

குழந்தைப் பருவம் முதலே தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், மற்றும் ரோஸ்மேரி (Rosemary) அல்லது பிரிங்க்ராஜ் (Bhringraj) என ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவதொரு எண்ணெய் இடம் பிடித்திருக்கும். இந்த எண்ணெய்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடி உதிர்வைக் குறைத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன.
தலைமுடிக்கு தினமும் எண்ணெய் தடவி வந்தாலும் முடி வளர்ச்சிக்கு காலை நேரத்தில் எண்ணெய் தேய்ப்பது சிறந்ததா? அல்லது மாலை நேரத்தில் தேய்ப்பது சிறந்ததா? என்ற குழப்பம் பலருக்கும் அடிக்கடி எழுவதுண்டு.
பொதுவாக காலை நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்ப்பது தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் என்று சிலர் நம்புகின்றனர்.
அதே நேரம் மற்றும் சிலர் இரவில் தலைக்கு நன்றாக எண்ணெய் தேய்த்துவிட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்திருப்பதால் முடியின்வேர் வரை ஊட்டச்சத்து கிடைக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, முடி வகை, தேய்க்கும் நேரத்தை பொறுத்து தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் மாறுபடும்.
பொதுவாக எண்ணெய் தேய்ப்பது முடி உலர்வடைவதை குறைப்பதுடன் முடி வேர்களையும் வலுப்படுத்தும். அதிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு எண்ணெய் தேய்த்து மெதுவான மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சிக்கு உதவும். மேலும் எண்ணெய் தேய்ப்பது முடி உடைதல் மற்றும் பிளவு ஏற்டாமல் தடுப்பதுடன் கூந்தல் வறட்சி அடையாமலும் பாதுகாக்கும். ஆனால் அதற்கு எண்ணெய் தேய்த்தால் மட்டும் போதாது. அதனுடன் சேர்த்து சீரான உணவு, நிறைய தண்ணீர் குடிப்பது, நல்ல உறக்கம், மன அழுத்தமின்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு ஆகியவை முக்கியமானவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலர்ந்த அல்லது சேதமடைந்த முடி உள்ளவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவி நன்றாக ஊறவைத்து காலையில் குளிக்கலாம். அதுவே எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் காலை நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு குளிப்பது பாதுகாப்பானது.
குறிப்பாக தினமும் முடிக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. வாரத்திற்கு இரண்டு அல்லது 3 முறை தலைக்கு எண்ணெய் தடவினால் போதும்.
காலை நேரமா, இரவு நேரமோ, எந்த நேரத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்பதைவிட தொடர்ச்சியான பாரமரிப்பே முடி வளர்ச்சிக்கு உதவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
காலை நேரம்: உங்களுக்கு இரவு முழுவதும் எண்ணெய் வைப்பதில் விருப்பம் இல்லை என்றால், குளிப்பதற்கு 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் முன்பாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். எண்ணெய் தேய்த்து 30 முதல் 60 நிமிடங்கள் கழித்து குளிப்பது, தலைமுடியை வறட்சியிலிருந்து பாதுகாத்து, அதிகப்படியான பிசுபிசுப்பு மற்றும் முகப்பரு போன்ற பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது. இது முடி உதிர்வைக் குறைத்து, கூந்தலுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.
குறிப்பாக காலை நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும் ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. தலைமுடிக்கு ஈரப்பதம் (hydration) கிடைத்து, முடி வறட்சியடைவது குறைகிறது.
அதேசமயம் முடிக்கு எண்ணெய் தேய்த்து விட்டு நீண்ட நேரம் வெளியில் சென்றால் தூசி, மாசுக்கள் முடியில் ஒட்டும் அபாயம் உண்டு. தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்துவிட்டு ஷாம்பு உபயோகித்து குளிப்பவர் களுக்கு காலையில் எண்ணெய் தேய்ப்பது ஏற்றது.
இரவு நேரம் : இரவு தூங்குவதற்கு முன் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு காலையில் குளிப்பது நல்லது. இது முடி வறட்சியைத் தடுத்து, வேர்களுக்கு ஆழ்ந்த ஊட்டமளிக்கும். எனினும், எண்ணெயை 8 முதல் 10 மணி நேரத்திற்கு மேல் தலையில் வைத்திருப்பது அழுக்கை ஈர்த்துவிடும்.
இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்க்கும் போது எண்ணெய் நீண்ட நேரம் தலையில் படிந்திருந்து முடிக்கு ஊட்டமளிக்கும். இரவு முழுவதும் எண்ணெய் தலையில் ஊறும்போது, அது முடியின் வேர்க்கால்கள் வரை சென்று வறட்சியைத் தடுத்து மென்மையாக்கும். முடிக்குத் தேவையான பளபளப்பைத் தருகிறது. தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது நரம்புகளைத் தளர்த்தி, மன அமைதியைத் தந்து நல்ல உறக்கத்தைப் பெற உதவும். எண்ணெய்கள் கூந்தலுக்கு ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கி, சூரிய கதிர்கள் மற்றும் காற்று மாசுவால் முடி சேதமடைவதைத் தடுக்கும்.
உங்கள் தலைமுடி மிகவும் வறண்டதாக இருந்தால், இரவில் எண்ணெய் தேய்ப்பது மிகவும் நல்லது. அதுவே எண்ணெய் சருமம் (Oily scalp) மற்றும் முகப்பரு பிரச்சினை உள்ளவர்கள் இரவு முழுவதும் எண்ணெய் தடவித் தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது; இது சருமத் துளைகளை அடைத்துவிடக்கூடும். இதனால் பொடுகு பிரச்னை அதிகரிக்கலாம்.
காலை, இரவு எந்த நேரத்திலும் முடிக்கு எண்ணெய் தேய்ப்பது நல்லது என்றாலும் முடி வளர்ச்சிக்கு இரவு நேரத்தில் எண்ணெய் தேய்த்து, மறுநாள் காலையில் தலைக்குக் குளிப்பதே மிகச் சிறந்த முறையாகும். இதனால் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் ஆழமாக உறிஞ்சப்பட்டு, ஆரோக்கியமான முடி வளர்ச்சி கிடைக்கும்.
ஆனால் எண்ணெய் தேய்த்தவுடன் முடியை மிகக் கடினமாகத் தேய்க்கவோ அல்லது இறுக்கமாகக் கட்டவோ கூடாது. மேலும், தலைக்குக் குளிப்பதற்கு முன் சீப்பு கொண்டு முடியை மெதுவாகச் சீவுங்கள்.
அதுமட்டுமின்றி, உங்களது தலைமுடியின் வகை (எண்ணெய் பசை, வறண்ட முடி அல்லது சாதாரண முடி) மற்றும் நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் எண்ணெயின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தே உங்களுடைய முடியின் ஆரோக்கியம் மேம்படும்.