

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று புகழப்படும் கமல் ஹாசன் , சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதைப் பற்றி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கமல் ஹாசனுக்கு 65 ஆண்டுகளுக்கு குறையாமல் நீண்ட திரை அனுபவம் உள்ளது. தனது 5 வயதில் 'களத்தூர் கண்ணம்மா ' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் , முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்று கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் மூன்றாம் பிறை, நாயகன் , இந்தியன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
ஆரம்ப காலக் கட்டத்தில் கமல் நடன இயக்குனர் , இயக்குனர் ஆகியோரிடம் உதவியாளராக வேலை செய்து வந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் இல்லாத வேடங்கள் அவருக்கு வழங்கப்பட்டது. கே. பாலசந்தர் , ஐ.வி.சசி போன்ற இயக்குனர்கள் கமலை நாயகனாக்கி திரைத்துறையில் வலுவாக கால் ஊன்ற செய்தனர். சிங்கிதம் சீனிவாசராவ் கமலை மேலும் மெருகூட்டினார். கமல் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதால், நடிகர் திலகம் சிவாஜி தனது கலையுலக வாரிசாக கமலை அறிவித்தார்.
இதுவரை 236 திரைப்படங்களில் நடித்துள்ள கமல் பெரிய அளவிலான பல சூப்பர் ஹிட்களை கொடுத்துள்ளார். சிறந்த நடிகரை என்பதை தாண்டி , பல தொழில் நுட்பங்களை தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை கமலை சாரும். இந்திய சினிமாவின் மைல் கல்லாக , எப்போதும் சிறந்த படங்களாக நாயகன் மற்றும் தேவர்மகன் திரைப்படங்களே உள்ளன. சிறந்த திரைக்கதைக்கு உதாரணமாக இன்று வரையில் தேவர்மகன் திரைப்படமே உதாரணமாக கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு அரசியலில் குதித்த கமல் ஹாசன் , அதிக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். விக்ரம் படத்தின் பெரு வெற்றிக்கு பிறகு கமல் மீண்டும் சினிமாவில் அதிக ஈடுபாட்டுடன் நடித்து வந்தார். அடுத்தடுத்து ஷங்கர் , மணிரத்னம் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படங்களில் உருவான கமல் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தன. இந்நிலையில் கமல் இரட்டை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் " இன்றைய தலைமுறையினர் இளைய நடிகர்களை எதிர்பார்ப்பதால் மூத்த நடிகர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா?" என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகர் கமல் "புதிய கூட்டணிகள் உருவாக வேண்டும் என்பது முக்கியம்தான். பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். என்னை யாரும் இதுவரை ஓய்வு பெறச் சொன்னது இல்லை. ஆனால் மோசமான படங்களில் நடிக்கும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியுள்ளது.
ஆனால் , அப்போது என் நண்பர்கள், இப்போது ஓய்வு பெற வேண்டாம். ஒரு பெரிய வெற்றிப் படத்தினை கொடுத்து விட்டு ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார். ஒரு பெரிய வெற்றிப் படத்துடன் கமல் ஓய்வு பெறுவேன் என்று மறைமுகமாக கூறியுள்ளார். இது கமல் ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.