
விதவிதமான புடவைகளை அணிவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. அனைத்து ரக புடவைகளையும் கட்டி அழகு பார்க்க வேண்டும் என்பது பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று. அதிலும் பாரம்பரிய புடவைகளுக்கு மதிப்பே தனிதான். அந்த வகையில் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் மதுபானி சேலைகளின் சிறப்பினை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பீகாரின் மிதிலா நகரத்தை பிறப்பிடமாகக் கொண்ட மதுபானி பெயிண்டிங், இந்திய கலைகளில் பிரபலமான ஒன்று. இராமாயாணத்தில் ஜனக மஹாராஜா தனது மகள் சீதாவின் திருமணத்திற்கு ஓவியர்களை வரவழைத்து மதுபானி ஓவியங்களை வரைய வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. முதலில் சுவர்களையும், தரையையும் அலங்கரித்த இவ்வகை ஓவியங்கள் மெல்ல காகிதங்கள் மற்றும் துணிகளில் இடம் பெற ஆரம்பித்தன.
இவ்வகை ஓவியங்கள் பெரும்பாலும் ஏதாவது கருப்பொருளை விளக்கும் விதமாகவே வரையப்படுகின்றன. கிருஷ்ணர், ராமர், லஷ்மி, சிவன், துர்கா, சரஸ்வதி, சூரியன் மற்றும் சந்திர உருவங்களானது முக்கிய பாத்திரங்களாக வரையப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் ஜியோமெட்ரிகள் மற்றும் மேத்தமேட்டிகல் வடிவங்களும் மதுபானி ஓவியத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன.
இவ்வகை ஓவியங்கள் சேலைகளில் இடம் பெறும் போது அவற்றை மக்கள் பெரிதும் விரும்பி வாங்குவதற்கான காரணம், அதன் எளிமை மற்றும் இயற்கையான மூலப்பொருள்களான அரிசித்தூள், மஞ்சள், மகரந்தத்தூள், அவுரி இலைச்சாறு பல்வேறு பூக்கள், சந்தனம் மற்றும் தாவரங்கள் மற்றும் மரங்களின் இலைகளிலிருந்து பெறப்பட்ட வண்ணங்களை கொண்டு ஓவியம் தீட்டப்படுவதுமாகும். இவ்வகை வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாக இருப்பதுடன் பளிச்சென்றும் காட்சியளிக்கின்றன. மேலும், ஓவியங்களை வரைய, பிரஷ்களுக்கு பதிலாக குச்சிகள் (தாவர), தீக்குச்சிகள் மற்றும் விரல்களையும் பயன்படுத்தப்படுகிறார்கள்.
மதுபானி ஓவியங்களானது காட்டன் மற்றும் சில்க் சேலைகளில் மிகவும் அற்புதமாக தீட்டப்பட்டு, பெண்களால் பெரிதும் விரும்பி வாங்கக்கூடிய சேலையாகவும் உள்ளது. இக்கத் மற்றும் மதுபானி ஓவியங்களை கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் பிரத்யேகமான சந்தேரி சேலைகளும் அற்புதம். தூய டஸ்ஸர் சில்க் சேலைகளில் மதுபானி ஓவியங்கள் தீட்டப்பட்டு, காட்டன் சில்க்கில் உருவாக்கப்படும் சேலைகளும் அழகோ அழகு. உடல் நிறம் கருப்பு, பார்டர் மற்றும் முந்தியானது இரத்தச் சிவப்பு இதில் ஆங்காங்கே கோல்டன் மற்றும் சிவப்பு நிறங்களில் மதுபானி ஓவியங்களைக் கைகளால் தீட்டி தயாரிக்கப்படும் சேலைகளை திருமண வரவேற்பு மற்றும் பார்டிகளுக்கு அணிந்து சென்றால் அனைவரின் கவனமும் நம் பக்கம் திரும்பும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
சேலையின் மேற்புறம் மதுபானி ஓவியங்கள் சேலையின் கீழ்ப்புறம் இக்கத் பார்டர்களுடன் ஆரஞ்சு மற்றும் கருமை நிறத்தில் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கைத்தறி கோட்டா சேலைகளில் உடல் ஒரு நிறம், பார்டர் ஒரு நிறமாக இருக்க முந்தியில் மட்டும் மதுபானி ஓவியங்கள் அச்சிடப்பட்டு இணைக்கப்பட்டிருப்பது புதுமையாகவும் அழகாகவும் உள்ளது.
இப்போதெல்லாம் புடவைகள் அழகான மதுபானி டிசைன்களை டிஜிட்டல் முறையில் பிரிண்ட் செய்து தயாரிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் மதுபானி புடவைகள் சமகால நாகரீகத்துடன் அழகாக இணைந்து, கலை வடிவம் வளரவும் நவீன நாகரீகத்துடன் உருவாகவும் வழிவகுப்பதால், வட இந்திய பெண்களை மட்டுமல்லாமல் தென்னிந்திய பெண்களையும் கவரும் ஒரு புடவையாக மாறிவிட்டது.