

சிங்காரா ஒரு சத்துள்ள சுவையான பழம் இது குளிர்காலத்தில் கிடைக்கும். அந்தப் பழத்தை உபவாசம் இருக்கும் சமயம் சாப்பிடும் பழக்கம் உண்டு. இந்த சிங்காராவால் ஊறுகாய்போட மிகவும் ருசியாக இருக்கும். வாருங்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!
சிங்காரா ஊறுகாய்:
சிங்கார பழங்கள் 2 கப்
கடுகு எண்ணெய் 1/4 கப்
வெந்தயப்பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
கடுகு பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு தேவையான அளவு
சிங்காரா பழங்களை வேகவைத்து, தோல் நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் கடுகு எண்ணெய் கால் கப் சேர்த்து நன்கு சூடாக்கி சிறிது ஆறியதும் அதில் வெந்தய பொடி, பெருங்காயத்தூள், கடுகு பொடி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய சிங்காராவை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு கலந்து ஈரம் இல்லாத ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு 2-3 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். அருமையான சத்துள்ள ஊறுகாய் தயார்.
இதனை சாதம், ரொட்டி, கிச்சடி, பரோட்டா, பொங்கல் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
நீர் கஷ்கொட்டை, வாட்டர் செஸ்நட் (water chestnut):
டெவில் பாட் (Devil Pot) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு நீர்வாழ் கிழங்கு வகையாகும். இந்த பழம் பெரும்பாலும் வட இந்திய உணவுகள், சீன உணவுகள் மற்றும் தாய்லாந்து உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. முற்றிய பழங்களை வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம். கஞ்சி, பக்கோடா, சாட், சீலா போன்ற பல வகைகளில் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வட இந்தியாவில் இதன் காய்ந்த கொட்டைகளை மாவாக அரைத்து கோதுமை மாவுக்கு மாற்றாக பயன்படுத்துகிறார்கள்.
வாட்டர் செஸ்நட் மற்றும் முட்டைகோஸ் ஸ்டிர் ஃப்ரை:
சிங்காரா 1 கப்
ஊதா வண்ண முட்டைகோஸ் 1/2 கப்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1 ஸ்பூன் (அல்லது) காரப்பொடி 1/2 ஸ்பூன்
வேர்க்கடலை 1 கைப்பிடி
தோல் நீக்கியது
ஒரு பாத்திரத்தில் சிங்காராவை சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்ததும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும். பிறகு அவற்றை எடுத்து தோலை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் முட்டைகோஸ், உப்பு, மஞ்சள் தூள், காரத்திற்கு மிளகுப்பொடி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
கடைசியாக தோல் நீக்கி ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலையைத் தூவி பரிமாற மிகவும் ருசியாக இருக்கும். இப்படி வாட்டர் செஸ்நட்டின் லேசான இனிப்பு சுவையுடன், ஊதா வண்ண முட்டைகோஸ் சேர்த்து லேசாக வதக்கி தயாரிக்கப்படும் பொரியல் மிகவும் ருசியானது.