

இன்றைய அவசர உலகில் பலரும் தவிர்க்கும் ஒரு முக்கியமான உணவு காலை உணவுதான். காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பலரும் அரக்கப்பரக்க ஓடுவதால், எதையாவது அரைகுறையாகச் சாப்பிடுகிறார்கள் அல்லது பட்டினியாகச் செல்கிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்.
காலை உணவுதான் நம் மூளைக்கு அன்றைய நாளுக்குத் தேவையான குளுக்கோஸை வழங்குகிறது. ஆனால் காலை உணவைச் சமைப்பது என்பது பலருக்கு ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. மிகக் குறைந்த நேரத்தில், அதே சமயம் சத்துக்கள் குறையாமல் எளிமையான காலை உணவுகளை எப்படி தயாரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கம்பு ரொட்டி
கம்பு மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து ரொட்டியாக தோசைக்கல்லில் தட்டி எடுக்கலாம். இதை காலை சமையல் வேலையின்போது எளிதாக செய்துவிடலாம். இது சத்தான உணவு.
சிறுதானிய வெஜிடபிள் காம்போ
சிறுதானிய மாவில் அன்றைய நாளில் சமைக்கும் காய்கறிகள் மற்றும் கீரைகளை பொடியாக நறுக்கி அல்லது மிக்ஸியில் அரைத்து சேர்த்து தோசை சுடலாம். இது ஆரோக்கியமான காம்போ ஆக இருக்கும். கீரை மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க ஒரு எளிய வழி.
வேகவைத்த முட்டை / ஆம்லெட் / தோசை
முட்டை ஒரு முழுமையான புரத உணவு. காலையில் இரண்டு வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட் சாப்பிடலாம். முட்டையுடன் காய்கறிகள் சேர்த்து தோசை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
பாசிப்பயறு தோசை
புரதச் சத்து நிறைந்த இந்த பாசிப்பயறு தோசை செய்ய அதிக நேரம் தேவையில்லை. பாசிப்பயறை அரைமணி நேரம் ஊறவைத்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஒரு கப் இட்லி மாவில் கலந்து தோசை சுடலாம்.
அவல் இனிப்பு ஃப்ரூட் மிக்ஸ்
இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அவலைத் தண்ணீரில் நனைத்து சிறிது நேரம் ஊறவைத்து, அதில் துருவிய தேங்காய், நாட்டுச் சர்க்கரை அல்லது பழங்களைச் சேர்த்துச் சாப்பிட்டால், ஐந்து நிமிடங்களில் சத்தான உணவு தயார்.
அவல் உப்புமா
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அவல் உப்புமா செய்து, துருவிய தேங்காய் சேர்த்தால் அவல் உப்புமா ரெடி.
சம்பா வெஜிடபிள் உப்புமா
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து கிளறினால் சம்பா ரவை உப்புமா ரெடி.
காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. காலை உணவுதான் நமக்கு முழு நாளின் எனர்ஜியை தரக்கூடியது. நேரமில்லை என்று ஒதுக்காமல், உங்களுக்கு முடிந்த அளவு ஒரு உணவை தவறாமல் சாப்பிட வேண்டும்.
சிறிய திட்டமிடலும் அக்கறையும் இருந்தால், சுவையான மற்றும் சத்தான காலை உணவை ஒவ்வொரு நாளும் நம்மால் சாப்பிட முடியும்.