
பெருங்கற்கால மக்கள் காலக்கணிப்புக்குப் பயன்படுத்திய அமைப்பினை, ‘பெருங்கல் சவுக்கை' என்கின்றனர். இந்தப் பெருங்கல் அமைப்பானது, இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பழனியிலும், இங்கிலாந்து நாட்டில், கோர்ன்வால் மாகாணத்திலும், இத்தாலியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலுள்ள சவுக்கையிலும் சில மாறுபாடுகள் காணப்பட்டாலும், கல்லின் நடுவிலோ, கல்லமைப்பின் நடுவிலோ ஒரு வட்டப் பொந்து காணப்படுகிறது.
தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயிருக்கும் ஆண்டிப்பட்டி ஊராட்சியின் மலைப்பகுதியில் ஒரு பெருங்கல் சவுக்கை உள்ளது. இந்தச் சவுக்கையின் படி, ஒரு ஆண்டின் ஆரம்பத்தையும், அரைப்பகுதியையும், முடிவையும் எளிமையாகக் கணித்தனர். சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் ஆறு மாத காலப் பயணத்தை, தெற்கு நோக்கிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்காகச் செல்லும் ஆறு மாத காலப் பயணத்தை வடக்கு நோக்கிய காலம் என்றும் கூறுவர். இச்சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் தென்மேற்காக ஊடுருவியதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பழனியில் உள்ள சவுக்கை மூன்று கற்களை ஆய்த எழுத்து போன்ற தோற்றத்தில் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள சவுக்கையின் அமைப்பு வேறுபட்டுக் காணப்படுகிறது.
ஆம், இங்கிலாந்து வழக்கில் இந்தச் சவுக்கையை மென்-அன்-டோல் (Men an Toll) என அழைக்கின்றனர். இது கார்னிசு மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்குவியல் ஆகும். ஆனால், இந்தச் சவுக்கைகள் தமிழகத்தில் உள்ளது போல் ஒன்றாக அல்லாமல் 20 சவுக்கைகள் ஒரு வட்டவடிவில் வரிசையாக அமைந்திருக்கின்றன. மேலும், துவாரம் ஒரே கல்லில் துளைக்கப்பட்டுள்ளதுடன், துவாரக்கல்லின் இரு பக்கத்திலும் இரண்டு குத்துக்கற்கள் நிற்கின்றன. அவற்றை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்க்கும் போது 101 என்னும் எண்ணை சுட்டுவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சவுக்கையை பயன்படுத்தியே பண்டைய இங்கிலாந்து மக்கள் தங்கள் நாட்காட்டியை உருவாக்கினர் என்று கருதப்படுகிறது.