எலுமிச்சை என்றாலே பெரும்பாலான வீடுகளில் செய்வது சுருக்குனு உறைக்கிற காரமான ஊறுகாய்தான். ஆனால், அதையே கொஞ்சம் வித்தியாசமாக, இனிப்பும் புளிப்பும் காரமும் கலந்த சுவையில் ஒரு எலுமிச்சை ஊறுகாய் செய்தால் எப்படி இருக்கும்? தயிர் சாதம் முதல் சப்பாத்தி, பரோட்டா வரை எல்லாவற்றுக்கும் இது அட்டகாசமான சைட் டிஷ்ஷாக இருக்கும்.
அதிலும் குழந்தைகள் காரமான ஊறுகாயை தொடமாட்டார்கள், அவர்களுக்கு இந்த இனிப்பு சுவை நிச்சயம் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல், இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. கடைகளில் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்த்து விற்கப்படும் ஊறுகாய்களை வாங்குவதை விட, நம் வீட்டிலேயே சுலபமாக, மாதக்கணக்கில் கெட்டுப்போகாத இனிப்பான எலுமிச்சை ஊறுகாய் எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சைப் பழம் - 10
பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - 1 கப்
கல் உப்பு - தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய மற்றும் சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
செய்முறை!
முதலில் எலுமிச்சைப் பழங்களை நன்றாகக் கழுவி, ஈரம் கொஞ்சமும் இல்லாமல் ஒரு சுத்தமான துணியால் துடைத்துக்கொள்ளுங்கள். ஈரப்பதம் இருந்தால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுவிடும். இப்போது பழங்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதிலுள்ள விதைகளை முழுமையாக நீக்கிவிட வேண்டும்.
நறுக்கிய துண்டுகளை ஒரு இட்லிப் பானையில் வைத்து, சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஆவியில் நன்றாக வேகவைக்க வேண்டும். பழத்தின் தோல் நன்கு மென்மையாக மாறும் வரை வேகவைப்பதுதான் இந்த ரெசிபியின் முக்கியப் பக்குவம்.
பழங்கள் வெந்ததும், அடுப்பில் ஒரு அடிகனமான கடாயை வைத்து, பொடித்து வைத்துள்ள வெல்லத்தைச் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். வெல்லம் கரைந்து லேசான பாகு பதத்திற்கு வந்ததும், நாம் வேகவைத்து வைத்துள்ள எலுமிச்சை துண்டுகளை அதில் சேர்க்க வேண்டும்.
வெல்லப் பாகில் பழங்கள் நன்றாக ஊறி வரும்போது, மிளகாய்த் தூள், வறுத்து அரைத்த வெந்தய-சீரகப் பொடி, தேவையான அளவு கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். மசாலாக்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஊறுகாய் தொக்கு பதத்திற்கு கெட்டியாக வரும்.
ஊறுகாய் தடிமனாக வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது மற்றொரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளித்து, அதை அப்படியே தயார் செய்து வைத்துள்ள ஊறுகாயின் மேல் கொட்டிக் கலக்கினால் நாவில் நீர் ஊறவைக்கும் சுவையான இனிப்பு எலுமிச்சை ஊறுகாய் தயார்.
இதை முழுமையாக ஆறவைத்து, ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டால் ஆறு மாதங்கள் வரை கெட்டுப்போகாது. காரம், புளிப்பு, இனிப்பு என மூன்று சுவைகளும் கலந்த இந்த ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்க.