

ஜவ்வரிசி கிச்சடி
தேவை:
வேர்கடலை- 1 கப்
ஜவ்வரிசி - அரை கப்,
உருளைகிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு,
எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழக்கை வேகவைத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஜவ்வரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும். வேர்க்கடலையை வறுத்து பொடித்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டுத் தாளித்து, அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் துண்டுகளைப்போட்டு, வதக்கவும். பின்னர் அதில் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து கிளறி சிறிது வேகவிடவும். இறக்கும் நேரத்தில் வேர்க் கடலையை சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான ஜவ்வரிசி கிச்சடி தயார்.
தால் கிச்சடி
தேவை:
தோலுடன் உடைத்த பச்சைப்பயறு (வறுத்தது) - ஒரு கப்,
சேமியா - கால் கப்,
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - அரை கப்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
பச்சைப்பயறை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். இதில் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இத்துடன் பச்சைப்பயறு, சேமியா சேர்த்துக் கிளறி, பயறு, காய்கள் வெந்ததும் இறக்கவும். அல்டிமேட் சுவையில் தால் கிச்சடி தயார்.
பருப்புக் கீரை கிச்சடி
தேவை:
பருப்பு கீரை – 1 கட்டு
வெங்காயம் – 1
தக்காளி – 2
வரகு அரிசி – 1 1/2 கப்
பருப்பு – 1 கப்
சீரகம், கடுகு, மல்லித்தூள், மஞ்சள் தூள் – தலா 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
செய்முறை:
தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், பருப்புக் கீரையை பொடியாக நறுக்கிகொள்ளவும். வரகு அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள். அடுப்பில் ப்ரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் வரகு அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.
இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடிவைக்கவும். 10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும். இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால், பருப்புக்கீரை கிச்சடி தயார்.
பிரட் கிச்சடி
தேவை:
பிரட்– 7 துண்டுகள்
கடுகு–1 டீ.ஸ்பூன்
தேங்காய் பால் – அரை கப்
கேரட்–2
பீன்ஸ் – 5
குடை மிளகாய்–1
உருளை கிழங்கு–2 சிறியது
வெங்காயம்–1 பெரியது
தக்காளி–2
கருவேப்பிலை–1கொத்து
புதினா & கொத்தமல்லி இலை – கையளவு
எண்ணெய்–3 டீஸ்பூன்
நெய் –மணத்திற்கு
கரம் மசாலா–1 ஸ்பூன்
மஞ்சள் தூள்–1 டீ.ஸ்பூன்
உப்பு–தேவைக்கேற்ப
செய்முறை:
பிரட்டை தேங்காய்பாலில் ஒவ்வொன்றாக ஊறவைத்து வெளியே எடுத்து வைத்துகொள்ளவும்
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடான பிறகு கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, புதினா,
கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும் வதங்கியவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து எண்ணெய் சுண்டி வரும் வரை வதக்கவும் பின் தேவைக்கேற்ப உப்பு, மசாலா தூள்களை சேர்க்கவும். வதங்கிய பின் காய்கறி அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
கடைசியில் ஊறவைத்து எடுத்த பிரட் துண்டுகளை சேர்த்துக்கிளறி, 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். சுட சுட பிரட் கிச்சடி தயார்
குழந்தைகளுக்கு விருப்பமான காலை உணவாக இது அமையும்.