

வயது 70ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம். எடுத்து வாரிக் கட்டிய முடி. சடை போடவில்லை. நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம்.
இடம்: ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம். காலை 7.30 மணி, சனிக்கிழமை.
தனியாக கோயிலில் வலம் வந்துகொண்டு இருந்தார்.
நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன்.
அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராவதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன். ஏதோ என்னுள் மனசு தவித்துக்கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்கச் செய்தது. கால்கள் நடந்தன.
அவர் வெளிக் கோபுரத்தைப் பார்வையிட்டார். மெதுவாக நடந்தார். பிறகு பின்புறம் உள்ள விமானத்தைப் பார்த்து அதை கேமராவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக்கொண்டார். பிறகு ஒவ்வொரு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே மூன்று நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர்மானியர் என்றும் சொன்னார்.
நான் அவரிடம் அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொள்ளலாம் என நினைத்து ‘ஏதாவது லோக்கல் கைடு (Local Guide) கொண்டு தெளிவு பெறலாமே’ என்று சொன்னவுடன் என்னை ஒரு பார்வை பார்த்தார்.
‘நீ எல்லாம் இந்த மண்ணின் மைந்தன்; என்ன தெரியும் உனக்கு எல்லாம்?’ என்பதுபோல் இருந்தது.
சற்றே சுதாரித்துக்கொண்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தேன் - அவர் தன்னைப் பற்றிய சிறு குறிப்பை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
“நான் ஜெர்மனியில் உள்ள ‘குட்டன் பெர்க்’ என்ற நகரில் இருந்து வருகிறேன்; உங்களுக்குத் தெரிந்து இருக்கும், முதன்முதலில் எழுத்தை காகிதத்தில் அச்சடித்து புரட்சி பண்ணிய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நகரம் அது,” என்றார்.
“ஆமாம்... தெரியும்” என்றேன்.
இதற்கு எதிர்வினையாக, தான் பல சிற்பங்களை ஆய்வு செய்து வருவதாகவும், பல கோயில்களுக்குச் சென்று வந்ததாகவும் கூறினார்.
"இங்கு வருவதற்கு முன்பு திரு.தெய்வநாயகம் (தொல்பொருள் ஆய்வாளர் கரந்தை, தஞ்சை) அவர்களைச் சந்தித்து வந்தேன். அவர் பல குறிப்புகளும், விளக்கங்களுடன் கூடிய புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார்," என்று அவர் சொன்னதும் நான் வாயடைத்து நின்றுவிட்டேன்.
எத்தனை பேருக்குத் தெரியும் தெய்வநாயகம் - தராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலைப் பாரம்பரிய சொத்தாக மாற்ற காரணமாய் இருந்த முன் முதற் சிற்பி என்பது.
வணங்கினேன் என் ஜெர்மானிய நண்பரை. அவர் என்னை தட்டிக்கொடுத்து, "தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் முனைவர் மற்றும் தலைவர் சுபாஷணியின் குழுவில் இணைந்து, பல இடங்களுக்குப் பயணப்பட்டு இருக்கிறேன்," என்று சொன்னவுடன் எனக்கு மயக்கமே வந்துவிடும்போல் இருந்தது.
தமிழ் மேல் உள்ள ஆர்வம் ஒரு ஜெர்மானியரைத் தமிழராக மாற்றி இருக்கிறது.
அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டவை:
1. தமிழர், தமிழர் நாகரிகம், வாழ்வியல், வானவியல், மருத்துவம், உணவு என பல நூல்களை ஜெர்மானிய மொழியில் கற்று வைத்து உள்ளார்.
2. உங்கள் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பங்களில் பல வரலாற்று உண்மைகள் புதைந்து இருக்கின்றன... மகாபாரத போர் ஒரு உதாரணம்,
3. தமிழர்கள் நடனக் கலையில் சிறந்து விளங்கினர் என்பதற்கு, இங்கே உள்ள கலை கல்வெட்டுகளே சாட்சி!
4. கோயில் விமானத்தின் அமைப்பு ஒரு போர் களத்தில் உள்ள தேரைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரை இழுக்க தமிழனின் பிராதன போர் விலங்கான யானைகள்; மேலும் இதன்மீது வாள் ஏந்தி போராடும் பெண்கள் என கூடுதல் சிறப்பு.
அவர் மேலும் தொடர்ந்தார்...
* பண்டைய காலத்தில் (சோழர் காலத்தில்) தமிழர்கள் வாழ்வியலில் பெண்கள் குடும்பத்தில் முதன்மை பெற்றும், வீரத்தோடும், விருப்பப்படியும் வாழ்ந்து பெருமை சேர்த்த பெண் இனம். அவர்களது தன்மானம், தன்னம்பிக்கை, தற்சார்பு பல புராணங்களை ஆங்கிலத்தில் படித்து தெரிந்துகொண்டதாகத் தெரிவித்தார்.
* சோழர் காலத்தில் பெண்கள் ஆண்களைவிட இயல், இசை, நாடகம் ஆகிய பண்பாட்டு தளங்களில் தங்கள் விடையங்களை ஆழப் பதிவு செய்துவிட்டு சென்று உள்ளனர்.
* கல்வி என்பது அறம் சார்ந்தும், பாலியல் என்பது உணர்வு சார்ந்தும் பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆண் மகன்களைத் தேர்வு செய்தும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
* ஆண்கள் கட்டடக் கலையில் சிறந்து விளங்கினர். மேலும் ஆண்களே அரசர்களாகவும், அதிக அளவில் புலவர்களாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* பாலியல் வன்கொடுமைக்கு மாறாக அதைப் பற்றிய ஒரு புரிதல் இருந்தது.
* குழந்தை பிறப்பைச் சிற்பங்களாக பல கோயில்களில் இன்றும் காணலாம்.
* புறம் பேசுவதும், புறமுதுகு காட்டுவதும் ஆண்களுக்கு அழகு அல்ல.
இவ்வாறாக அவர் பேசிக்கொண்டே போனார்...
நான் அவரிடம் ஒன்று சொல்லிவிட்டு வந்தேன்.
"உங்கள் ஆய்வுகளை ஒரு புத்தகமாக வெளியிடும்போது, அதன் ஒரு பிரதியை எனக்கு அனுப்பி வையுங்கள்," என்று சொல்லிவிட்டு என் முகவரியைக் கொடுத்து, மேலும் தபால் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.1000-ஐ அவரிடம் நீட்டினேன்.
முகவரியை பெற்றுக்கொண்ட அவர், இந்தப் பணத்தில் நல்ல பயனுள்ள தமிழ் புத்தங்களை நூல் நிலையத்திற்குப் பரிசளிக்குமாறு சொல்லி என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அந்தச் சமயத்திலேயே எனக்கு தெரிந்தது ஒன்றுதான். நாம் ஒன்றாக சேர்ந்து ஒரு இயக்கத்தை - நூலக இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே?
இந்தக் கால சந்ததியைப் படிக்க வைக்க வேண்டிய மேலான பொறுப்பு நமக்கு அதிகம் இருப்பதாக உணர்கிறேன்.
இரண்டு நிலையில் மனிதன் தன் மனதை ஆட்கொள்கிறான்.
ஒன்று - விளையாட்டு,
இரண்டாவது - வாசித்தல்.
புத்தக வாசித்தல்; நானே இதற்கு ஒரு காரணியாக இருக்க வேண்டும் என்று நினைத்து அனுதினமும் (பிரதி வியாழன் விடுமுறை) எங்கள் வீதி ‘சிவ குருநாதன் செந்தமிழ்’ நூல் நிலையத்திற்குச் சென்று படித்து வருகிறேன்.
அவரே தமிழர்; நான் தமிழனாக மாற முயற்சிக்கும் ஒரு தமிழன்.