

இட்லியை வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். காலையில் செய்யும் இட்லி மீந்து போய்விட்டால் கவலைப்பட வேண்டாம். அதை வைத்து சூப்பரான வெரைட்டி ரெசிபிகளை செய்யலாம். பொடி இட்லி, சாம்பார் இட்லி, தயிர் இட்லி, சில்லி இட்லி, இட்லி உப்புமா என்று பலவிதமான ரெசிபிகளை செய்யலாம்.
குழந்தைகளுக்கு இட்லி என்றால் பிடிக்காது. ஆனால் இட்லியை வைத்து இப்படி வெரைட்டியாக ரெசிபி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் உங்கள் வீட்டில் காலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா. கவலையவிடுங்க. சாயங்காலம் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மீந்து போன இட்லியை வைத்து பிரியாணி செஞ்சி குடுங்க. அப்புறம் பாருங்க... வித்தியாசமான இந்த இட்லி பிரியாணியை சாப்பிட்டு விட்டு, 'இட்லியே வேண்டாம்'னு சொல்ற குழந்தைகள் கூட 'இன்னும் வேணும்'னு கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க!
தேவையான பொருட்கள் :
இட்லி - 5
பெரிய வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
ப.மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கேரட் - சிறியது 1
பீன்ஸ் - 6
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
பெருங்சீரகம் - கால் டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை - 1
எண்ணெய் - 3 டீஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு தேவையான அளவு
செய்முறை :
இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ப. மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப. மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பாதி புதினா, கொத்தமல்லி போட்டு அதனுடன் தக்காளி சீக்கிரம் வேக சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வெந்ததும், அதில் கேரட், பீன்ஸ் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும், கடைசியாக சிறிய துண்டுகளாக வெட்டி வைத்த இட்லி மற்றும் மீதமுள்ள புதினா, கொத்தமல்லியை சேர்த்து மெதுவாக கிண்டவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
கடைசியாக மூடியை திறந்து மீதமுள்ள நெய்யை ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கினால் சூப்பரான இட்லி பிரியாணி ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி சூப்பராக இருக்கும்.
இதில் உங்களுக்கு தேவையான எந்த காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம். காய்கறிக்கு பதில் காளான் சேர்த்தும் செய்யலாம்.