
தன்னுடைய குளிர்கால உணவுத் தேவைக்காக, கோடைக்காலத்தில் ஒரு லட்சம் பைன் மர விதைகளைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் அதிசயப் பறவை கிளார்க் நட்கிரேக்கர் (Clark's Nutcracker). இப்பறவையினைச் சில நாடுகளில் கிளார்க் காகம் என்றும், கிளார்க் மரங்கொத்தி என்றும் அழைக்கப்படுகிறது. கார்டீடா குடும்பத்தைச் சேர்ந்த பாஸிட்டரின் பறவைகளில் ஒன்றான இதன் யூரேசிய உறவுப் பறவையான நட்ரக்ராகரை விடச் சற்று சிறியது.
இது கருப்பு மற்றும் வெள்ளை நிற இறக்கைகள் மற்றும் நடு வால் இறகுகளைத் (வெளிப்புறமாக வெள்ளை இருக்கும்) தவிர, உடல் பகுதி சாம்பல் நிறத்தைக் கொண்டதாக இருக்கும், இதன் கால்கள் கருப்பு நிறமுடையவை. இந்த பறவைக்கு வில்லியம் கிளார்க் என்ற பறவை ஆராய்ச்சியாளரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இப்பறவையினை மேற்கு வட அமெரிக்காவில் பிரித்தானிய கொலம்பியாவில் இருந்து மேற்கு ஆல்பர்டாவிலும், பாஜா கலிஃபோர்னியாவின் வடக்கிலும், நியூ மெக்ஸிகோவின் மையத்திலும் காணலாம்.
இவை முதன்மையாக மலைகளில் 900 முதல் 3,900 மீட்டர் (3,000 முதல் 12,900 அடி) உயரமான பகுதிகளில் உள்ள ஊசி இலைக்காடுகளில் காணப்படுகிறன.
இனப்பெருக்கக் காலம் தவிர, மற்றக் காலங்களில் நட்கிரேக்கர் இரை தேடித் தாழ்வான பகுதிகளை நோக்கிப் பறந்து கொண்டேயிருக்கும். இதற்காக நீண்ட தூரப்பயணம் செய்யும் இது, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் இலினொய் மாகாணம் வரையிலும் கூட கீழிறங்கிப் பறந்து வரும் என்கின்றனர்.
பைன் மரத்திலிருந்து கிடைக்கும் விதைகளே இப்பறவையின் முதன்மை உணவாக இருக்கிறது. கோடைக்காலம் தொடங்கியவுடன் இரைதேடிப் புறப்படும் நட்கிரேக்கர் பறவைகள், பைன் மரத்தின் பழங்களைத் தன் அலகால் சிதைத்து, உடைத்து, அதன் விதைகளைச் சேகரித்துக்கொள்கிறன.
குளிர்காலம் முழுமைக்கும் தேவையான அளவு விதைகளைச் சேகரித்துக் கொண்டுபோய், தன் வசிப்பிடத்தின் அருகே ஓரிடத்தில் 1 முதல் 15 விதைகள் வீதம் கிட்டத்தட்ட 30 ஆயிரம் இடங்களில், ஒரு லட்சம் வரையிலான விதைகளைச் சேமித்து வைத்துவிடுகின்றன.
பைன் மரங்களிலிருந்து விதைகளைப் பிரித்துத் தன் வாயாலேயே, தன் இருப்பிடத்துக்குச் சுமந்து செல்ல வசதியாக இதன் வாயில், நாக்கின் கீழே ஒரு ‘பை’ போன்ற அமைப்பு உள்ளது. இந்தப் பையில் விதைகளின் அளவை பொருத்து 50 முதல் 150 விதைகளைச் சேகரித்துக் கொண்டு பறந்து சென்று தன் இருப்பிடம் அருகே பூமிக்கடியில் குழிகளில் பதுக்கி வைக்கும்.
இவ்வாறு இப்பறவை சேமித்து வைக்கும் விதைகளை மற்ற சில உயிரினங்களும் சாப்பிட்டு விடும். அதனால், தனது தேவைகளை விடச் சற்றுக் கூடுதலாகவே இவை விதைகளைச் சேமித்து வைப்பதாகப் பறவை ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இவை குளிர்காலத்தில் சாப்பிட்டதுபோக, மீதியிருக்கும் விதைகள் பூமிக்கு உள்ளேயேப் புதைந்து கிடக்கும்.
நல்ல ஈரப்பதமும் வெப்பமும் இருக்குமிடங்களில் இவை முளைத்துப் பெரிய மரங்களாகவும் வளர்ந்து விடுகின்றன. இவை நல்ல நினைவாற்றல் கொண்டவையாக உள்ளன 9 மாதங்களுக்குப் பிறகு கூட, மூன்று அடி ஆழத்தில் பனியால் மூடிக்கிடக்கும் விதைகளை இந்த பறவைகளால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்றும் பறவை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.