

யார் இந்த தசமா தேவி?
குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் மிகவும் தீவிரமாக வழிபடப்படும் ஆதி சக்தியின் ஒரு சக்தி வாய்ந்த அவதாரம், தசமாதேவியாகும். மனிதர்களின் தசாவை (விதியை) மாற்றி அமைக்கக்கூடிய தெய்வமாதலால், தசமா தேவி, தசமகா வித்யா தேவி எனவும் கூறப்படுகிறாள்.
இதில், வித்யா என்பது பார்வதி தேவியின் பத்து உருவங்களை குறிக்கும். மகாவித்யா அல்லது தசமகாவித்யைகள் (பதின்பெருவித்தையர்) என்போர், பத்துத் தேவியரின் குழுமம் ஆகும். அளவற்ற கருணையும் எல்லையில்லாக் குரூரமும் கொண்டவர்களாக, பெண்மையின் பெருந்தெய்வமாகிய பார்வதியின் அம்சங்களாக விளங்குகின்ற இவர்கள், காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேசுவரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா என்கின்ற பத்து பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
இதன் பின்ணி...?
தட்சனின் யாகத்திற்குச் செல்ல சதி தேவி, சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவபெருமான் அதை மறுத்தபோது, சதி தேவி கோபமடைந்து காளியாக உருவெடுத்தார். அதைக்கண்டு பயந்த சிவபெருமான் பின்னோக்கி ஓட முயன்றார். சிவனைத் தடுத்து நிறுத்த சதி தேவி, பத்து திசைகளிலும் நின்றபடி பத்து வெவ்வேறு ரூபங்களை வெளிப்படுத்தினார். இந்த உன்னதப் பத்து வடிவங்களே 'தச மகாவித்யா' என்று அழைக்கப்படுகின்றன.
பத்து வடிவங்களின் விபரங்கள்:
காளி - காலத்தைக் கடந்தவள்.பரம்பொருளின் இறுதி வடிவம்.
தாரா - வழிகாட்டி மற்றும் ஆபத்துக்களில் இருந்து காக்கும் தேவி.
திரிபுரசுந்தரி - மூவுலகிலும் பேரழகும், கருணையும் கொண்டவள்.
புவனேஸ்வரி - பிரபஞ்சத்தையும், வெளியையும் தனது உடலாக கொண்ட அன்னை.
பைரவி - அச்சமூட்டும் மற்றும் உக்கிரமான தேவி
சின்னமஸ்தா - தன் தலையை தானே துண்டித்துக் கொண்டு தியாகத்தின் உருவமாயௌ நிற்பவள்.
தூமவதி - புகையின் வடிவானவள். துயரங்கள் மற்றும் வறுமையை நீக்குபவள்.
பகளாமுகி - எதிரிகளின் தீய எண்ணங்களை அடக்கி வெல்லும் சக்தி கொண்டவள்.
மாதங்கி - தாந்திரீக நெறியின் கலைமகள். இசையும் ஞானமும் தருபவள்.
கமலாத்மிகா - தாந்திரீக நெறியின் திருமகள். செல்வமும், அறிவும் வழங்குபவள்.
தச என்றால் பத்து. வித்யா என்றால் அறிவு எனப் பொருள். இந்தப் பத்து தேவிகளும் பெண்மையின் சக்தியை தாய்மை முதல் கோபம் வரை அனைத்து வடிவிலும் காட்டுபவர்கள்.
தசமகா வித்யா தேவிகளின் வருகை, சாக்த மார்க்கத்தில் பக்தி என்ற வழியை காட்டியது. ஆவதுவும் பெண்ணால், அழிவதும் பெண்ணால் என நம்பும் சாக்தர்கள், இந்த பத்து தேவிகளையும் உளமார வழிபட்டனர். தேவி பாகவத புராணத்தின் கடைசி ஒன்பது அதிகாரங்களில் ஏழாவதான சண்டி, சாக்தர்களின் தேவி கீதை ஆனது. இந்த பத்து தேவிகளில் சில தேவியர்கள் தாந்திரிகர்களால் மட்டுமே ஆராதனை செய்யப்படுவர்.
தசமாதேவி பூஜை முறை:
தசமா தேவி கொண்டாட்டம் ஆடி மாத அமாவாசை அன்று ஆரம்பித்து பத்து நாட்கள் தொடரும்.
தசமா தேவியின் களிமண்ணால் ஆகிய சிலையை முதல்நாளே ஆட்டம் பாட்டத்துடன் கொண்டு வந்து வீடு அல்லது பந்தலில் வைப்பார்கள். பிறகு வீடுகளில் இருக்கும் சிலை அல்லது புகைப்படத்திற்கு, குங்குமம் சந்தனமிட்டு மலர்களால் அலங்கரிப்பார்கள். பத்து நாட்கள் பெண்களும், பக்தர்களும் விரதமிருந்து உப்பு இல்லாத உணவு அல்லது பழங்களை, ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள்.
தினமும் தசமா தேவிக்கு இனிப்பு பண்டங்கள், தேங்காய், கோதுமை போன்றவைகளைப் படைத்து சிறப்பு பூஜைகளைச் செய்வார்கள்.
பத்து நாட்களும், பூஜை செய்யும் சமயம், கையில் பத்து முடிச்சுக்களைக் கொண்ட பருத்தி நூலில் செய்யப்பட்ட தசா நூலை (புனித நூலை) கட்டிக்கொண்டு, அன்னையின் கதைகளைப் படிப்பார்கள். இரவு நேரத்தில் கர்பா நடனமாடுவார்கள்.
பத்தாவது நாள் இரவு முழுவதும் விழித்திருந்து, விரதக் கதையைப் படித்தபின் பதினோராவது நாள் காலையில், தசமாதேவி சிலையை ஆறு அல்லது நீர் நிலைகளில் கரைத்து விஜர்ஜன் செய்வார்கள்.
குடும்பத்தில் நல்ல நிலையும், செல்வம் மற்றும் உடல் நலச் செழிப்பும் ஏற்படுவதற்காக தசமாதேவியை வணங்கி வரவேற்று கொண்டாடப்படும் விழா இது.
தசமகா வித்யா ஸ்லோகம்
"காளிதாரா மகாவித்யா
ஷோடசீ புவனேஸ்வரி
பைரவி சமஸ்தாச
வித்யா தூமாவதி ததா
பகலா சித்தி வித்யாச
மாதாங்கீ கமலாத்மிகா
ஏகாதசமகாவித்யாச
சித்தி வித்யா ப்ரகீர்த்திதா! "
நலமும் வளமும் பெற நாமும் தசமா தேவியை மனதார வணங்கி வழிபடுவோம்.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வாழ்வில் உள்ள வறுமை, தடைகள் மற்றும் தீய ஆற்றல்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதியும், அளவில்லாச் செல்வமும், நல்வாழ்வும் பெருகும் தெய்வீக மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.