

இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் அண்ணா காலத்தில் இருந்து இன்று வரை, இந்த மாநிலத்தை ஆளும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் அனைவரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் , விஜய் ஆகியோர் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.
இதில் எம்ஜிஆரும் விஜய்யும் தங்களது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம், புதிதாக கட்சி ஒன்றை தொடங்கி அதன் மூலம் ஆட்சி அமைத்தவர்கள். மற்றவர்கள் சினிமா துறையில் சாதனை செய்திருந்தாலும், ஏற்கனவே செல்வாக்கு மிகுந்த கட்சியில், தங்களது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு பதவியில் அமர்ந்தவர்கள்.
நேரடியாக மக்களின் செல்வாக்கினால் முதல்வர் பதவியில் அமர்ந்ததால் எம்ஜிஆருக்கு இன்றும் மக்களின் மத்தியில் பெரிய மரியாதை உள்ளதை மறுக்க முடியாது. அவருக்குப் பிறகு பல நடிகர்கள் அரசியல் கட்சியை தொடங்கினாலும் அவர்கள் யாராலும் முதல்வர் பதவியை பிடிக்க முடியவில்லை. எம்ஜிஆருக்கு பின்னர் புதிய கட்சியை தொடங்கி அதன் மூலம் ஆட்சியில் அமர்ந்தவர் என்ற பெருமை விஜய்க்கு மட்டுமே உண்டு.
அந்த காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு போட்டியாக சிவாஜி நடித்தாலும், தனக்கென்று ஒரு தனி பாணியை அவர் பின்பற்றி வந்தார். விஜய் தனக்கு போட்டியாக அஜித்தை கருதினாலும் , அவர் பின்பற்றும் பாணி கதையம்சங்களை விஜய் தேர்ந்தெடுப்பது இல்லை. சிவாஜி மற்றும் அஜித் ஆகியோர் வில்லன் மற்றும் எதிர் மறையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனால், எம்ஜிஆர் விஜய்யும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளனர்.
இவர்கள் எப்போதும் தங்களின் கதாபாத்திரம் அப்பாவி போல் இருப்பதை பெரும்பாலான திரைப்படங்களில் உறுதி செய்து கொண்டனர். பெரியவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் எம்ஜிஆர் அதிக செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் விஜய் தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.
எப்போதும் மக்களுக்காக போராடுவதைப் போன்ற கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து எம்ஜிஆர் நடிப்பார். அதே பாணியை தான் விஜய்யும் பின்னாளில் பின்பற்றி வந்தார். தமிழன் ,கத்தி , சர்கார் போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணமாக இருக்கின்றன. தனக்குத்தானே வில்லனாக எம்ஜிஆரும் விஜய்யும் நடித்தனரே தவிர மற்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்தது இல்லை. இவர்களின் கதாபாத்திரங்கள் எப்பொழுதும் பொது மக்களுக்கு எதிரானவை போல் சித்தரிக்கப்பட்டது இல்லை.
1977-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவிக்கு வந்த பின்னர், அவர் நடித்த 'மீனவ நண்பன்' என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. அதேபோல 2026 ஆம் ஆண்டு முதல்வராக விஜய் பதவி ஏற்ற பின்னர் , அவர் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23 அன்று வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் மக்களுக்காக போராடும் கதாபாத்திரத்தில் எம்ஜிஆரும், விஜய்யும் நடித்துள்ளனர்.
எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதேபோல் விஜய்யும் ஆட்சியில் இருந்த திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். எம்ஜிஆர் எதிர்கட்சி தலைவரான கருணாநிதிக்கு மதிப்பு கொடுத்தார். அதேபோல் விஜய்யும் எதிர்க்கட்சியான திமுகவின் தலைவரான ஸ்டாலினுக்கு மதிப்பு கொடுத்து வருகிறார்.