

உலகின் உயரமான மலைத்தொடர்களில் ஒன்றான இமயமலை, ஆசியாவின் பல நாடுகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது. ஆனால், இப்போது அதே இமயமலை ஒரு புதிய அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு, கண் இமைக்கும் நேரத்தில் பெரும் வெள்ளமாக மாறி உயிர்களையும், வீடுகளையும், பாலங்களையும் அடித்துச் சென்றது. இது ஒரு தனிப்பட்ட இயற்கைப் பேரிடரா அல்லது எதிர்காலத்துக்கான எச்சரிக்கையா என்ற கேள்வியை உலகம் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்திலும், சீனாவின் திபெத் பகுதியில் உள்ள எல்லைப் பகுதிகளிலும் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட இமயமலை பேரழிவு ஏற்படுத்தியது. உயரமான மலைப்பகுதியில் பனி, பாறை மற்றும் பனிப்பாறைத் தொகுதி சரிந்து ஆற்றுப் பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்தது.
அதன் வேகம் மற்றும் அளவு காரணமாக, நீர் மட்டுமின்றி சேறும் பாறைகளும் மரங்களும் கட்டிட இடிபாடுகளும் சேர்ந்து பயங்கரமான வெள்ளப்பெருக்காக மாறின. பல கிராமங்கள் சேற்றுக்குள் புதைந்தன. முக்கியமான சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் நேபாளம்–சீனா எல்லை வர்த்தகப் பாதைகளும் கடுமையாக சேதமடைந்தன.
இந்த பேரிடரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் மிகவும் கடினமான சூழலில் நடைபெற்று வருகின்றன. மலைப்பாதைகள் துண்டிக்கப்பட்டதாலும், சேறும் இடிபாடுகளும் அதிகமாக இருப்பதாலும் மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதே சவாலாகியுள்ளது.
இந்த நிகழ்வின் முக்கியமான அம்சம், செயற்கைக்கோள் படங்களில் பேரழிவுக்கு சில நாட்களுக்கு முன்பே அந்த பனிப்பாறை–பாறைத் தொகுதி வேகமாக நகர்ந்ததற்கான அறிகுறிகள் தெரிந்ததாக விஞ்ஞானிகள் கூறுவதுதான்.
இதனால், இமயமலைப் பகுதிகளில் செயற்கைக்கோள் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கான விரைவான தகவல் தொடர்பு மிகவும் அவசியமாகிறது.
புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் சுருங்குவதும், மலைப்பகுதிகளில் நிலைத்தன்மை குறைவதும் இதுபோன்ற அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இது நேபாளத்துக்கோ திபெத்துக்கோ மட்டும் உரிய பிரச்சினை அல்ல. இமயமலையைச் சார்ந்த இந்தியா, பூடான் போன்ற நாடுகளுக்கும் இது முக்கியமான எச்சரிக்கையாகும்.
இத்தகைய பேரிடர்களைத் தடுக்க முடியாவிட்டாலும், அதன் பாதிப்பைக் குறைக்க முடியும். அதற்காக ஆபத்தான பனிப்பாறைகள், பனிச்சரிவு பகுதிகள் மற்றும் உயரமான மலை ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆபத்து கண்டறியப்பட்டால், கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சில நிமிடங்களுக்குள் எச்சரிக்கை சென்றடையும் வகையில் நவீன தகவல் தொடர்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகள், கிராமங்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் நீர்மின் திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கும் பேரிடர் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
இமயமலைப் பகுதிகளில் சுற்றுலா மற்றும் கட்டுமானப் பணிகள் அதிகரித்து வரும் நிலையில், ஆற்றங்கரைகள் மற்றும் அபாய மண்டலங்களில் கட்டிடங்கள் அமைப்பதை கட்டுப்படுத்துவதும் அவசியம்.
செயற்கைக்கோள் தரவுகள், வானிலை ஆய்வுகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒன்றிணைத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்னும் சிறப்பாக அமையும். ஒரே நாட்டின் முயற்சி போதாது என்பதால், இமயமலையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு கூட்டாக செயல்பட வேண்டும். அப்போதுதான் எதிர்கால உயிரிழப்புகளை கணிசமாகக் குறைக்க முடியும்.
இந்த சம்பவம் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் உலகின் கவனத்துக்கு கொண்டு வந்து உள்ளது.. பேரிடர் ஏற்படுவதற்கு முன்பே அதை அடையாளம் காண முடியுமா என்பது தான் அது.. செயற்கை கோள் படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பேரழிவுக்கு சில நாட்களுக்கு முன்பே மலைப் பகுதியில் இருந்த பனிப்பாறை மற்றும் பாறைத் தொகுதி வேகமாக நகர்ந்தற்கான அறிகுறிகளை கண்டறிந்துள்ளனர்.
இது போன்ற மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்தால் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படக் கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். மேலும் இமயமலையில் உருவாகும் மாற்றங்கள் அந்த மலைப்பகுதிகளில் மட்டுமே முடிந்து விடுவதில்லை. அங்கிருந்து உருவாகும் ஆறுகள் இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடையவை.
எனவே பனிப்பாறைகள் உருகுதல், பனிச்சரிவு, நிலச்சரிவு, திடீர் வெள்ளம் போன்றவற்றை ஒருங்கிணைத்து கண்காணிக்க வேண்டும்.. இதற்காக அண்டை நாடுகள் தங்களிடம் இருக்கும் செயற்கை கோள் தகவல்கள், வானிலைத் தரவுகள் மற்றும் ஆபத்து குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக தொலைதூர மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு செல்போன் எச்சரிக்கை, சைரன், வானொலி போன்ற பல்வேறு வழிகளில் தகவல் சென்றடைய வேண்டும். பேரிடர் வந்த பிறகு மீட்புப் பணிகளை தொடங்குவதை விட , பேரிடர் வருவதற்கு முன்பே மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதே சிறந்த வழியாகும்.
இந்த பேரழிவு இயற்கையின் மாற்றங்களை அலட்சியப்படுத்துவதன் விலையை உலகுக்கு உணர்த்தி உள்ளது.. வளர்ச்சி என்ற பெயரில் ஆபத்தான மலைச் சரிவுகளில் கட்டுமானங்களை அதிகரிப்பதும், இயற்கை நீர் வழிகளை மறைப்பதும் எதிர் கால ஆபத்தை மேலும் அதிகரிக்கலாம். இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கான திட்டமிடலே இனி அவசியம்.
இயற்கையை வெல்ல மனிதனால் முடியாது; ஆனால் அதன் அறிகுறிகளை கவனித்து உயிர்களைக் காப்பாற்ற முடியும். நேபாளம் – திபெத் பேரிடர், இமயமலையின் மாற்றங்களை இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கான வலிமையான எச்சரிக்கை.