
விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கிசான் கிரெடிட் கார்டு. இத்திட்டத்தின் படி குறைந்த வட்டியில், மானியத்துடன் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும். இதற்கு சில விதிமுறைகளும் உண்டு. அவ்வரிசையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா. இது கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் விரிவாக்கம் தான். கால்நடை விவசாயிகளுக்கு இந்த கிரெடிட் கார்டு எப்படியெல்லாம் உதவும் என்பதை இப்போது பார்ப்போம்.
கால்நடை விவசாயிகள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்து, வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் பசு கிசான் கிரெடிட் கார்டு. மேலும் இவர்கள் கடன் பிர்ச்சினையில் இருந்து விடுபடவும் இந்த கார்டு உதவுகிறது. இதுகுறித்த விவரங்கள் பல விவசாயிகளுக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு இப்படியொரு வசதி இருக்கிறது என்பது கூட பலருக்கும் தெரியாது. இதுதவிர்த்து பயிர்க் கடனை அடைக்கவும், விவசாய சாதனங்களை வாங்கவும் இந்த கார்டைப் பயன்படுத்தலாம்.
ஆடு, மாடு, எருமை, கோழி மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பசு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும். இத்திட்டத்தின் படி கால்நடை விவசாயிகளுக்கு ரூ.3 இலட்சம் வரை மத்திய அரசின் கீழ் கடன் வழங்கப்படும். மேலும் இதில் ரூ.1.6 இலட்சம் வரையிலான கடனுக்கு, விவசாயிகள் எவ்வித பிணையமும் அளிக்க வேண்டிய அவசியமில்லை. நிதிப் பிரச்சினையால் கால்நடைகளை விற்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற கால்நடைகளுக்கு காப்பீடு மற்றும் சுகாதார அட்டையைப் பெற வேண்டியது அவசியமாகும்.
இத்திட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனித்தனியாக கடன் தொகை வழங்கப்படும். ஒரு எருமைக்கு ரூ.60,249, மாடு வளர்ப்பிற்கு ரூ.40,783, ஒரு கோழிக்கு ரூ.7,20 மற்றும் ஒரு ஆட்டிற்கு ரூ. 4,000 என மத்திய அரசு கடனை வழங்குகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை 6 சம தவணைகளில், அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கடன் வாங்கிய தினத்திலிருந்து 5 ஆண்டுகளுக்குள், விவசாயிகள் பணத்தை திருப்பி செலுத்தி விட வேண்டும்.
பொதுவாக விவசாயிகள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடன் கடன் வாங்கினால் அதற்கு 7% வட்டி பிடித்தம் செய்யப்படும். ஆனால், உங்களிடம் பசு கிசான் கிரெடிட் கார்டு இருந்தால் இதில் 3% வட்டி தள்ளுபடியாகி, வெறும் 4% வட்டியைக் கட்டினாலே போதுமானது.
தேவையான ஆவணங்கள்:
முகவரிச் சான்று
அடையாளச் சான்று
காப்பீடு மற்றும் சுகாதார அட்டை
வங்கிக் கணக்கு விவரங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
பசு கிசான் கிரெடிட் கார்டைப் பெற அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கி, பூர்த்தி செய்ய வேண்டும். இதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தால், 10 முதல் 15 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு கார்டு வழங்கப்படும். அதன்பிறகு இதனை வைத்து நீங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம்.