ஜனவரி 31: பன்னாட்டு வரிக்குதிரை நாள் - அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அழகான விலங்கினம்!

January 31: International Zebra Day
International Zebra Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 அன்று, ‘பன்னாட்டு வரிக்குதிரை நாள்’ (International Zebra Day) கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி அருகிலுள்ள ஸ்மித்சோனியன் தேசியப் பூங்கா மற்றும் பாதுகாப்புக் குழு, வரிக்குதிரைகளின் வாழ்க்கை நிலைகளை எடுத்துக் கூறவும், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி காரணமாக அழிவுக்குள்ளாகி வரும் பல்வேறு விலங்குகளில் ஒன்றான வரிக்குதிரையின் எண்ணிக்கை குறைவினைத் தடுக்கவும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜனவரி 31 ஆம் நாளை ‘பன்னாட்டு வரிக்குதிரை நாள்’ (International Zebra Day) என்று அறிவித்துக் கடைப்பிடித்து வருகிறது.

வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி. குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
கடல் குதிரை பற்றி வியப்பான தகவல்கள்!
January 31: International Zebra Day

வரிக்குதிரைகள் ஒரு சமூக விலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்று கொண்டே தூங்கும் பண்பு கொண்டவை. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்றாக, தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன.

புதிதாகப் பிறக்கும் வரிக்குதிரைக் குட்டியானது, பிறந்து ஆறு நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து நிற்கும், 20 நிமிடங்களுக்குப் பிறகு நடக்கும், 40 நிமிடங்களுக்குப் பிறகு ஓடக்கூடிய தன்மை கொண்டது. இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை.

நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 முதல் 2 மீட்டர் உயரமும், 2 முதல் 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

இதையும் படியுங்கள்:
கழுதை தெரியும், கோவேறுக் கழுதை தெரியுமா செல்லம்ஸ்?
January 31: International Zebra Day

வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் மற்றொரு வரிக்குதிரையினைப் போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல, ஒன்று போல் ஒன்று இல்லாத தனித் தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன்புறம் நெடுக்குக் கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.

தற்போது காடுகளில், கிரேவியன் வரிக்குதிரை, சமவெளி வரிக்குதிரை மற்றும் மலை வரிக்குதிரை என்று மூன்று வகையான வரிக்குதிரைகள் இருக்கின்றன. இவற்றுள் கிரேவியன் வரிக்குதிரை அச்சுறுத்தப்பட்ட விலங்கினங்களின் பட்டியலில் சிவப்புப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

வரிக்குதிரைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் நீண்ட கால வாழ்வினை உறுதி செய்யவும், அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பன்னாட்டு வரிக்குதிரைகள் நாள் வலியுறுத்துகிறது. வரிக்குதிரைகளின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் உலகளாவிய நிலையில் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதற்கான அவற்றின் முக்கியத்துவம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என எடுத்துரைக்கப்படுகிறது.

வேட்டையாடுதல், அதன் வாழ்விடச் சீரழிவு மற்றும் மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் போன்ற பல காரணிகளால் வரிக்குதிரைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கிறது. எனவே, அதன் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்நாள் எடுத்துரைக்கிறது. வரிக்குதிரைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் வாயிலாக, இந்த அற்புதமான விலங்கினை பாதுகாப்பதுடன், அடுத்து வரும் தலைமுறையினருக்கு இயற்கையின் அற்புதங்களை அப்படியே வைத்திருக்க உதவமுடியும் என்றும் குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் ஒரு கருத்துரு மையக் கருத்தாகக் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான கருவாக, ‘வரிக்குதிரைகளின் அழகு மற்றும் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com