

உலகத்தில் அதிகமாக அருந்தப்படும் தண்ணீருக்கு அடுத்தபடியாக இருக்கும் பானம் தேநீர்தான். இந்த தேநீர் தேயிலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தி டிவைன் ஃபார்மர் (The divine farmer) என்றழைக்கப்படும் சீன மன்னன் `ஷேன் நுங் `என்பவரால் கிமு 2700 இல் காபிக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டு பிடிக்கப்பட்டு உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டெது தேயிலை. அத்தகைய தேயிலை வகைகள் இப்பதிவில் காண்போம்.
தேயிலையின் வரலாறு
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தேயிலை மருத்துவ கணம் உள்ள மூலிகையாகவே அறியப்பட்டது. பின்னர் ஜப்பானுக்கும் ஜப்பானிலிருந்து டச்சுக்காரர்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் அறிமுகமானது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தேயிலை 1840 - 50 களில் சோதனை முயற்சியாக இலங்கையில் பயிரிடப்பட்டு தென் கிழக்காசியா ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவியது.
200 ஆண்டுகள் பழமையான தேயிலைத் தொழிலில் இந்தியா உலகில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், நுகர்வு நாடாகவும் இருக்கிறது. பெரும்பாலான தேயிலை அஸ்ஸாம் காடுகளிலும் மற்றவை டார்ஜிலிங், நீலகிரி பகுதிகளிலும் விளைகின்றன.
தேயிலையின் வகைகள்
பதப்படுத்தும் முறையைப் பொறுத்து தேயிலை வொயிட் டீ, கிரீன் டீ, ஊலாங் டீ, பிளாக் டீ என 4 வகையாக பிரிக்கப்படுகிறது. இயந்திரத்தில் குறிப்பிட்ட வெப்ப நிலையில் பறித்த தேயிலையை உலர வைக்கும்போது உடனடியாக `பிளாக் டீ` வெந்து தயாராகி விடுவதால் இதன் உற்பத்தி எப்பொழுதும் அதிகமாக இருக்கும்.
பறித்த தேயிலையை நிழலில் உலர வைத்தே `கிரீன் டீ` பெறப்படுவதால் இதற்கான நேரம் அதிகமாகும் என்பதால் பிளாக் டீயுடன் ஒப்பிடும்போது கிரீன் டீயின் உற்பத்தியும் குறைவாக இருப்பதோடு விலையும் அதிகமாக இருக்கிறது.
`வொயிட் டீ`யை உற்பத்தி செய்ய தேயிலையின் மொட்டுக்களை பறித்து முழுமையாக நிழலில் உலரவைக்க வேண்டும். அதனாலேயே மிகவும் விலை உயர்ந்த தேயிலை வகையாக` வொயிட் டீ` உள்ளது.
`ஊலாங் டீ` யை உற்பத்தி செய்ய பாதி நிழலில் உலரவைத்து பிறகு இயந்திரத்தில் உலர வைக்க வேண்டும். தேயிலை பதப்படுத்தும் முறைதான் வித்தியாசப்படுமே தவிர நான்கு வகை தேயிலைகளும் ஒரே செடியில் இருந்தே பறிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அசாம், இலங்கையில் விளையும் தேயிலை திடமானதாகவும் (ஸ்ட்ராங்க்) டார்ஜிலிங், நீலகிரி பகுதிகளில் விளையும் தேயிலை மிதமானதாகவும் (மைல்டு) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேயிலையின் மருத்துவ குணங்கள்
சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியை அளிக்கும் தேநீரில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் குறைவான கொழுப்பு அளவு இருப்பதால் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன. ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள் தேயிலையில் இருப்பதோடு பற்கள் சொத்தை ஆகாமல் ஃப்ளோரைடு தடுக்கிறது.
இதயம் மற்றும் ஈரல் நோய்களை பிளாக் டீ பருகினால் தடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. சிலவகை புற்றுநோய்கள், அல்சீமர் பிரச்னை மற்றும் இதயநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் கிரீன் டீ குடிப்பதன் மூலம் குறைவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விடாமல் மழை பெய்யும் போதும் புத்தகம் அல்லது பேப்பர் படிக்கும்போதும் தேநீர் பருகுவதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நண்பர்களுடன் இணைந்து குழுவாக அமர்ந்து தேநீர் பருகி மனதில் உள்ளவற்றை பேசி, சிரித்து விளையாடி மகிழ்ந்த நேரத்தை அனுபவித்தவர்கள் யாரும் வாழ்நாளில் மறக்கமாட்டார்கள்.
சந்தையில் கிடைக்கும் பல்வேறு தேநீர் ரகங்களின் வித்தியாசங்களை உணர்ந்து, உங்கள் உடலின் ஆரோக்கியத் தேவைகளுக்கு ஏற்ப கிரீன் டீ அல்லது பிளாக் டீயை சரியான முறையில் தேர்வு செய்து பருகும் தெளிவைப் பெறுவீர்கள்.