பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்கு எது தெரியுமா?

Egg-laying mammal...
Ornithorhynchus anatinus
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நீர் சார்ந்து நிலத்தில் வாழும் உயிரினமான வாத்தலகி (Platypus) எனும் உயிரினம், ஆர்நிதொரிங்கிடே (Ornithorhynchidae) குடும்பத்தின் தற்போது வாழும் ஒரே உயிரினமாகும். ஆர்நிதொரிங்கஸ் அனாடினஸ் (Ornithorhynchus anatinus) என்ற இருசொற்பெயர் கொண்ட இவை பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்காகும். இதன் தலையின் முன்பகுதி வடிவம், வாத்து அலகு போன்று, தட்டையான, கிட்டத்தட்ட நகைச்சுவையான முகடாக இருக்கிறது. முன் தலை நுனி கொம்புப் பொருள் படிவு மூடிய அகன்ற அலகாக நீண்டு துருத்திருக்கும். இதன் காரணமாகவே, இதற்கு வாத்தலகி என்ற பெயர் வந்தது.

டாஸ்மேனியாவின் உயரமான பகுதி மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைகள் முதல் கடலுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகள் வரையிலான நிலப்பரப்பில் காணப்படுகிறது. இங்குள்ள சிற்றாறுகளின் கரையோரமாக வசிக்கும் இவை, கரையில் வளை தோண்டி வசிக்கும். வளையிலிருந்து நீருக்குச் செல்லவும் ஒரு வாயில் இருக்கும்.

இந்த வளைக்கு உள்ளே அது கூடு கட்டித் தனது மயிரைப் பரப்பி அதில் வசிக்கும். பெரும்பகுதி நேரத்தை நீரிலேயேக் கழிக்கும். இங்கே நீரின் அடித்தரையில் படிந்துள்ள மெல்லுடலிகள், புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றை பிடித்துத் தின்னும். அடித்தளத்தில் இரை தேடுவதற்கு அதன் தனிவகைப்பட்ட அலகு அதற்கு உதவுகிறது.

வாத்தலகி நடுத்தர அளவுள்ள விலங்காகும். வாலுடன் சேர்ந்து இதன் நீளம் சுமார் 43 செ.மீ முதல் 50 செ.மீ வரை இருக்கும். வாத்தலகியின் பாதங்களில் நீந்து சவ்வுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி அது மிக நன்றாக நீந்தும். அகன்ற தட்டை வால் சுக்கானாக உதவுகிறது. வாத்தலகியின் கரும்பழுப்பு மயிர்கள் மிக அடர்த்தியானவை. ஆதலால், தண்ணீர் அதன் ஊடாக உட்புகுவதில்லை. அது கரையேறும் பொழுது, அதன் உடல் உலர்ந்திருக்கும். செவி மடல்கள் இவற்றிற்குக் கிடையாது. நீரில் மூழ்கும் போது அதன் செவித்துளைகள் அடைத்துக் கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
‘தூலிப் மோகம்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
Egg-laying mammal...

பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்கினமாக எஞ்சியிருக்கும் வாத்தலகி ஏராளமாக இருந்தாலும், காடுகளில் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. ஆண், பெண் வாத்தலகி பாலினங்கள் இனச்சேர்க்கையைத் தவிர ஒன்றையொன்று தவிர்க்கின்றன. மேலும் அவை குறைந்தது நான்கு வயது வரை இனச்சேர்க்கை செய்வதில்லை. இனப்பெருக்க காலத்தில் ஆண் விலங்குகள் பெரும்பாலும் சண்டையிடுகின்றன. காதல் உறவு மற்றும் குளிர்காலத்தின் பிற்பகுதியிலிருந்து வசந்த காலம் வரை நீரில் இனச்சேர்க்கை நடைபெறுகிறது.

பெண் வாத்தலகி கூட்டில் இரண்டு சிறு முட்டைகள் இட்டு அவற்றை அடைகாக்கும். முட்டைகளிலிருந்து வெளிவரும் குட்டிகள் ரோமம் அற்றவையாகவும், குருடாகவும் இருக்கும். தாய் வாத்தலகி அவற்றுக்குப் பால் ஊட்டும். வாத்தலகியின் பால் சுரப்பிகள் மற்றப் பாலூட்டிகளை விட எளியக் கட்டமைப்பு உள்ளவை. இவற்றுக்கு முலைக்காம்புகள் கிடையாது. எனவே, பாலூட்டும் போது தாய் பிராணி மல்லாந்து படுத்துக் கொள்ளும். குட்டிகள் அதன் வயிற்றின் மேல் ஏறி தங்கள் அலகுகளால் நசுக்கி பால் சுரக்கச் செய்து அதை நக்கிக் குடிக்கும். குட்டிகளை வளர்ப்பதில் ஆண் பறவைகள் எந்தப் பங்கையும் எடுப்பதில்லை.

ஆண்களும் பெண்களும் 12 முதல் 18 மாதங்களுக்குள் முழுமையாக வளர்ச்சியடைகின்றன. மேலும், அவை சுமார் 18 மாத வயதில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. சிறிய பாலூட்டிகளில் அவை நீண்ட காலம் வாழ்கின்றன. சில ஆய்வுகளில், காடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைச் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்திருக்கின்ற்ன.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தவளைகள்: சிலிர்க்க வைக்கும் உண்மை!
Egg-laying mammal...

வாத்தலகிகளின் கைகளின் மணிக்கட்டுப் பகுதியில் ஒரு சிறிய கொடுக்கு இருக்கும். பொதுவாக, இரண்டு பாலினத்திலும் இவை காணப்பட்டாலும், ஆண் வாத்தலகிகள் மட்டுமே விசத்தைச் சுரக்கின்றன. இந்த விசங்கள் பல புரதங்களின் கலவையாக இருக்கிறது. சிறிய உயிரினங்களைக் கொல்ல வல்ல இந்த நஞ்சு மனிதனை மரணிக்கச் செய்வதில்லை. ஆனால், அதிகமான வலியை இவை ஏற்படுத்தும். இந்த வலியானது சில நாள் தொடங்கிப் பல மாதங்கள் வரை நீடித்திருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com