
தமிழ் சினிமாவில் 47 வயதாகும் நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடை நண்பரான ஆர்யாவும் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று ஆன பின்பும் இவர் மட்டும் நடிகர் சங்க கட்டடம் திறந்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்தார். 9 வருட பல தடைகளையும் தாண்டி, வரும் ஆகஸ்ட் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஷால், 'நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், இன்னும் 4 மாதத்தில் திருமணம்' என்று அறிவித்ததில் இருந்து யார் அந்த பெண் என்ற கேள்வியே இணையதளத்தில் காட்டுத்தீயாக பரவி வந்தது.
நடிகர் விஷால் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். 2004-ம் ஆண்டு காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான செல்லமே திரைப்படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் நடிப்பதற்கு முன், நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றி உள்ளார். முதலில் காதல் நாயகனாக அறிமுகமான இவர் சண்டக்கோழி, திமிரு போன்ற படங்களில் மூலம் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திக்கொண்டு முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், சமூகப் பணி, நடிகர் சங்க பொதுச் செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு அதனை செவ்வனே செய்தும் வருகிறார். பல்வேறு சர்ச்சை, உடல் நலம் பாதிப்பு, நடிகைகளுடன் கிசுகிசு என்று பல்வேறு பிரச்சனைகள் வந்த போதும் எதற்கும் பதில் அளிக்காமல் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில் விஷால் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் யார் என்றும், இவர்களின் திருமணம் எப்போது என்ற விவரங்களும் தெரியவந்துள்ளது.
நடிகர் விஷால், சாய் தன்ஷிகாவை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார். சாய் தன்ஷிகா 2009-ம் ஆண்டு வெளிவந்த பேராண்மை திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டார்.
அதனை தொடர்ந்து மாஞ்சா வேலு, நில் கவானி செல்லாதே, அரவாண், பரதோசி போன்ற படங்களிலும் நடித்திருந்தாலும் ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று நேற்று காலை முதல் தகவல் பரவியது. இந்நிலையில், நேற்று மாலை நடந்த ‘யோகிடா’ பட விழாவில் நடிகர் விஷாலை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் கூறியதாவது...
"கடந்த 15 ஆண்டுகளாக விஷாலை எனக்கு தெரியும். நாங்கள் நண்பர்களாக பழகிவந்தோம். பொது இடங்களில் என்னிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் அவர், எனக்காக பல இடங்களில் குரல் கொடுத்துள்ளார். சமீபகாலமாக எங்கள் இருவருக்குள்ளும் உள்ள உணர்வை புரிந்து கொண்டோம். இதனை தொடர்ந்து நாங்கள் இருவரும் வரும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.
திருமண அறிவிப்பை அறிவித்ததும் விஷால், சாய் தன்ஷிகாவை முத்தமிட்டு அன்பை பரிமாறினார்.
இருவருக்கும் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.