

சோயா அடை
தேவை:
பச்சரிசி, இட்லி அரிசி - தலா அரை கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த சோயா பயறு - தலா கால் கப், பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளுடன் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான சோயா அடை தயார்.
சேமியா அடை
தேவை:
சேமியா - 400 கிராம்
வறுத்த ரவை - 400 கிராம்
அரிசி மாவு - 400 கிராம் (வறுத்தது)
தயிர் - 400 கிராம்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை, மல்லி இலை, புதினா - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக வதக்கவும். வதக்கிய பொருட்களுடன் சேமியா, ரவை, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர், உப்பு, புதினா மற்றும் மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும். 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஊறிய மாவை அடை தோசை பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைக்கவும். ஒரு தவாவை சூடாக்கி, எண்ணெய் தடவி, ஒரு கரண்டியில் மாவை எடுத்து, தவாவில் மெல்லியதாக வார்க்கவும். தோசையின் இருபுறமும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான சேமியா அடை தயார்.
வாழைப்பூ அடை
தேவை:
வாழைப்பூ : 1 கப்
பச்சை மிளகாய்: 3.
தேங்காய் துருவல்: 2 ஸ்பூன்.
கடலைப்பருப்பு: 1/ கப்.
இட்லி அரிசி: 1 கப்.
உளுந்து: 1/4 கப்
வெங்காயம்: 2.
கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு.
செய்முறை:
முதலில் அரிசி, உளுந்து, கடலைப்பருப்பை தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும்.
பின் நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேகவைத்து எடுக்கவும்.
தினை கம்பு அடை
தேவை:
தினை, கம்பு, பச்சரிசி - தலா அரை கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 10, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் -கால் கப், உப்பு, பெருங்காயம் தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி.
செய்முறை:
தினை கம்பு, அரிசி ஆகியவற்றை மெஷினில் கொடுத்து ரவையாக பொடிக்கவும். இதை உப்பு கலந்த நீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பருப்பு வகைகளை ஒருமணி நேரம் ஊறவிட்டு மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். இத்துடன் ஊறிய தினை, கம்பு-அரிசி கலவை, நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு வேக வைத்து. எடுக்வும். சுவையான தினை கம்பு அடை ரெடி. இதை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி குறையும்.