
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி. இவர் ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் சாய்பல்லவிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பின் அவர் தொடர்ச்சியாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதுமட்டுன்றி கவர்ச்சியால் ரசிகர்களை மயக்கும் நடிகைகள் மத்தியில் தனது நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
சாய் பல்லவி, சிவகார்திகேயனுடன் சேர்த்து நடித்து கடந்தாண்டு அக்டோபர் 31-ம்தேதி ரிலீஸான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவான தண்டேல் திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கான கதையை கார்த்திக் தீடா என்பவர் எழுதியிருக்கிறார். இந்த படம் கடந்த 7-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமின்றி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வழக்கமான மீன்பிடி பயணத்தின் போது தற்செயலாக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்லும் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒரு மீனவரின் காதல், வீரம் மற்றும் தேசபக்தியை விவரிக்கும் ‘தண்டேல்’ படத்தின் கதைக்களம் உண்மையில் மிகவும் தனித்துவமானது.
சாய் பல்லவி தண்டேல் படத்தில் எப்போதும் போல அற்புதமான நடிப்புடன், நடனத்திலும் அசத்தியுள்ளார். இந்தப் படத்தின் ‘புஜ்ஜி தள்ளி’ என்ற காதல் பாடலும், நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் ஆடும் ‘நமோ நமச்சிவாய’ என்ற பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதில் ‘நமோ நமச்சிவாய’ பாடலில் சாய்பல்லவியும், நாகசைதன்யாவும் போட்டிப் போடு நடனம் ஆடியிருக்கிறார்கள்.
கடந்த சில காலங்களாக தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த நாக சைதன்யாவுக்கு இந்தப்படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
சமீபத்தில் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ படத்தை தொடர்ந்து ‘தண்டேல்` படமும் வெற்றி பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
பிப்ரவரி 7-ம்தேதி திரையிடப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான தண்டேல் உலகளவில் முதல் நாளில் ரூ.21 கோடி, இரண்டு நாட்களில் ரூ.41.20 கோடி, 8 நாளில் ரூ. 95.20 கோடி என வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில், இப்படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நாகசைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் ‘தண்டேல்’ படம்தான், அதிக பொருட்செலவில் அதாவது ரூ.75 கோடியில் தயாரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது வரை ரூ.100 வசூல் செய்துள்ள இந்தப்படத்தின் வசூல் வேட்டை வரும் நாட்களில் அதிகரிக்கும் என படக்குழு கூறியுள்ளது.