

புருனே நாட்டின் சுல்தான் 1946-ம் ஆண்டு பிறந்தார். 1967-ல் 29-வது சுல்தானாக பதவி ஏற்றுக்கொண்டார். 1984 முதல் புருனே நாட்டின் பிரதமராகவும் உள்ளார். ராணுவம், நிதி, வெளியுறவு, காவல்துறை என அனைத்தையும் இவர் ஒருவரே கவனித்து வருகிறார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார். ஆடம்பரமான வாழ்க்கைக்கு அதிபதியாக உள்ளார்.
இதற்கு காரணம் இந்த நாட்டில் கிடைக்கும் அபரிதமான பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு. இவருக்கு பல மனைவிகள் இருந்தாலும் தற்போது மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார்!
இந்த நாட்டின் ஆல் இன் ஆல் அழகுராஜா இவர்தான். இவரின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து 46 ஆயிரம் கோடி ஆகும்.
புருனே நாடு என்பது போர்னியா தீவில் உள்ள ஒரு குட்டி நாடாகும். இதன் தலைநகர் பந்தர் செரி பெகவான் ஆகும். இவரது குடும்பமே ஆடம்பர வாழ்க்கைக்காக பிறந்த கூட்டமாகும். ஏனோ இறைவன் இந்த குடும்பத்தை மட்டும் ஆடம்பரமாக வாழ்வதற்காக படைத்து விட்டான் போலும்.
இவருக்கு ஐந்து மகன்களும் 7 மகள்களும் உள்ளனர். இவர் வசிக்கும் நூருல் இமான் அரண்மனை உலகின் மிகப்பெரிய அரண்மனையாக கருதப்படுகிறது. கின்னஸ் புத்தகத்தில் இந்த அரண்மனை இடம்பெற்றுள்ளது. இந்த அரண்மனையின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 57,782 சதுர அடி. சுமார் 27 ஆயிரம் கோடியில் சொர்க்க பூமியாக அமைந்துள்ளது. அரண்மனையின் மதிப்பு 37 ஆயிரம் கோடி ஆகும்.
இதில் 1788 அறைகள், 257 குளியல் அறைகள், 5 நீச்சல் குளங்கள், 5000 பேர் அமரக்கூடிய மண்டபம், 1500 பேர் அமரக்கூடிய மசூதி, 120 கார்கள் நிறுத்தும் இடம் போன்ற வசதி உள்ளது.
இவர் ஒரு ஆடம்பரமான கார் பிரியர். இவரிடம் 600 ரோல்ஸ் ராய்ஸ் கார், 450 ஃபெராரி கார்கள், 380 பென்ட் லேஸ் கார்கள் என மொத்தம் 7000 கார்கள் உள்ளன. கார்கள் மதிப்பு மட்டும் 41 ஆயிரம் கோடி ரூபாய். ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் முழுவதும் தங்கத்தால் ஆனது. எனவே இந்த கார் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர மூன்று 747 போயிங் விமானம், ஆறு சிறிய விமானங்கள் வைத்துள்ளார். 545 கோடி மதிப்புள்ள போயிங் விமானம் ஒரு பறக்கும் அரண்மனை போன்று உள்ளது. இந்த விமானத்தின் உள்பகுதி முழுவதும் 650 கோடி செலவில் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. இவை தவிர ரெண்டு ஹெலிகாப்டர்கள் இவர் கைவசம் உள்ளது.
இவர் தன் மகளின் பிறந்த நாளுக்காக ஏர்பஸ் 340 ரக விமானத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது உலகிலேயே விலை உயர்ந்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது.
இவர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர் ஆவார். 1996-ம் ஆண்டு தனது ஐம்பதாவது பிறந்தநாளை உலகமே வியக்கும் வண்ணம் கொண்டாடினார். அதற்கு அவர் செலவிட்ட தொகை 250 கோடி. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 3,000 பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விலை உயர்ந்த தங்க காசுகள் வழங்கப்பட்டது.
மைக்கேல் ஜாக்சன் நடனத்திற்கும் அவர்கள் இசைக் கச்சேரிக்கும் 140 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. தனது மூத்த மகள் திருமணத்திற்கு அமெரிக்க பாடகி விட்னி ஹூஸ்டனை (Whitney Houston) வரவழைத்து 51 கோடி ஊதியம் வழங்கினார். இவர் போலோ விளையாட்டில் சிறந்தவர். இவரிடம் 200 குதிரைகள் உள்ளன. அந்த 200 குதிரைகளும் தங்குவதற்கு குளிர்சாதன வசதிகள் கொண்ட அறைகள் கட்டிக் கொடுத்தார்.
இவருடைய தம்பி ஜெப்ரி என்பவரும் ஒரு ஆடம்பர பிரியர். அவர் மூலம் இவர் சில சொத்துக்களை இழக்க வேண்டி வந்தது. இருந்தாலும் மன்னன் அசரவில்லை. இவரது ஆடம்பர வாழ்க்கையை மக்கள் யாரும் விமர்சிக்க கூடாது. அது அரச குற்றமாகும். இங்குள்ள மக்களும் வெளிநாட்டவர்களும் வசதியாக வாழ்ந்ததால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சுல்தான் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார்கள்.
உலகில் உள்ள வல்லரசு நாட்டுத் தலைவர்கள் கூட இந்த அளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியாது. ஒரு குட்டி நாட்டின் தலைவர் இந்த அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்தார்.
இவர் முடி வெட்டிக்கொள்ள 18 லட்சம் செலவு செய்வார். லண்டனில் இருந்து சிகை அலங்கார நிபுணர் தனி விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு அவர் தான் இவருக்கு சிகை அலங்காரம் செய்து விடுவார்.
இந்த நாட்டின் பரப்பளவை எடுத்துக் கொண்டால் ஈரோடு மாவட்டத்தை விட சிறியதாகத் தான் இருக்கும். மொத்த ஜனத்தொகை நாலு லட்சத்து 60 ஆயிரம். இதில் 80% இஸ்லாமியர்கள், ஏழு சதவீதம் பௌத்தர்கள், ஏழு சதவீதம் கிறிஸ்தவர்கள், ஐந்து சதவீதம் மற்ற சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கு பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாய்வு அபரதமாக கிடைக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரம் பீப்பாய் பெட்ரோல் கிடைக்கிறது. உலகில் கடனே வாங்காத நாடு என்றால் அது புருனே நாடாகத்தான் இருக்கும். ஐநாவில் 159-வது உறுப்பு நாடாக இந்த புருனே சேர்ந்துள்ளது.
எப்படி பிறந்தாலும் எப்படி இறந்தாலும் கடைசியில் ஆறடி நிலம் தான் சொந்தம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. புருனே சுல்தான் தேவலோகத்தில் பிறக்க வேண்டியவர். இந்த பூமியில் தேவேந்திரனாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்!