

1. மக்கள் வசிக்காத பேச்சில்லாக் கிராமங்கள்!
இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் வறட்சி, பஞ்சம், வெள்ளம் மற்றும் போர் உள்ளிட்ட காரணங்களினால் குடியிருப்புகள் அழிந்து, அங்கிருந்த மக்கள் வேறிடம் சென்று விட்ட காரணத்தினால் அந்த ஊர்கள் அழிந்து விடுவதுண்டு. ஆனால், அந்த ஊரைச் சார்ந்த விளை நிலங்கள் மட்டும் ஒரு கால கட்டம் வரை உலக வழக்கிலும், அந்த ஊரின் பெயரிலேயேப் பயன்பாட்டில் இருந்து வருவதுண்டு. இது போன்ற ஊர்களை, ‘பேச்சில்லா கிராமம்' என்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், பேச்சில்லா கிராமம் என்பது மக்கள் வசிக்காத, ஆவணங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ள ஊர்களைக் குறிக்கிறது.
தமிழில், ‘பேச்சில்லா கிராமம்’ என்று சொல்லப்படுவதைப் போன்று இந்தியாவின் பிற பகுதிகளில் ஆட்கள் வசிக்காத, இத்தகைய கைவிடப்பட்ட ஊர்களை, இந்தி மொழியில் ‘பே-சிராக்’ கிராமங்கள் என்கின்றனர். இதற்கு, ’விளக்கேற்றப்படாத ஒளியிழந்த ஊர்கள்’ என்று பொருள்.
உதாரணமாக, மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே விருதுநகர் செல்லும் வழியில் உள்ளது வேலாம்பூர் எனும் கிராமம். வேலாம்பூரை தலைமையாகக் கொண்டு வருவாய்த்துறையின் கீழ் சில கிராமங்கள் இயங்குகின்றன. உள்ளாட்சி அமைப்பிலும், இந்த ஊராட்சிக்கு வேலாம்பூர் என்ற பெயர் இருக்கிறது. ஆனால், இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கு சாட்சியாக, கட்டட இடிபாடுகள், கோயில்கள் உள்ளன. இங்கிருந்த குடும்பங்கள் அனைத்தும் இடம் பெயர்ந்து சென்றதால், இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. ஆகையால், இந்த ஊர் ‘பேச்சில்லா கிராமம்’ என்று ஆகிவிட்டது.
தமிழ்நாட்டில் வேலாம்பூரைப் போன்று பல பேச்சில்லாக் கிராமங்கள் இருக்கின்றன. மன்னர்கள் படையெடுப்பு, இயற்கைப் பேரழிவு, பஞ்சம், கொடிய நோய்கள் போன்ற பல காரணங்களால் ஊர்களின் பெயர்கள் மட்டும் ஆவணங்களில் இருக்கின்றன. ஆனால், அக்கிராமங்களில் வசிப்பதற்குத்தான் ஆட்களில்லை. இது போன்ற பேச்சில்லாக் கிராமங்களில் இருந்து வெளியேறிச் சென்றவர்கள், ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, தங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்த கோயில்களுக்கு வந்து விழா எடுத்து வழிபட்டுச் செல்கின்றனர்.
இதுபோன்ற பேச்சில்லாக் கிராமங்களில் அல்லது அவற்றின் அருகில் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டால், பேச்சில்லாக் கிராமங்கள் உயிர்த்தெழும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள பல பேச்சில்லாக் கிராமங்களுக்குப் புத்துயிரூட்ட இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
2. நகரும் கற்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மனிதன் அல்லது எந்தவொரு விலங்கின் தலையீடின்றி, கற்கள் அல்லது பாறைகள் ஒரு நீண்ட நேரான பாதைத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாட்டை நகரும் கற்கள் அல்லது அலையும் கற்கள் அல்லது நகரும் பாறைகள் (Sailing Stones) என்கின்றனர்.
இத்தகைய நிகழ்வுகள் ரேஸ்ட்ராக் பிளாயா, சாவுப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. இத்தகைய இடங்களில் கற்கள் நகர்ந்ததற்குரிய சுவடுகளும், நகர்ந்த கற்களும் நிழற்படமாகப் பிடிக்கப்பட்டுள்ளன. கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக உள்ளது. எனினும், இதனைப் பற்றிய ஊகங்களும் கோட்பாடுகளும் பல்வேறாக உலா வருகின்றன.
பொதுவாக, கற்கள் அசைவதற்கு;
ஈரப்பதமான ஆனால் நீரால் நிரம்பாத மேற்பரப்பு,
மெல்லிய களிமண் படலம்,
தொடக்க நிலை அசைவிற்கான விசையாக மிக்க வன்மையான காற்று,
கற்களைத் தொடர்ச்சியாக அசைப்பதற்கு வலிமை கொண்ட நிலையாக உள்ள தொடர்ச்சியான காற்று போன்றவைகளேக் காரணமாக இருக்கின்றன.
ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை மேற்காணும் பகுதிகளில் கற்கள் நகர்கின்றன. கரடுமுரடான அடிப்பகுதியைக் கொண்ட கற்கள் வரிகள் கொண்ட சுவட்டை உருவாக்குகின்றன. சில வேளைகளில் கற்கள் கவிழ்ந்து, அதன் வேறொரு முனை நிலத்தைத் தொட்டு அதன் தடப்பாதை திசை மாறுகின்றது. கற்களைப் பொறுத்து, சுவடுகள் திசையிலும் நீளத்திலும் வேறுபாடு கொண்டவையாக உள்ளன.
ஒன்றாகப் புறப்படும் இரு கற்கள் சில குறிப்பிட்ட தூரம் வரை ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் இடம், வலம் எனத் திசை மாறுகின்றன. சில வேளைகளில் வந்த வழியேத் திரும்பவும் நகர்தலும் உண்டு. ஒரே அளவிலான இரண்டு கற்கள் வெவ்வேறு தூரத்தை அடைவதுமுண்டு.