிந்ததும், ஏழையாக இருக்கும் அவள், முதலாளியுடன் சேர்ந்தால் வாழ்வில் சிரமங்கள் இல்லாமல் வாழ்வாளே என்ற நல்ல நோக்கில், ஆரம்பத்தில் அவளை விட்டுக் கொடுக்கவும் தயாராகிறான். அதுதானே காதலின் மாண்பும்!காதலிக்கும் ஒவ்வொருவரும், தங்கள் இணை எந்தச் சிரமமும் இன்றிச் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பதால்தானே, காதல் தெய்வீகமாகிறது! ஆம்!தியாகமும், விட்டுக் கொடுத்தலும் தெய்வீகப் பண்புகள்தானே! அந்தப் பண்பு அபரிமிதமாக இருந்தாலே, காதல் கை கூடவே செய்யும்!
தனக்கு ஆரம்பத்தில் கெட்டவனாகத் தெரிந்த அன்பு, நாளடைவில் தன் மனச் சிம்மாசனத்தில் காதல் இளவரசனாக அமர்ந்து விட்டதை உணரும் ஆனந்தி, வாழ்நாள் முழுவதும் அவனோடு வாழவே ஆசைப்படுகிறாள்.
மானேஜர் மித்ராவுக்கோ, மகேஷைத் தன்வசம் ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற தீராத ஆசை! பெண்ணுக்குப் பெண்தானே பகை!
ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் போகும்போது, எதிரே, பசு, எருமை, ஆடு, குதிரை, கழுதை ஏன்? யானை வந்தாலுங்கூடக் கண்டு கொள்ளாமல் வந்து கொண்டிருக்கும். ஆனால் எதிரே ஒரு நாயைப் பார்த்து விட்டால்! அவ்வளவுதான்…
ஓனரை ஒரு வழி ஆக்கி விடும்! ‘இனம் இனத்தோடு சேரும்!’ என்று சொன்னவர்கள்.
‘இனம் இனத்தைக் கண்டால் எகிறும்’ என்றும் சொல்லியிருக்க வேண்டுமோ?
மித்ராவின் சூழ்ச்சியால் ஆனந்தி மீது அபாண்டப்பழி விழுகிறது. திருமணமாகாமலே கர்ப்பம்! அதனால் அவள் எதிர்கொள்ளும் அல்லல்கள் பலப்பல! ’என்னொப்பப் பெண் மகளிர் இவ்வுலகிற் தோன்றற்க!’ என்று இலக்கியம் பேசுவது போல, ஆனந்தி அனுபவிக்கும் சிரமம், பருவப் பெண் எவருக்குமே வரக் கூடாது.
மகேஷ் ஆத்திரத்தில் சில அவசர முடிவுகளை எடுத்து, அவற்றைச் செயல்படுத்தியதால், பலரின் வெறுப்புக்கும் ஆளாக நேர்கிறது. தன் அவசர முடிவுகளுக்காக வருந்தும் மகேஷ், அன்பின் நண்பனுக்குக் கல்யாணம் நடத்துவதாகக் கூறி, அதோடு சேர்த்து அன்பு-ஆனந்தி திருமணத்தையும் முடித்துவிடத் தீர்மானித்து, மாப்பிள்ளைத் தோழன் மற்றும் மணமகளின் தோழி என்று இருவரையும் பக்கத்தில் அமரச் செய்து, முகூர்த்த நேரத்தில் நண்பன் தாலி கட்டுகையில், ஆனந்திக்குத் தெரியாமலே அவள் கழுத்தில் தாலி கட்ட ஏற்பாடு செய்கிறான். அதற்காக ஊரிலிருந்து ஆனந்தியின் அம்மா, அப்பாவும் அழைக்கப்பட, அவர்களும் வந்து விடுகிறார்கள்.
அதே வேளையில், அன்புவின் மாமன் மகள் துளசி, தனக்குச் சாதகமாகக் காய் நகர்த்தி, நிச்சயம் என்று சொன்ன நேரத்தில் தாலி கட்டிக் கொள்ளத் திட்டம் போடுகிறாள். அன்புவின் தங்கை யாழினி அன்பின் பக்கம் நின்று, அவனுக்கு உதவுகிறாள்!
ஏகப்பட்ட ட்விஸ்டுகளுக்குப் பிறகு, பல சிரமங்களைக் கடந்து வந்த அன்பு, ஆனந்தி கழுத்தில் தாலி கட்டுகிறான்!ஆனால் அன்புவின் அம்மா ஒத்துக் கொள்ளாமல் ஆனந்தியைக் கட்டிய தாலியைக் கழற்றச் சொல்ல, அவளும் தாலிக் கயிற்றைப் பிடிக்கிறாள்! இதோடு நிற்கிறது கதை!
அன்பும் ஆனந்தியும் சேர வேண்டுமென்பதே ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு. நாமொன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதைப்போல,
நாமொரு முடிவுக்கு வருகையில், இயக்குனர் வேறொரு முடிவுக்கும் செல்லலாமே!
ஏறிய தாலி இறங்கியதா? இல்லை இதயத்தை வருடியபடி நிலைத்ததா?
தெரியும் விரைவில்!