

இந்த புரோட்டின் நட்ஸ் பவுடரை தயாரித்து வைத்துக்கொண்டால் 8 மாத குழந்தையிலிருந்து வயதானவர்கள்வரை உட்கொள்ளலாம். இந்தப் பவுடரை தினசரி சாப்பிட்டு வருவதால் பெரியோர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி குறையும். இதில் எண்ணெய்ப் பசை இருப்பதால் மூட்டுகளுக்கு ஈரப்பசையை கொடுத்து அந்த வலியை அது குறைக்கிறது. மேலும் எவ்வளவு சாப்பிட்டாலும் சதையே போடுவதில்லை என்று குறைப்பட்டுக் கொள்பவர்களுக்கும் இந்த பவுடர் நல்ல ஆரோக்கியத்தையும், உடல் பெருக்கத்தையும் தரும். அதன் செய்முறை பற்றி இப்பதிவில் காண்போம்.
புரோட்டின் நட்ஸ் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் -100 கிராம்
முந்திரி- 100 கிராம்
வால்நட் -100 கிராம்
உப்பு இல்லாத பிஸ்தா- 100 கிராம்
வேர்க்கடலை- 100 கிராம்
பொட்டுக்கடலை-100 கிராம்
பூசணி விதை- 100 கிராம்
வாட்டர் மெலான் விதை- 100 கிராம்
சூரியகாந்தி விதை -100 கிராம்
வெள்ளரி விதை- 100 கிராம்
பிளாக் சீட் -100 கிராம்
சியா சீட் -100 கிராம்
சப்ஜா சீட்- 100 கிராம்
காய்ந்த அத்தி -100 கிராம்
காய்ந்த திராட்சை -100 கிராம்
ஏலக்காய் -அரை கைப்பிடி
சிவப்பு அவல் -2 கப் 200 கிராம்
மக்கானா தாமரை விதை- கால் கிலோ
பனங்கற்கண்டு- கால் கிலோ
மஞ்சள் பொடி -இரண்டு சிட்டிகை
செய்முறை:
முதலில் பாதாமை வறுத்துக்கொண்டு அதனுடன் முந்திரி வால்நட்டை சேர்த்து வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். வேர்க்கடலையை நன்றாக வறுத்து பொட்டுக் கடலையைச் சேர்த்து வறுத்து கொட்டவும். சிவப்பு அவலை நன்றாக சுத்தம் செய்து சலித்து அதைத் தனியாக வறுத்துக்கொட்டவும்.
பூசணி விதை, வாட்டர் மெலன் விதை, சன்பிளவர் விதை, வெள்ளரி விதை இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வறத்துக்கொட்டவும்.
ஆளி விதை, சியா சீட், சப்ஜா சீட் மூன்றும் நன்றாக வறுபட்ட உடன் காய்ந்த அத்தியை பிய்த்து அதில் சேர்த்து காய்ந்த திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
கடைசியாக மக்கானாவை நன்றாக வறுத்து சேர்க்கவும். அது வறுக்கும் பொழுது வதக்கு வதக்கு என்றுதான் இருக்கும். காய்ந்து ஆறிய பிறகு நன்றாக ஒடிக்கவரும்.
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவைத்து, பனங்கற்கண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து மிக்சி கொள்ளும் அளவிற்கு இரண்டு மூன்று பங்காக பிரித்து நன்றாக பொடிக்கவேண்டும். பின்னர் பொடித்த பவுடரை சல்லடையில் கையால் நன்றாக தேய்த்துவிட்டு சலித்தால்தான் மாவு நன்றாக கொட்டும். இதற்கு இரண்டு கிலோ சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு, வெள்ளை கற்கண்டு தேவைப்படும். அப்படி சலித்த பவுடரை ஈரம் இல்லாத டப்பாக்களில் எடுத்து அடைத்து வைத்துவிட வேண்டும்.
பாலை நன்றாக காய்ச்சி ஒரு டம்ளரில் மூன்று ஸ்பூன் இந்த பவுடரை போட்டு அதில் பாலை கலந்து நன்றாக வடிகட்டி குடிக்கலாம். அப்படியே குடித்தால் அதில் சில கொரகொரப்பான பவுடர் இருக்கும் என்பதால் வடிகட்டி குடிப்பதே நல்லது.
குறிப்புகள்:
இந்த புரோட்டின் நட்ஸ் பவுடரை தண்ணீரில் கலந்து அதனுடன் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் போன்றவற்றில் விருப்பப்பட்ட ஏதாவது ஒரு பழத்தை பொடியாக அரிந்து சேர்த்து வேகவைத்து எட்டு மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள்.
பள்ளி விட்டு வந்த குழந்தைகளுக்கும் சாயங்கால வேலைகளில் கொடுக்கலாம். எதையும் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை பாலில் போட்டோ அல்லது பழங்களோடு சேர்த்தோ தரும் பொழுது அதன் தனிப்பட்ட ஃப்ளேவர் பிடித்து விடுவதால் சாப்பிட்டு விடுவார்கள். இதில் எல்லாவிதமான சத்துக்களும் அடங்கியிருப்பதால் வேறு எதையும் சாப்பிடவில்லையே என்று கவலைப்பட தேவையில்லை.
பெரியவர்களுக்கும் இதை கஞ்சி போல் செய்து சாப்பிட கொடுக்கலாம். நல்ல ஹெல்தியாக ஃபீல் பண்ணுவார்கள். இதில் ஒவ்வொரு பருப்பும் ஒவ்வொரு கலரில் இருப்பதால் கலரு சற்று மங்கலாக இருக்கும் என்பதால்தான் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. அது இந்த பவுடருக்கு அழகான நிறத்தை கொடுக்கும்.
மக்கானாவை வறுத்து அதில் உப்பு, மிளகு பவுடர் அல்லது ரெட் சில்லி பவுடர் கலந்தும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதில் எல்லாவிதமான நட்ஸ் வகைகளும் கலந்து இருப்பதால் நல்ல நார்ச்சத்து கிடைக்கும்.
அத்தி, திராட்சை போன்றவற்றை தனியாக வறுத்தால் கடாயில் ஒட்டும் என்பதால் மற்ற விதைகளுடன் சேர்த்து வறுக்கப்பட வேண்டும். திராட்சையில் கருப்பு, தினசரி பயன்படுத்தப்படும் திராட்சை என்று எதுவாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் .அது சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதால் இதில் சேர்க்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக மெனோபாஸ் நேரங்களில் பெண்களுக்கு இந்தப்பொடி மிகவும் அவசியம். இதை விருப்பப்பட்ட முறையில் கஞ்சியாகவோ பாலுடன் சேர்த்தோ கலந்து சாப்பிடலாம். சோர்வைப்போக்கி நல்லா ஆரோக்கியத்தை அள்ளித்தரும் .
மேலும் இந்த கலவைகளில் குளிர்ச்சியான பொருட்களும் இரத்த விருத்திக்கு தேவையான பொருட்களும் சேர்ந்து இருப்பதால் இந்த புரோட்டின் நட்ஸ் பவுடரை அனைவரும் அவரவர் வீட்டிலும் செய்து பயன்படுத்தினால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.