854 வெண்கலத் துண்டுகளால் ஆன உலகின் மிக உயரமான விநாயகர் சிலை!

தாய்லாந்தில் சச்சோங்சாவோவிலுள்ள க்ளோங் குவான் கணேஷ் பன்னாட்டுப் பூங்காவில், உலகிலேயே மிக உயரமான விநாயகர் சிலையாக, 39 மீட்டர் உயரமுள்ள நின்ற நிலையிலான விநாயகர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
Vinayagar statue Thailand
Vinayagar statue ThailandImage Credit: shreeganesh.com
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி, தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து நாட்டுக் கலாச்சாரத்திலும் விநாயகர் ஈர்க்கப்பட்டிருக்கிறார். தாய்லாந்தில் வெற்றி, அறிவு மற்றும் பாதுகாப்பின் கடவுளாகக் கருதப்படுகிறார். விநாயகரது உருவம் கோயில்களில் மட்டுமின்றி, வீடுகள், கல்வி நிறுவங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் இடம் பெற்றிருக்கிறது. அங்குள்ள மக்கள், தங்களது வாழ்வு செழிக்க வேண்டுமென்பதற்காக விநாயகரை வழிபட்டு வருகின்றனர். விநாயகருக்கான விழாக்கள் மற்றும் சடங்குகள் என்று அனைத்தும் கொண்டாடப்படுகின்றன.

தாய்லாந்தில் சச்சோங்சாவோவிலுள்ள க்ளோங் குவான் கணேஷ் பன்னாட்டுப் பூங்காவில், உலகிலேயே மிக உயரமான விநாயகர் சிலையாக, 39 மீட்டர் உயரமுள்ள நின்ற நிலையிலான விநாயகர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை கட்டுமானம் செய்யப்பெற்ற இச்சிலை 2012 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

பேங் பகோங் ஆற்றின் மீது கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த விநாயகர் சிலை 40 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில், 854 வெண்கலத் துண்டுகளால் கட்டப்பட்டு உயர்ந்து நிற்கிறது. இந்த விநாயகர் சிலை, சாலை வழியாகவும், நதி வழியாகவும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் தெரியும் நிலையில் அமைந்திருக்கிறது. தற்போது இந்தச் சிலை தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அடையாளமாகவும் மாறியிருக்கிறது.

இந்த விநாயகர் சிலையின் நான்கு கைகளில் கரும்பு, பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் மாம்பழம் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இந்த நான்கு பொருட்களும் தாய்லாந்தின் வளர்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களைக் குறிக்கின்றன. இந்த சிலை நின்ற நிலையிலிருந்தாலும், அவரது கால் சிறிது முன்னோக்கி அடியெடுத்து வைப்பது போன்று அமைந்திருக்கிறது. இது நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது, அதே வேளையில், இச்சிலையில் தலையில் அணிந்திருக்கும் தாமரை கிரீடம் ஞானத்தை பிரதிபலிக்கிறது. தலைக்கு மேலே அமைந்திருக்கும் புனிதமான ‘ஓம்’ சின்னம் ஒரு பாதுகாவலராக அவரது பங்கை வலுப்படுத்துகிறது. பொதுவாக, இந்த விநாயகர் சிலை தாய்லாந்தின் செழிப்புடன் தொடர்புடைய ஆழமான அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்தச் சிலையினை வடிவமைத்தக் கலைஞர் பிடக் சலூம்லாவ்.

இதையும் படியுங்கள்:
கவிதை: சிந்தை நிறைந்த ஒருவராம்… சிவன் மகனார் விநாயகர்!
Vinayagar statue Thailand

உலகின் மிக உயரமான விநாயகர் சிலை அமைந்திருக்கும் சாச்சோங்சாவ் எனுமிடம் பாங்காக்கிலிருந்து கிழக்கே சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாங்காக்கின் ஹுவா லாம்போங் தொடருந்து நிலையத்திலிருந்து சச்சோங்சாவ் தொடருந்து சந்திப்பு நிலையத்தை அடையலாம். இதே போன்று, பாங்காக்கின் எக்கமாய் மற்றும் மோ சிட் முனையங்களிலிருந்து சாச்சோங்சாவோவுக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாங்காக்கிலிருந்து வாடகை மகிழுந்துகளின் மூலமாகவும் தரை வழியாகவும் இங்கு செல்லலாம்.

இதையும் படியுங்கள்:
விநாயகருக்கு முதன் முதலில் மோதகம் படைத்து, அவரது அருளைப் பெற்றது யார்?
Vinayagar statue Thailand

சாச்சோங்சாவிலிருக்கும் க்ளோங் குவான் கணேஷ் பன்னாட்டுப் பூங்காவிற்குள்ளிருக்கும் விநாயகர் சிலையைப் பார்வையிடுவதற்குத் தாய்லாந்து மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் தாய்பாட் (THB) 100 நுழைவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.270/ ஆகும்.

இனி தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், உலகின் மிக உயரமான விநாயகர் சிலையையும் பார்த்துத் திரும்பலாம்.

logo
Kalki Online
kalkionline.com