இறந்தவர்கள் எங்கே? காணாமல் போனவர்கள் எங்கே? பெண்டுலம் கொண்டு பதிலளித்த பிரெஞ்சு பாதிரியார்!

Abbe Alexis Mermet
Abbe Alexis Mermet
Published on

உலகையே வியக்க வைத்த அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் (Abbe Alexis Mermet) என்னும் பிரான்சைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரியார், ஒரு அதிசய மனிதர். நவம்பர் 11, 1866 அன்று பிறந்த இவர், வெறும் ஒரு பெண்டுலம் கொண்டு நம்ப முடியாத பல சாதனைகளைச் செய்து காட்டினார். இக்கலைக்கு அவர் ரேடிஸ்தீசியா (Radiesthesia) எனப் பெயரிட்டார்.

மெர்மட்டின் கொள்கை மிகவும் சுவாரஸ்யமானது. அதாவது ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட 'ரேடியேஷன்' எனப்படும் கதிர்வீச்சு அலைகள் உண்டு என்று மெர்மட் நம்பினார். இந்த அலைகளை உணர்ந்து, பெண்டுலம் மூலம் எதையும் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும் என்று உறுதியாகக் கூறினார்.

மர்மங்களை அவிழ்த்த ரேடிஸ்தீசியா

மெர்மட்டின் திறன், போலீசாருக்கு பெரும் உதவியாக இருந்தது. ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், அவர் பயன்படுத்திய ஒரு பொருளை மட்டும் மெர்மட்டிடம் கொடுத்தால் போதும். அந்தப் பொருள் வேறு யாராலும் பயன்படுத்தப்படாததாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. அதைக் கொண்டு, குற்றவாளி எங்கே இருக்கிறார் என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார் மெர்மட்.

இதேபோல், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் வந்தால், அவர்களின் உடல் உறுப்புகளின் மீது பெண்டுலத்தைப் பயன்படுத்தி நோயின் தன்மையைத் துல்லியமாகக் கண்டறிவார். அதற்கேற்ற சிகிச்சையையும் அவர் பரிந்துரைப்பார். இவருடைய ரேடிஸ்தீசியா முறை இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டு, ஐரோப்பா முழுவதும் இவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 6 ரகசியங்கள்: இதை அவமானமாக நினைக்காதீர்கள்!
Abbe Alexis Mermet

மலைக்கு அடியில் மறைந்திருந்த நதி

மெர்மட்டின் சாதனைகளில் ஒன்று, நிலத்தடியில் உள்ள பெட்ரோல் இருப்பைக் கண்டுபிடித்தது. ஆனால், அனைவரையும் வியக்க வைத்த சாதனை, ஒரு பெரிய நதியைக் கண்டுபிடித்ததுதான்.

Abbe Alexis Mermet
Abbe Alexis Mermet

பிரான்ஸ்-இத்தாலி எல்லையில் உள்ள மாண்ட் ப்ளாங்க் மலையின் அடியில், ஒரு நிமிடத்திற்கு 50,000 காலன் நீர் பாயும் ஒரு பிரம்மாண்டமான நதியைக் கண்டறிந்தார். சலீவ் மற்றும் ஜுரா ஆல்ப்ஸ் மலைகளுக்கு இடையே 75 முதல் 150 அடி ஆழத்தில் ஓடிய அந்த நதிக்கு, இயாக்ஸ்-பெல்லஸ் (Eaux-Belles) என்று பெயரிடப்பட்டது. இந்த அரிய கண்டுபிடிப்பு உலகெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மாற்றம்

காலம் காலமாக நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கும் "டௌசர்"களுக்கு (dowsers) ஒரு புதிய அந்தஸ்தை மெர்மட் ஏற்படுத்தித் தந்தார். நிலத்தடியில் புதைந்திருக்கும் கனிம வளங்களையும் கண்டறிய இவரது ஆற்றல் பெரிதும் உதவியது.

இதையும் படியுங்கள்:
இருட்டறையில் வளர்க்கப்படும் முளைப்பாரியின் ரகசியம்!
Abbe Alexis Mermet

முதல் உலகப்போர் முடிவடைந்த பிறகு, பலர் தங்கள் டெபாசிட்டுகள் எங்குள்ளன என்றும், காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் கேட்டு இவரை நாடி வந்தனர். தூரத்தில் உள்ளவற்றையும் பார்க்கும் டெலி ரேடிஸ்தீசியா என்ற கலையைப் பயன்படுத்தி மெர்மட் பலருக்கும் உதவினார்.

ரேடிஸ்தீசியாவின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி, "Principles and Practice of Radiesthesia" என்ற புத்தகத்தையும் மெர்மட் எழுதியுள்ளார். செப்டம்பர் 7, 1937 அன்று மறைந்த அப்பே அலெக்ஸிஸ் மெர்மட், உலகம் கண்ட அதிசய மனிதர்களுள் ஒருவராய்த் திகழ்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com