

புதிதாகத் தாயான பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் என்பது மகிழ்ச்சியும், அதே சமயம் உடல் ரீதியான சோர்வும் நிறைந்த ஒரு காலகட்டமாகும். இந்த நேரத்தில் அவர்கள் அதிகம் விரும்புவது சௌகரியமான ஆடைகளைத்தான். அந்த வகையில் காலம் காலமாகப் பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே உடை நைட்டி மட்டுமே. அதிலும் தற்காலத்தில் பாலூட்டும் வசதிக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஃபீடிங் நைட்டிகள்' (Feeding nighty) சந்தையில் குவிந்து கிடக்கின்றன.
மார்பகப் பகுதியில் ஜிப் அல்லது பட்டன்கள் வைக்கப்பட்ட இந்த ஆடைகள், தாய்மார்களுக்குப் பாலூட்டுவதை எளிதாக்குவதாக நம்பப்படுகிறது. ஆனால், மருத்துவர்கள் இந்த வகையான ஜிப் வைத்த நைட்டிகளைப் பயன் படுத்துவது குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
குழந்தையின் சருமம்!
பாலூட்டும் நைட்டிகளில் வைக்கப்பட்டுள்ள ஜிப்கள் பெரும்பாலும் உலோகம் அல்லது கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. பச்சிளம் குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது. தாய் குழந்தையை அணைத்துப் பால் கொடுக்கும்போது, அந்த ஜிப் குழந்தையின் மென்மையான கன்னத்திலோ அல்லது நெற்றியிலோ உராய்ந்து கீறல்களை உண்டாக்க வாய்ப்புள்ளது.
குழந்தை பால் குடிக்கும் அவசரத்திலோ, பசியிலோ இருக்கும்போது, இந்த உராய்வு அவர்களுக்கு எரிச்சலை ஊட்டும். இதனால் குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அழத்தொடங்கும். தாய்மார்கள் இதை உணராமல் குழந்தை ஏன் அழுகிறது என்று குழம்பிப் போவார்கள்.
சரியான பிடிப்பு கிடைக்காது!
ஜிப் அல்லது மேலிருந்து கீழாக இருக்கும் பட்டன் வைத்த ஆடைகளில் மற்றொரு சிக்கலும் உள்ளது. தாய்மார்கள் பால் கொடுக்கும்போது, ஆடையின் திறந்த பகுதியை ஒரு கையால் பிடித்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் குழந்தையை இரண்டு கைகளாலும் அணைத்துப் பிடிக்க முடியாது. குழந்தையின் தலை மற்றும் உடல் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்பது பாலூட்டும் முறையின் அடிப்படை விதி.
ஆனால் ஜிப் வைத்த ஆடைகள் குறுகிய இடைவெளியை மட்டுமே தருவதால், குழந்தையால் முழுமையாக மார்பகத்தைப் பற்றிக்கொள்ள முடியாது. இது குழந்தைக்குப் போதுமான பால் கிடைப்பதைத் தடுப்பதோடு, காற்று குமிழ்களை விழுங்கச் செய்து வயிற்று வலியை உண்டாக்கும்.
சிறந்த உடை?
அப்படியானால் என்ன ஆடை அணிவது என்ற சந்தேகம் பலருக்கும் எழும். பழைய காலத்தில் அணிந்தது போலச் சேலை மற்றும் ஜாக்கெட் அணிவது சிரமமாக இருக்கலாம். அதற்கு மிகச்சிறந்த மாற்றாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது முன்பக்கம் பட்டன் வைத்த சட்டைகளைத் தான். குறிப்பாகப் பருத்தித் துணியால் ஆன சட்டைகள் அல்லது ஆண்கள் அணியும் சட்டை போன்ற வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
இதில் பட்டன்களை முழுமையாகத் திறந்துவிட முடியும் என்பதால், தாய் தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தித் தாராளமாகக் குழந்தையை அணைத்துப் பால் கொடுக்க முடியும். குழந்தையின் சருமத்திற்கும் இது பாதுகாப்பானது.
நவீன வசதிகள் நம் வேலையை எளிதாக்கலாம், ஆனால் அவை எப்போதும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது. ஃபீடிங் நைட்டிகள் பார்ப்பதற்கு அழகாகவும், வசதியாகவும் தோன்றினாலும், குழந்தையின் நலன் என்று வரும்போது அவை தவிர்க்கப்பட வேண்டியவையே.