'புலிகுத்தி பட்டான் நடுகல்' - புலியைக் கொன்ற வீரனுக்கு 'புலிமங்கலம்' பாராட்டு விழா!

A man fighting a tiger
A man fighting a tiger
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

புலியைக் கொன்ற வீரனுக்கு அக்காலத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழாவின் பெயர் ‘புலிமங்கலம்’ எனப்படுகிறது. அதாவது, புலியைக் கொன்ற வீரனை புலி மேல் அமர்த்திப் பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பூமாலைகளும், பரிசுகளும் தந்து பாராட்டி விழா எடுப்பர். கிருட்டிணகிரி மாவட்டத்தில், மல்லசந்திரம், மகராசாகடை அருகில் பூதிக்குட்டை, கந்திலி மலை, பாண்டவர் பண்டா போன்ற சில இடங்களில் புலியைக் கொன்ற காட்சிகள் பாறை ஓவியங்களாகக் கிடைத்துள்ளன.

புலியிடமிருந்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளைக் காக்க போராடி இறந்த வீரரை, புலிகுத்தி பட்டான் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். புலிகுத்தி - புலி தாக்கி பட்டான் - இறந்துபட்டான் என்பதன் சுருக்கம் என்று கொள்ளலாம். கால்நடைகளைக் காப்பாற்றப் புலியுடன் போராடி இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. சேலம் மேற்குப் பகுதியில், இந்த நடுகல்லினை 'புலிகுத்தி பட்டான் நடுகல்' என்கின்றனர். பல்வேறு இடங்களில் புலிகுத்தி இறந்த வீரரைத் தங்கள் குல தெய்வமாகக் கொண்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலை மீது அமைந்துள்ள ‘மாசி பெரியசாமி’ இதற்கான உதாரணமாகும்.

இதேப் போன்று, தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், செங்கமாரி என்னும் ஊரில் செங்கமாரி புலிகுத்திஅம்மன் கோயில் அமைந்துள்ளது. மேலும், புலிகுத்தி கருப்புசாமி, புலிகுத்தி பெரியசாமி, புலிகுத்தி சீரங்கன் எனும் பெயர்களில் குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகின்றன.

முந்தையக் காலத்தில் புலிகுத்தி நாணயமும் பயன்பாட்டிலிருந்திருக்கிறது. இந்த நாணயத்தின் முன்புறம், ஒரு வீரன் காலை மடக்கிய நிலையில், தன்னை நோக்கிப் பாயும் புலியை எதிர்த்துச் சண்டை போட்டு, அதன் வயிற்றுக்குள் கத்தியைப் பாய்ச்சும் காட்சி உள்ளது. நாணயத்தின் பின்புறத்தில், நடுவில் ஒரு குத்துவாள், அதன் மேலும் கீழும், ’ராம ரா’ என, நாகரி வடிவில் எழுதப்பட்டு உள்ளது. வீரனின் வீரத்தை போற்றவோ, முன்பே இறந்து வழிபடும் தெய்வமாக மாறிய, ஒரு புலிகுத்தியின் நினைவாகவோ, இந்த நாணயத்தைத் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் வெளியிட்டு இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
“ஆள் பார்த்து ஆடுற குரங்கு, புலி முன்னால் ஆடுமா?”
A man fighting a tiger

தமிழகத்தில், மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே எஸ்.பெருமாள்பட்டியிலும், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் உள்ள சீதேவி அம்மன் கோவில் பிரகாரத்திலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகே கொளத்தூர் கிராமத்திலும், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மலையமான் கோயில் அருகேயும், சேலம் மாவட்டம் அறுநூற்று மலை பகுதியிலும், சேலம் நகர், அம்மாப்பேட்டை சாலையிலும் புலிகுத்தி வீரன் நடுகற்கள் இருக்கின்றன.

புலியுடன் மோதி உயிர் விடும் வீரனின் மரபு வழியினர், தங்களின் பெயருக்கு முன்பாக, புலிகுத்தி என்ற சிறப்பு பெயரைச் சேர்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டில் எம். முத்தையா இயக்கத்தில் புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் தலைப்பில் புலிகுத்தி பாண்டி என்று இருந்தாலும், அத்திரைக்கதையில் புலியால் இறந்த வீரன் குறித்த கதை எதுவும் இடம் பெறவில்லை. மதுரை மாவட்டத்தில் புலிகுத்தி பாண்டி, புலிகுத்தி கருப்புசாமி என புலிகுத்தி வீரர்களைச் சிறு தெய்வங்களாக வணங்கி தங்கள் குழந்தைகளுக்கு பெயரிடும் முறைக்குச் சான்றாக இத்திரைப்பட பெயர் இடம் பெற்றது என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
Tippu's Tiger - இந்த புலி கடிக்காது; ஆனால்...
A man fighting a tiger
logo
Kalki Online
kalkionline.com