
சினிமாவில் சில ஆண்டுகள் நிலைத்திருப்பதே கடினமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், 50 ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது சாதாரண ஒன்றல்ல. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நட்சத்திரங்கள் பலர் உள்ளனர். அதில் தற்போது இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் 50 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்யராஜின் 50 ஆண்டு கால சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் விதமாக அவரது மனைவியும், மகனும் விழா நடத்தவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து சினிமா கலையை கற்றுக் கொண்டவர் பாக்யராஜ். இவரை ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவரும் பாரதிராஜா தான். கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தை இயக்கும் போது தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் பாக்யராஜ். இதுமட்டுமின்றி தேவைப்படும் நேரங்களில் வசனங்களையும் இவர் எழுதியுள்ளார்.
1977 இல் வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தை அடுத்து, கிழக்கே போகும் இரயில் மற்றும் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களிலும் பாக்யராஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதுதவிர சிறுசிறு வேடங்களிலும் பாக்யராஜ் நடித்தார். இதன் தொடர்ச்சியாக 1979ல் புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார் பாரதிராஜா. அதே ஆண்டில் பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
1977 இல் உதவி இயக்குநராகி அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடிகர், இயக்குநர் என தனது சினிமா பயணத்தில் விரைவாக முன்னேறினார் பாக்யராஜ். உதவி இயக்குநராக பணியாற்றுவதற்கு முன்பே சினிமாவில் பாக்யராஜ் நுழைந்து விட்டதால் தற்போது 50 ஆண்டுகளைக் கடந்து விட்டது என அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் மகன் சாந்தனு ஆகியோர் இணைந்து விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக இவர்கள் இருவரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் இல்லாமல் ஒரு விழாவை நடத்த முடியாது அல்லவா! அதோடு இவர்கள் இருவருமே பாக்யராஜிற்கு நண்பர்கள். ஆகையால் தான் ஒரு மரியாதை நிமித்தமாக பாக்யராஜின் மனைவியும், மகனும் அவர்களை சந்தித்து விழா குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் பாக்யராஜின் 50 ஆண்டு கால சினிமா பயணத்திற்கான மாபெரும் விழாவை தமிழ் சினிமா காணப்போகிறது.
தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆளுமையாக பல ஆண்டுகள் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் பாக்யராஜ். தற்போது ஓரிரு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
50 ஆண்டுகள் சினிமா பயணம் என்பது எப்பேற்பட்ட சாதனை. மிகப்பெரும் சாதனையை நிகழ்த்திய இவரை பெருமைப்படுத்துவதில் தமிழ் சினிமா நிச்சயம் மகிழ்ச்சி கொள்ளும். இந்த விழாவில் பாக்யராஜ் உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், இவரால் சினிமாவில் அறிமுகமானவர்கள் மற்றும் பல நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.