

பீட்ரூட் வடகம்:
இந்த வெயில் சீசனில் பீட்ரூட் கிழங்கு மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. நல்ல வெயிலும் அடிக்கிறது. எனவே பீட்ரூட்டை வாங்கி நன்றாக சுத்தம் செய்து வடகம் போட்டு வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏதுவாக இருக்கும்.
செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி குக்கரில் ஒரே ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். ஏனெனில் சீவிக்கொண்டிருந்தால் நேரமும் விரயம், வேலையும் அதிகமாகும். இது ஈசியான வழி.
வேகவைத்து எடுத்த பீட்ரூட்டை மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை சிறிது உப்பு போட்டு நன்கு பிசறி அகலமான சீட்டில் வெயிலில் உலர்த்தி வைக்கவும்.
இரண்டு நாட்கள் கழித்து அதனை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி மேலும் உலரவிட்டு எடுக்கவும்.
நன்கு உலர்ந்த பின் ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது எண்ணெயில் பொரித்து எடுத்து மேலே மிளகுத்தூள் தூவி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பீட்ரூட் சப்பாத்தி
பீட்ரூட் சமைக்கும்போது ஒருவித மண்வாசனை அடிக்கும். அதனால் சில குழந்தைகளுக்கு பீட்ரூட் பிடிக்காது. அவர்களுக்கு கலர் சப்பாத்தி செய்து கொடுத்து அசத்தலாம்.
பீட்ரூட் சேர்த்து செய்யும்போது சப்பாத்தி ஆரோக்கியமாகவும் அழகான சிவப்பு நிறத்துடனும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
பீட்ரூட் – 1 (சிறியது)
உப்பு – தேவைக்கேற்ப
சீரகத் தூள் & மிளகுத்தூள் – தலா ¼
டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
செய்முறை:
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சீரகத் தூள், மிளகுத்தூள் சேர்க்கவும். அதில் அரைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
மாவை 10–15 நிமிடம் மூடி வைத்துவிடவும். பின்னர் சிறிய உருண்டைகளாக எடுத்து சப்பாத்திபோல உருட்டவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் அல்லது எண்ணெய் தடவி சப்பாத்திகளை இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார். தக்காளி குருமா அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். தயிர் கூட விரும்பினால் சேர்த்து பரிமாறலாம்.