உலகத்தில் சிட்டுக்குருவி அல்லது காகம் இல்லாத ஒரு சூழ்நிலையை சற்று கற்பனை செய்து பாருங்கள். நம்மைச் சுற்றி சாதாரணமாக பறக்கும் பறவைகளின் அருமை நமக்கு பல நேரங்களில் தெரிவதில்லை. ஆனால் வெகு தொலைவில் உள்ள ஒரு நாட்டில் பறக்க முடியாத காகாபோ (Kakapo) என்ற ஒரு விசித்திரமான கிளி இனம் இந்த பூமியை விட்டே முற்றிலும் அழியும் நிலைக்கு சென்றது. ஆனாலும் அங்கிருந்த மனிதர்கள் மனம் தளராமல் பல வருடங்கள் போராடி அதனை மீட்டெடுத்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் ஒரு போராட்டம்!
நியூசிலாந்து நாட்டின் அடையாளங்களில் ஒன்றான இந்த பறவை இனம் மனிதர்கள் மற்றும் வேட்டையாடும் விலங்குகளின் வருகையால் பெரும் அழிவை சந்தித்தது. தொண்ணூறுகளின் மத்தியில் வெறும் 51 பறவைகள் மட்டுமே உலகில் எஞ்சி இருந்தன. பூனைகள், எலிகள் போன்ற விலங்குகளிடம் இருந்து தப்பிக்க முடியாமல் இவை பெருமளவு பலியாகின. இதனால் இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.
நிலத்தில் மட்டுமே வாழந் பழகிய இந்த உயிரினம் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் ஆற்றல் இயற்கையாகவே மிகவும் குறைவானதாகும். ஆகையால் எஞ்சியிருந்த அந்த சில பறவைகளையாவது எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் ஒரு அதிரடியான முடிவை கையில் எடுத்தது. இதற்காக பல தன்னார்வல குழுக்கள் இரவு பகலாக காடுகளில் உழைக்க தொடங்கினர்.
தனித்தீவில் புது வாழ்வு!
வேட்டையாடும் விலங்குகள் இல்லாத பாதுகாப்பான தீவுகளுக்கு எஞ்சியிருந்த பறவைகள் அனைத்தும் மிகவும் பத்திரமாக மாற்றப்பட்டன. ஸ்டூவர்ட் தீவு (Stewart Island) போன்ற பகுதிகளில் இதற்கென தனித்துவமான பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பறவையும் நவீன ரேடியோ கருவிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அவற்றின் உணவு முறை மற்றும் அன்றாட ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதன் இனப்பெருக்க முறை மிகவும் வித்தியாசமானது. ரிமு (Rimu) எனப்படும் ஒரு குறிப்பிட்ட மரத்தில் அதிக பழங்கள் காய்க்கும் சீசனில் மட்டுமே இவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இயல்புடையவை. இது பொதுவாக இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு அரிய நிகழ்வாகும். அதனால் ஆய்வாளர்கள் பல வருடங்கள் மிகவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொழில்நுட்பத்தின் உதவி!
வெறும் இடமாற்றம் மற்றும் பாதுகாப்போடு மட்டும் நின்றுவிடாமல் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டன. முட்டைகள் பொரிப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களை தவிர்க்கவும் மரபணு குறைபாடுகளை சரிசெய்யவும் விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தனர். பிறந்த குஞ்சுகளின் பாலினத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் கண்டறியும் புதிய DNA பரிசோதனை முறைகள் எல்லாம் பயன்படுத்தப்பட்டன. இது இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது.
இதன் விளைவாக பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட உழைப்பு இன்று மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. சமீபத்திய இனப்பெருக்க காலத்தில் மட்டும் 90 புதிய குஞ்சுகள் பிறந்துள்ளன. இது வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையாகும். தற்போது காகாபோ கிளி இனத்தின் மொத்த எண்ணிக்கை 325-ஆக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த இயற்கை பாதுகாப்பு குழுவினருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
இயற்கைக்கு நாம் கொடுக்கும் பரிசு!
பறவைகள் தன்னிச்சையாக வாழும் சூழலை உருவாக்கும் அடுத்தகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. மனித தலையீடுகளை மெதுவாக குறைத்துக்கொண்டு பாதுகாக்கப்பட்ட தீவுகளை தாண்டி அவை சுதந்திரமாக காடுகளில் சுற்றித்திரியும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்காக இன்னும் பல பாதுகாப்பான நிலப்பரப்புகளை உருவாக்கும் பிரம்மாண்டமான வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
அழிந்துபோன ஒரு உயிரினத்தை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் அழியும் நிலையில் இருந்த ஒரு அழகிய காகாபோ கிளி இனத்தை மனிதர்கள் தங்கள் விடாமுயற்சியால் மீட்டெடுத்துள்ளனர். நாம் நினைத்தால் இயற்கையை அழிக்கவும் முடியும் அதே இயற்கையை அன்பால் அரவணைத்து மீண்டும் உயிர்ப்பிக்கவும் முடியும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்.