

சந்தனப் பொடியில் நடக்கும் கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி? அசல் சந்தனத்தை அடையாளம் காண எளிய வழிமுறைகள் மற்றும் சரும பாதுகாப்பு குறிப்புகள்
மஞ்சள், குங்குமம் போல தமிழர்களின் பாரம்பரிய அழகு மற்றும் ஆன்மீகப் பழக்கவழக்கங்களில் சந்தனத்திற்கு எப்போதுமே தனி இடமுண்டு. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், முகப்பருக்களை விரட்டவும், சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரவும் சந்தனம் பெரிதும் உதவுகிறது.
ஆனால், சந்தன மரங்களின் அரிதான நிலை மற்றும் அதன் மிக உயர்ந்த விலை காரணமாக, இன்றைய சந்தையில் அசல் சந்தனத்திற்குப் பதிலாக போலி சந்தனத்தின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
சந்தனத்தின் பெயரில் விற்கப்படும் பெரும்பாலான பொடிகள் மற்றும் எண்ணெய்கள், சாதாரண மரத்தூள்கள், ரசாயன வாசனை திரவியங்கள் மற்றும் செயற்கை நிறமிகளைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
சில நேரங்களில், குறைந்த தரம் வாய்ந்த வேறு மரங்களின் தூள்களுடன், கடுமையான நறுமணமூட்டிகள் கலக்கப்பட்டு சந்தனம் போல விற்கப்படுகிறது.
இந்த போலிக் பொருட்களைப் முகத்தில் பூசுவதால், சந்தனம் தரும் நன்மைகளுக்குப் பதிலாக ஒவ்வாமை (Allergy), அரிப்பு, சருமம் சிவந்து போதல் மற்றும் கடுமையான முகப்பரு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அசல் சந்தனத்தை எளிய முறையில் பரிசோதிப்பது எப்படி?
அசல் சந்தனப் பொடியை எளிதில் அடையாளம் காண சில எளிய வழிகள் உள்ளன.
1. நிறம்: முதலாவதாக, அதன் நிறத்தைக் கவனிக்க வேண்டும். அசல் சந்தனப் பொடியானது வெளிர் பழுப்பு (Light Brown) அல்லது மந்தமான மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். ஒளிரும் பிரகாசமான மஞ்சள் நிறத்திலோ அல்லது வெண்மையாகவோ இருக்காது. கடைகளில் விற்கப்படும் சில சந்தனப் பொடிகள், மஞ்சள்தூள் அல்லது செயற்கைச் சாயம் சேர்க்கப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் விற்கப்படுகின்றன; அவை பெரும்பாலும் போலிகளே.
2. நறுமண சோதனை: இரண்டாவதாக, நறுமணத்தை வைத்து உண்மையான சந்தனத்தை கண்டறியலாம். அசல் சந்தனத்தின் வாசனை மிகவும் மென்மையாக, அமைதியான, இயற்கையான மரத்தின் மணத்தைக் கொண்டிருக்கும்.
மாறாக, போலிச் சந்தனப் பொடிகள் மூக்கைத் துளைக்கும் அளவுக்குக் கடுமையான ரசாயன வாசனை அல்லது பெர்ஃபியூம் வாடையைக் கொண்டிருக்கும். இந்த செயற்கை வாசனையானது சில நிமிடங்களிலோ அல்லது பாக்கெட்டைத் திறந்த உடனேவோ மறைந்துவிடும் தன்மை கொண்டது.
3. நீர் சோதனை: மூன்றாவதாக, நீர் பரிசோதனை மிகவும் அவசியமானது. அசல் சந்தனப் பொடியை சிறிதளவு எடுத்துத் தண்ணீரோ அல்லது ரோஸ் வாட்டரோ சேர்த்து உரசிப் பார்த்தால், அது வழவழப்பான, மென்மையான பேஸ்ட் போல மாறும். மேலும், கைவிரல்களில் தேய்க்கும்போது லேசான எண்ணெய் பசைத் தன்மை அதில் தெரியும். ஆனால் போலிப் பொடியானது சொரசொரப்பாகவோ அல்லது தண்ணீரில் முழுமையாகக் கரைந்து நுரை தள்ளுவதாகவோ இருக்கும்.
சருமப் பராமரிப்பில் ஏமாறாமல் இருக்க செய்ய வேண்டியவை:
அதிசய விலையை நம்ப வேண்டாம்: அசல் சந்தனம் என்பது விலை உயர்ந்தது. ஒரு கிலோ சந்தனம் மிகக் குறைந்த விலைக்குக் கிடைத்தால், அது நிச்சயமாகப் போலியானது அல்லது கலப்படம் செய்யப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பொடிகளுக்குப் பதிலாக கட்டைகளை வாங்குவது நலம்: அசல் சந்தனக் கட்டைகளை வாங்கி நாமே சாந்தாக உரைத்துப் பயன்படுத்துவது மிகச்சிறந்த பாதுகாப்பான முறையாகும்.
நம்பகமான பிராண்டுகள்: அரசு அங்கீகாரம் பெற்ற கூட்டுறவு நிறுவனங்கள், பாரம்பரியக் கடைகள் அல்லது சான்றளிக்கப்பட்ட பிராண்டட் நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே வாங்குங்கள். தெரியாத பிராண்டுகளின் பொடிகளைத் தவிர்ப்பது நல்லது.
பேட்ச் டெஸ்ட்: புதிய சந்தனப் பொடியை முகத்தில் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, கையின் மணிக்கட்டுப் பகுதியில் சிறிதளவு தடவி 24 மணி நேரம் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. ஏதேனும் எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் அதைப் பயன்படுத்த வேண்டாம்.
விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே போலிகளிடம் ஏமாறாமல் நமது சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.