கடலில் மட்டுமே வசிக்கும் ஒளிரும் உயிரினங்கள்

Bioluminescent Organisms
Bioluminescent Organisms
Published on

ஒளிரும் உயிரினங்கள் (Bioluminescent Organisms) என்பது உயிரொளிர்வு ஆற்றலைப் பெற்றுள்ள உயிரினங்களைக் குறிக்கும். ஒளிரும் உயிரினங்கள், பெரும்பாலும் கடலில் வசிக்கின்றன. நன்னீரில் வசிக்கும் உயிரினங்களுக்கு, இத்தகைய ஆற்றல் பெரும்பாலும் இல்லை என்பதற்குக் காரணம் தெரியவில்லை.

சில பாக்டீரியாக்களும், சில காளான்களுமே இத்தகையத் திறனைப் பெற்றுள்ளன. ஒட்டுண்ணிகளான, சில பாக்டீரியா சிற்சில நேரங்களில், இறந்த மீனின் இறைச்சியைத் தாக்கி, அவற்றில் ஒளி உண்டாகச் செய்கின்றன. சில பாக்டீரியா கடற்கரையில் ஒதுங்கும் செடிகளுக்கிடையில், தத்தித் திரியும் மணல் தெள்ளுப்பூச்சியின் உள் தசைகளைத் தாக்கி, அந்த உயிரியின் உடலை ஒளிரச் செய்கின்றன. இறுதியில் அது வலுவிழந்த பின், அந்த ஒளியோடு இறக்கும்.

சில ஒளிரும் பாக்டீரியா, பிற உயிரினங்களுடன், கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன. கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பாண்டாவில், போட்டோபிளிபெரான் பால்ப்பிபிரேட்டஸ் என்னும் ஒளிர்மை மீனின் கண் இமைகளின் கீழ், எப்போதும் ஒளி வீசும் பாக்டீரியா, கூட்டுறவில் வசிக்கும் ஓர் உறுப்புண்டு. அக்கண்ணின் தோல் மடிப்பு, அப்பாகத்தை மூடியும் திறந்தும், பாக்டீரியா உண்டாக்கும் ஒளியைத் தோன்றவும், மறையவும் செய்யும் திறனைப் பெற்றுள்ளது.

குழியுடலிகளில், பல மெடுசாக்களுக்கு ஒளிரும் சக்தியுண்டு. பெலாஜியா நாக்ட்டிலூக்கா என்ற மெடுசாவின் மேல், புள்ளிகளாகவும், வரிகளாகவும் ஒளி வீசுகிறது. பென்னாட்டுலா பாஸ்வோரியா என்னும் உயிரினத்தைச் சற்றுத் தூண்டினால், அதன் ஒவ்வொரு பாலிப்பின் உட்புறத்திலுள்ள, எட்டுத் தசைத் தொகுதிகளும் ஒளியுண்டாக்கும் பொருளை வெளிப்படுத்தி, அதனால் முழு உயிரினமும் ஒளிரும். பியூனி குலேரியா என்ற 5 அல்லது 6 அடியுள்ள பெரிய கடல்பேனாவின், அச்சுப் பாகத்தில் உண்டாகும் சளி போன்ற பொருள், அப்பாகத்தை ஓர் அழகிய நிறத்துடன் ஒளிரச் செய்கிறது. ஆனால் இந்த உயிரினத் தொகுதியில், பாலிப்புக்கள் தனியாக ஒளிரும் இயல்பைப் பெற்றிருக்கவில்லை.

உயிரினங்களில் மட்டுமல்லாது, சில உயிரில்லாப் பொருள்களிலிலிருந்தும் வெளிச்சம் உண்டாவதைக் கண்டறிந்துள்ளனர். அவற்றின் அக ஒளியால், அவை ஒளிர்வுடன் திகழுகின்றன. இவ்வாறு உயிரிகளும், உயிரற்ற பொருள்களும், தமக்குத் தாமே உண்டாக்கிய வெளிச்சத்தால், பிரகாசிப்பதை ஒளிர்தல் என்கிறோம். உயிர்ப் பொருள்களின் ஒளிர்தலில், சிறிது வேறுபாடுகள் நிகழ்தலால், அதை உயிர் ஒளிர்தல் என்று அழைக்கிறோம்.

ஜப்பான் நாட்டுப் போர் வீரர்கள், தங்களது வரைபடத்தினை இருளில் காண, இத்தகைய உயிரினத்தைப் பயன்படுத்தினர். 2008 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு உயிரினத்தினை விரிவாக ஆராய்ந்த ஒசமு சைமோமுரவுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. அவர் கடல் வாழ் உயிரனங்களில் ஒன்றான ஜெல்லி மீன் இனத்தினை ஆராய்ந்ததால், அதற்குரிய புரதத்தினைக் கண்டறிந்தார்.

இப்புரதமானது (Green Fluorescent Protein), குழந்தை மருத்துவத்தில் பெரிதும் பயனாகிறது. ஒவ்வொரு வகை உயிரினப் புரதமும், வெவ்வேறு நிறங்களை உமிழும் இயல்பைப் பெற்று இருக்கின்றன. உயிர்வளி இல்லாத சூழ்நிலையிலும், இப்புரதங்கள் ஒளிரும் இயல்பைப் பெறுவது, இப்புரதங்களின் சிறப்பாகும்.

இதையும் படியுங்கள்:
சூடா, மொறுமொறுன்னு... ஒரு பான்கேக், ஒரு கச்சோரி!
Bioluminescent Organisms

மேற்கிந்தியத் தீவுகளிகளில் வாழும், ஓடான்டாசில்லிசு என்ற கடற்புழுவானது, கடற்பாறை இடுக்குகளில் வாழும் இயல்புடையனவாகும். இப்புழுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு, ஆண்டில் ஆறு தடவைகள் மட்டும், நிலவு மூன்றாம் நிலையிலிருக்கும் போது வெளியே வரும் உடலியகத்தினைப் பெற்றுள்ளன. அவைகளின் கருக்காலத்தில், முதலில் பெண் புழுக்கள், திடீரென மாலையில் மங்கலான நேரத்திலோ அல்லது இருண்ட நேரத்திலோ வெளியே வந்து, ஒளி வீசும் கோழைப் போன்ற பொருளோடு, அதனின் இனப்பெருக்க முட்டைகளை இடும்.

இவ்வொளியைக் கண்ட ஆண் புழுக்கள், பாறை இடுக்குகளில் இருந்து வெளிவந்து, தம்முடைய விந்தணுக்களை கசிவுறச் செய்து, கருவுறத்தலை ஏற்படுத்துகின்றன. இப்புழுக்களின் வெளிச்சத்தைத்தான், கொலம்பசும் அவர் மாலுமிகளும் முதற் பிரயாணத்தின் போது, பகாமா தீவில் இறங்கும் முன், அங்குள்ள மக்களின் படகுகளிலிருந்து வரும் வெளிச்சம் என்று தப்பாக எண்ணியதாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஜப்பானியர்கள் 100 வயது வாழ்வதற்கு இதுவும் ஒரு காரணம்!
Bioluminescent Organisms

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com