
1. ரவை பர்பி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
நெய் - அரை கப்
பால் - அரை கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரிப் பருப்பு - 8
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
ரவை, நெய், பால் மூன்றையும் சேர்த்து பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் அரை கப் நெய் விட்டு காய்ந்ததும், பிசைந்த ரவையை போட்டு வறுக்கவும். சர்க்கரையை முதிர் பாகு பதம் காய்ச்சி, வறுத்த ரவையை போட்டுக் கிளறவும். பின்னர் இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்புகளை சேர்க்கவும். ஏலக்காய் பொடி தூவி, கிளறி பர்பி பதம் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி ஆறியதும், வில்லைகள் போடவும். சுவையான ரவை பர்பி ரெடி.
2. ரவை வடை
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
உருளைக்கிழங்கு பெரியது - 1
மல்லித்தழை - அரை கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ரவையை வாணலியில் வறுத்து எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, மசித்து ரவையுடன் கலந்து, உப்பு, பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து, எலுமிச்சை சாறு விட்டு, வடை மாவு பக்குவத்திற்கு ஏற்றவாறு நீர் சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிசைந்த கலவையை, வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மொறு மொறு ரவை வடை ரெடி.
3. ரவை முறுக்கு
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
பச்சரிசி மாவு - அரை கப்
தயிர்- 1 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சித் துருவல் - 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ரவை, பச்சரிசி மாவு, தயிர் ஆகியவற்றை உப்பு சேர்த்து கலக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி துருவல் ஆகியவற்றை அரைத்து, பெருங்காயத்தூள் கலந்து மாவில் சேர்த்து பிசையவும். இந்த மாவை முறுக்கு அச்சில் நிரப்பி, காய்ந்த எண்ணெயில் முறுக்குகளாக பொரித்து எடுக்கவும். சுவையான ரவை முறுக்கு தயார்.
4. ரவை பக்கோடா
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
புளித்த மோர் - அரை கப்
இஞ்சித் துருவல் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ரவையை வெறும் வாணலியில் வறுத்து உப்பு கரைத்த மோரில் கலந்து வைக்கவும். அதில் இஞ்சி துருவல், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், ரவை பக்கோடாக்களைப் போட்டு, சிவந்ததும் எடுத்து வைக்கலாம். சுவையான கரகர மொறு மொறு ரவை பக்கோடா தயார்.