உங்களில் பலர் பிரெட் பயன்படுத்தி செய்யப்படும் பக்கோடா சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால்,பிரெட் இல்லாமல், வீட்டில் எப்போதும் இருக்கும் ரவை உருளைக்கிழங்கு மற்றும் கடலை மாவு ஆகியவற்றை வைத்தே அசல் பிரெட் பக்கோடா போலவே, சொல்லப்போனால் அதைவிட மிகவும் மொறுமொறுப்பான ஒரு அட்டகாசமான ஸ்நாக்ஸ் செய்ய முடியும். பிரெட் அதிக எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டது, ஆனால் ரவையில் செய்யும்போது எண்ணெய் குடிக்காது, கரகரப்பும் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே காரசாரமான உருளைக்கிழங்கு மசாலாவுடனும் நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த புதுவித ரெசிபியை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 சிறிய துண்டு
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம், ஓமம் - தலா 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
சமையல் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
முதலில் ஒரு கடாயில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையைச் சிறுகச் சிறுகக் கொட்டி கட்டிகள் இல்லாமல் கெட்டியான மாவு பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். மாவு ஆறியதும் அதைச் சப்பாத்தி மாவு போலப் பிசைந்து கொள்ளுங்கள்.
இப்போது வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த் தூள், கரம் மசாலா, சீரகம், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து காரசாரமான மசாலாவாகத் தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு தட்டில் லேசாக எண்ணெய் தடவி, தயார் செய்த ரவை மாவில் பாதியைத் தட்டையாகப் பரப்பி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை ஒரு லேயராக வைத்து, மீதமுள்ள ரவை மாவை அதன் மேல் வைத்து மூடி அழுத்தி விடவும்.
இதை 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, முக்கோண வடிவில் வெட்டிக்கொண்டால், பிரெட் போலவே அடுக்குகள் கொண்ட துண்டுகள் கிடைத்துவிடும்.
அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது மஞ்சள் தூள், ஓமம், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு நீர்க்கக் கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து தாராளமாக எண்ணெய் ஊற்றிக் காய்ச்சவும்.
எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும், முக்கோண வடிவில் வெட்டி வைத்துள்ள ரவை துண்டுகளைக் கடலை மாவு கரைசலில் இரண்டு பக்கமும் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் மெதுவாக விடவும். மிதமான தீயில் இரண்டு புறமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகச் சிவந்து கரகரப்பாக மாறியதும் எண்ணெயை வடிகட்டிவிட்டு எடுத்தால் கடைகளில் கிடைக்கும் உண்மையான பிரெட் பக்கோடா தோற்றுப்போகும் அளவுக்கு, எண்ணெய் குடிக்காத கரகரப்பான முக்கோண பக்கோடா தயார்.
இதைச் சுடச்சுடத் தக்காளி கெட்சப் அல்லது புதினா சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் சுவை தேவாமிர்தமாக இருக்கும். பிரெட் இல்லை என்ற ரகசியம் இதைச் சாப்பிடும் யாருக்குமே தெரியாது. ஆரோக்கியமான மற்றும் புதுமையான இந்த ரெசிபியை இன்றே உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.