

இன்றளவும் இந்தியர்கள் மத்தியில் வைரம் மீதான ஒரு பயம் உள்ளது. வைரம் பழிவாங்கும் அல்லது துரததிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. இதற்கு உதாரணமாக, உலகப் புகழ்பெற்ற இந்தியாவுக்கு சொந்தமான கோஹினூர் வைரம் (Kohinoor Diamond) பயணித்த கதையைக் கூட சொல்கின்றனர். ஏழு நூற்றாண்டுகள், பல சிம்மாசனங்களை கடந்த அரச குடும்பங்களை அழித்த வைரம். இவை அனைத்தும் தற்செயலாக நடந்ததா அல்லது வைரத்தின் விளைவுகளா? என்று ஆராய்வதை விட சுவாரசியம் மிகுந்த அந்த வரலாற்று பயணத்தைப் பார்ப்போம்.
கோஹினூர் பிறந்த கதை:
13 ஆம் நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய வைரமான கோஹினூர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் கிடைத்தது. இந்த வைரம் பட்டை தீட்டப்பட்டு காகத்திய அரசர்களின் கைகளுக்கு சென்றது. அவர்கள் தங்களின் குலதெய்வமான பத்ராட்சி அம்மன் கோயிலுக்கு அர்ப்பணித்து இருந்தனர்.
14 ஆம் நூற்றாண்டில் காகத்திய நாட்டின் மீது படையெடுத்த மாலிக் கபூர் பெருஞ்செல்வத்தை கொள்ளையிட்டதோடு கோஹினூர் வைரத்தையும் கொண்டு சென்று அலாவுதீன் கில்ஜியிடம் கொடுத்தான். அதை தொடர்ந்து நடந்த போரில் காகத்திய ராஜ்ஜியமும் முடிவுக்கு வந்தது.
கோஹினூரின் பழி வாங்கும் படலம்:
அலாவுதீன் கில்ஜி கோஹினூர் வைரத்தை (Kohinoor Diamond) தன் வெற்றியின் சின்னமாக வைத்திருந்தார். கோஹினூர் வைரம் கிடைக்கப்பட்ட சில வருடங்களில் அலாவுதீன் இறந்து போனார். அவரது இறப்புக்கு பின்னர், மாலிக் கபூர், அலாவுதீன் மனைவியும் ராணியுமான மல்லிகா-இ-ஜஹானைச் சிறை வைத்து துன்புறுத்தினான். மேலும், அலாவுதீனின் மகன்களான கிசிர் கான் மற்றும் ஷாதி கான் ஆகியோரின் கண்களை குருடாக்கி விட்டு, அவர்களின் இளைய சகோதரன் 6 வயது ஷிகாபுதீன் உமரை பொம்மை சுல்தானக்கி, ஆட்சியை மாலிக் கபூரே வழிநடத்தினான்.
இது நடந்த 36 வது நாளில் மாலிக் கபூர் படுகொலை செய்யப்பட்டான். அதன் பின்னர் சிறுவன் சுல்தான் ஷிகாபுதீன் உமர் கொலை செய்யப்பட்டு அவரது சகோதரர் மற்றும் பாதுகாவலரான முபாரக், டெல்லி சுல்தானாக முடிசூட்டிக் கொண்டார். ஆயினும் ஆட்சிக்கு வந்த 4 வருடங்களில் முபாரக்கை அவரது நண்பரான குஸ்ரூ கான் கொலை செய்து ஆட்சியைப் பிடித்தார். இதனுடன் அலாவுதீன் கில்ஜியின் வம்சமும் மொத்தமாக அழிந்து போனது.
துக்ளக் வம்சம் அழிவு:
குஸ்ரூ கானை கொலை செய்து விட்டு, கியாசுதீன் துக்ளக் கோஹினூர் வைரத்துடன் டெல்லி சுல்தானாக பதவி ஏற்றார். சில வருடங்களிலேயே சந்தேகத்திற்கு இடமான வகையில் அவரது மகன் முகமது பின் துக்ளக்-ஆல் கொல்லப்பட்டார். முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் நாடு நிலைத்தன்மை இழந்து வறுமையில் வாடியது. அவரது சகோதரர் பீரோஸ் ஷா துக்ளக் ஆட்சியில் டெல்லி நகரம் மோசமான முறையில் தைமூரினால் கொள்ளையடிக்கப்பட்டு டெல்லி முழுக்க ரத்த ஆறு ஓடியது.
அதன் பின்னர் டெல்லியின் ஆட்சி மற்றும் கோஹினூர் வைரம் (Kohinoor Diamond) சையதுகளின் கைகளுக்கு சென்றது. இவர்களின் 37 ஆண்டு கால ஆட்சியில் 4 சுல்தான்கள் ஆட்சியில் அமர்ந்தனர். இறுதி சுல்தான் ஆலம் ஷா நாட்டை விட்டு தானாக வெளியேறினார். அதன் பின்னர் லோடி வம்சம் ஆட்சியை பிடித்து கோஹினூர் வைரத்தினை கைப்பற்றினர்.
முகலாயர்கள் வசம்:
லோடி வம்ச அரசரிடமிருந்து கோஹினூர் வைரம் முகலாய சுல்தான் பாபரால் கைப்பற்றப்பட்டது. பாரசீக மன்னர் நாதிர்ஷாவால் கைப்பற்றும் வரை முகலாயர்களின் குடும்பத்தில் ஏராளமான கொலைகளையும், வன்முறைகளையும் அது பார்த்து விட்டது. முகலாய வம்சத்தினையும் அது அழித்து விட்டது.
பாரசீகத்தில் கோஹினூரின் விளையாட்டு:
மயில் அரியணையுடன் கோஹினூர் வைரத்தை நாதிர்ஷா ஈரான் கொண்டு சென்றார். ஒருநாள் தூங்கும் போது அவர் கொலை செய்யப்பட்டார். நாதிர் ஷாவின் பேரன் ஷாரோக் ஷா கைகளுக்கு கோஹினூர் வைரம் சென்றது. வைரத்தை தர மறுத்ததால் அவரது உறவினர்கள் அவரின் கண்களை குருடாக்கினர். அதன் பின்னர் ஆப்கானிய ஆட்சியாளர் ஷா ஷுஜா துரானியின் கையில், அணியும் காப்பில் கோஹினூர் பதிக்கப்பட்டது. அவரது ஆட்சியும் சரிந்தது; தன்னை காப்பாற்றிக் கொள்ள கோஹினூர் வைரத்தை மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் துராணி ஒப்படைத்தார்.
சீக்கிய பேரரசு வீழ்ச்சி:
மகாராஜா ரஞ்சித் சிங் மறைவிற்கு பின் அவரது மகன் கரக்சிங், அவரது பேரன் நௌநிஹால் சிங் ஆகியோர் மர்மமான முறையில் இறந்தனர். இதனால், ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் அந்த வைரம் சிறுவனான மகாராஜா துலீப் சிங்கிடம் சென்றது. அவரை பிரிட்டிஷ்காரர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி ஆட்சியை பறித்து ஐரோப்பாவில் வறுமையில் வாட விட்டனர்.
பிரிட்டன் வசம் சென்ற கோஹினூர்:
1849 ஆம் ஆண்டு துலிப் சிங்கிடம் இருந்து பறிக்கப்பட்ட கோஹினூர் விக்டோரியா ராணிக்கு சென்றது. பின்னர் ராணி அலெக்ஸாண்ட்ரா, ராணி மேரி மற்றும் ராணி எலிசபெத் ஆகியோரின் கிரீடங்களில் பாதிக்கப்பட்டது. பெண்களிடம் இருக்கும் போது கோஹினூர் உயிர்ப்பலிகளை வாங்கவில்லை என்றாலும் சாம்ராஜ்ஜியத்தை அழித்தது.
பிரிட்டனின் வீழ்ச்சி:
கோஹினூர் பிரிட்டன் வசம் சென்றதில் இருந்தது பிரிட்டன் தொடர்ச்சியாக போரில் தோற்றது. காலணி நாடுகளில் இருந்து தொடர்ச்சியாக விரட்டப்பட்டது. அதன் வல்லரசு அந்தஸ்து அமெரிக்காவிற்கு சென்றுவிட்டது. பல கண்டங்களில் இருந்த பிரிட்டன் ராணியின் ஆட்சி அனைத்து இடங்களிலும் முடிவுற்றது. இறுதியாக சார்லஸ் மனைவி கமிலாவின் கிரீடத்தில் கோஹினூர் பதிக்க முடிவு செய்தபோது, அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். கோஹினூர் சாபம் மீதான பயமோ? என்னவோ?