

இல்லத்தரசிகள் முந்தைய நாள் இட்லிக்கு மாவு அரைக்க மறந்துவிட்டால் ஏற்படும் பதற்றம் கொஞ்ச நஞ்சமல்ல. உடனடியாக கடைகளுக்குச் சென்று பாக்கெட் மாவு வாங்குவது பலரது வழக்கம். ஆனால், அதில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன என்பது நமக்குத் தெரியாது.
இதற்கு ஒரு சிறந்த தீர்வாக, நாமே நமது வீட்டில் மிகவும் சுத்தமான முறையில் "இன்ஸ்டன்ட் இட்லி மிக்ஸ்" தயாரித்து வைத்துக்கொள்ளலாம். வேலைக்குச் செல்வோர், தனியாக வசிப்பவர்கள், பயணங்கள் மேற்கொள்வோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
மிக்ஸ் தயாரிக்க:
இட்லி அரிசி - 4 கப்
முழு வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 கப்
கெட்டி அவல் - ½ கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு.
இட்லி சுடும்போது சேர்க்க:
புளித்த தயிர் - ½ கப்
சமையல் சோடா - ½ டீஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கேற்ப.
செய்முறை!
முதலில் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடாக்கிக் கொள்ளவும். இதில் நாம் அளந்து வைத்துள்ள உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தைச் சேர்த்து, வாசனை வரும் வரை நன்கு வறுக்க வேண்டும்.
பருப்பு கருகிவிடாமல், லேசான பொன்னிறமாக வறுபடுவது மிகவும் முக்கியம். வறுத்த பருப்பை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவைத்து, மிக்ஸியில் நைஸான மாவாக அரைத்துச் சலித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக, அதே வாணலியில் இட்லி அரிசியைச் சேர்த்து அதிலுள்ள ஈரப்பதம் முழுமையாகப் போகும் வரை வறுக்க வேண்டும். அரிசி லேசாகச் சூடானால் போதுமானது, நிறம் மாறிவிடக் கூடாது. வறுத்த அரிசியையும் நன்கு ஆறவைத்து, ரவை பதத்திற்குச் சற்று நைஸாக அரைத்துச் சலித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், கெட்டி அவலை வாணலியில் சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்து, அதையும் பவுடராக அரைத்துக்கொள்ளவும். அவல் மாவு சேர்ப்பதால், இட்லி மிகவும் மென்மையாகவும், பஞ்சு போலவும் வரும்.
இப்போது ஒரு பெரிய தாம்பாளத்தில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவு, உளுத்த மாவு, அவல் மாவு மற்றும் தேவையான அளவு கல் உப்பைப் பொடித்துச் சேர்த்து, அனைத்து மாவும் ஒன்றாகக் கலக்கும்படி நன்றாகக் கலந்துவிடவும். எந்தவித ஈரப்பதமும் இல்லாத, காற்றுப் புகாத ஒரு பாட்டிலில் இந்த மாவைக் கொட்டி வைத்துக்கொண்டால், பல மாதங்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும்.
இட்லி சுடும் முறை!
உங்களுக்கு இட்லி தேவைப்படும் போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவை எடுத்துக்கொள்ளவும். அதில் அரை கப் புளித்த தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வழக்கமான இட்லி மாவு பதத்திற்குக் கரைத்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். இட்லித் தட்டில் மாவை ஊற்றுவதற்கு ஒரு நிமிடம் முன்பு, அரை டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து லேசாகக் கலக்கி, உடனடியாகத் தட்டில் ஊற்றி 10 முதல் 12 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால், பஞ்சு போன்ற சுடச்சுட இட்லி தயார்.
கடைகளில் விற்கப்படும் பாக்கெட் மாவுகளை விட, நம் கைகளால் எந்தவித கலப்படமும் இன்றிச் செய்யப்படும் இந்த இன்ஸ்டன்ட் இட்லி மிக்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சமையல் சோடா மற்றும் தயிர் சேர்ப்பதால், இட்லிக்குத் தேவையான புளிப்புச் சுவையும், மென்மையும் இயற்கையாகவே கிடைத்துவிடும்.