நம் நாடு பன்முகக் கலாசாரம், பல்வேறுபட்ட உணவுகளுக்கு பெயர் பெற்றது. காலத்திற்கேற்ப பல்வேறு உணவுகள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. தற்போது அனைவருக்கும் விருப்பமான உணவாக இருக்கும் மோமோஸ் உலகம் முழுவதும் அனைவருக்கும் பிடித்த உணவாக உலகப் பட்டியலில் இருக்கிறது.
கோதுமை மற்றும் மைதா மாவில் இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்டவற்றை உள்ளே வைத்து ஆவியில் வேகவைத்து சைவம், அசைவம் என இரு வகைகளில் இந்த உணவு சமைக்கப்படுகிறது. இந்த மோமோஸ் இந்தியா வந்த வரலாற்றினைத் தெரிந்து கொள்வோம்.
மோமோஸின் தாயகம்: மோமோஸின் தாயகம் திபெத் மற்றும் நேபாள நாடாக இருக்கலாம் எனக் கருதப்படுவதோடு, 14ம் நூற்றாண்டில் தோன்றியது எனவும் கூறப்படுகிறது. நேபாளத்தில் வசித்து வந்த நெவார் இன மக்கள் அனைத்து பகுதிகளிலும் வணிகம் செய்து வந்தனர். வணிகத்தின் பொருட்டு இவர்கள் திபெத்திற்கு சென்றனர்.
அந்தப் பயணங்களின்போது கறி மற்றும் காய்கறி போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்தனர். அப்போதுதான் இந்த மோமோஸ் உணவு முறையைக் கண்டுபிடித்துள்ளனர். நேபாளத்தில் இருக்கக்கூடிய காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய நெவார் இன மக்களிடையே இந்த உணவு மிகவும் பிரபலமாக இருந்து வந்துள்ளது.
வணிகத்திற்காக திபெத் செல்லும்பொழுது மாவுக்கு உள்ளே உருளைக்கிழங்கு, பாலாடைகள் அல்லது மாட்டிறைச்சி உள்ளிட்டவற்றை நிரப்பி கட்டி வைத்து சென்றுள்ளனர். பயணத்தின் பொழுது அதனை சாப்பிடுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும் என்பதற்காக இந்த உணவை பயன்படுத்தி உள்ளனர். திபெத் மற்றும் நேபாளத்தில் இருந்த இந்த உணவு பழக்க வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் எல்லை பகுதிக்குள் நுழைந்தது.
இந்தியாவில் மோமோஸ்: 1960ம் ஆண்டு இந்தியாவின் எல்லைப் பகுதியாக இருந்த தர்மசாலா, சிக்கிம் டார்ஜிலிங் போன்ற வடகிழக்கு பகுதிகளில் மெல்ல மோமோஸ் உள்ளே நுழைந்தது . வணிகத்திற்காக இந்தியா வந்த நேபாளர்கள், இந்திய சமையல் கலைஞர்களுக்கு இந்த உணவு முறையை சொல்லிக் கொடுத்துள்ளனர். நேபாளத்தில் மிகுந்த சுவையுடனும் தனித்துவமாகவும் இருந்து வந்தது போலவே, அதே செய்முறை இந்தியாவிலும் பின்பற்றப்பட்டு சாப்பிடப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல இந்தியாவின் சிற்றுண்டிகளில் ஒன்றாக மோமோஸ் மாறிவிட்டது.
அதன் பின்னர் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் நுழைந்த இந்த மோமோஸ் இடத்திற்கு ஏற்ப மாற்றங்களோடு தனித்தனி உருவம் எடுத்தது. இந்தியாவின் கங்கைப் பகுதிக்குள் நுழைந்தபோது சைவ உணவாக மாறி. சைவ இந்துக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும். அசைவ பிரியர்கள் இறைச்சி பயன்படுத்துவதை நிறுத்தவில்லை.
காலத்திற்கு ஏற்ப மாற்றம் கண்டு அனைத்து நாடுகளிலும் பரவிக் கிடக்கும் மோமோஸ் அந்தந்த நாட்டின் சுவைக்கு ஏற்ப வெவ்வேறு விதங்களில் தயாரிக்கப்பட்டு, ஆனால் உலகம் முழுவதும் அனைவராலும் சாப்பிடப்படும் உணவாக மாறிவிட்டது. இந்தியாவில் சிறு தானியங்களில் மோமோஸ் செய்து சாப்பிடுவது தற்போது பிரபலம் அடைந்து வருகிறது.