3 நாள் ஆனாலும் கெடாது! ஊருக்கு போறீங்களா? இந்த 'கட்டி சோறு' செஞ்சு எடுத்துட்டு போங்க!

Katti Soru
Katti Soru
Updated on

நாம் எத்தனையோ முறை வீட்டில் புளியோதரை செய்திருப்போம். பாக்கெட் மசாலா முதல், பாட்டி சொன்ன ரெசிபி வரை எல்லாம் ட்ரை பண்ணியிருப்போம். ஆனால், கோயிலில் கொடுக்கும் அந்தப் பிரசாதப் புளியோதரை ருசி வீட்டில் வருவதில்லை என்று பலரும் அலுத்துக் கொள்வது உண்டு.

அதன் ரகசியமே வறுத்து அரைக்கும் அந்தப் பொடியிலும், நல்லெண்ணெயின் மணத்திலும்தான் இருக்கிறது. சாதம் ஒன்று சேராமல் உதிரியாகவும், அதே சமயம் மசாலா சாதத்தோடு ஊறியும் இருக்கவேண்டும். வாருங்கள், அந்தப் பாரம்பரியக் கட்டி சோறு எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சாதத்திற்கு:

  • பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி - 2 கப் 

  • நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப.

புளிக்காய்ச்சல்:

  • பழைய புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

  • நல்லெண்ணெய் - ½ கப்

  • கடுகு - 1 டீஸ்பூன்

  • கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

  • வேர்க்கடலை - ½ கப்

  • காய்ந்த மிளகாய் - 8 முதல் 10

  • கருவேப்பிலை - 2 கொத்து

  • பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்

  • வெல்லம் - ஒரு சிறிய துண்டு.

சீக்ரெட் மசாலா:

  • வெந்தயம் - ½ டீஸ்பூன்

  • மிளகு - ½ டீஸ்பூன்

  • தனியா - 2 டீஸ்பூன்

  • எள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சாதத்தை வடித்துக்கொள்ள வேண்டும். சாதம் குழைந்துவிடக் கூடாது, உதிரியாக இருக்கவேண்டும். வடித்த சூடான சாதத்தை ஒரு அகலமான தாம்பாளத்தில் கொட்டி, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மெதுவாகக் கிளறி ஆறவிடவும். சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க இது உதவும்.

இதையும் படியுங்கள்:
பூ பூக்கும்; ஆனால் காய் காய்க்காத அதிசய மரம் உள்ள சிவன் கோயில்!
Katti Soru

இதுதான் கோயில் ருசிக்கான முக்கிய படி. ஒரு வெறும் வாணலியில் வெந்தயம், மிளகு, தனியா மற்றும் எள் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டுச் சிவக்க வறுக்கவும். கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும். ஆறியதும் இதை மிக்ஸியில் நைஸான பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பருப்புகள் பொன்னிறமானதும், கரைத்து வைத்துள்ள கெட்டியான புளிக்கரைசலை ஊற்றவும். 

இதோடு உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். புளியின் பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரும் வரை கொதிக்க வேண்டும். இந்த நேரத்தில் சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கவும். இது புளிப்பு, காரம், உப்பு மூன்றையும் சமன் செய்யும்.

இதையும் படியுங்கள்:
'இறவா பனை... பிறவா புளி' : பேரூர் பட்டீஸ்வரர் கோவில்... பிரமிப்பூட்டும் அதிசயங்கள்!
Katti Soru

புளிக்காய்ச்சல் கெட்டியாகத் தொக்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இப்போது ஆறவைத்த சாதத்தின் மேல், தேவையான அளவு புளிக்காய்ச்சலை ஊற்றவும். பிறகு நாம் அரைத்து வைத்துள்ள அந்த வறுத்த பொடியை 2 ஸ்பூன் மேலே தூவவும். இதோடு சிறிது பச்சைக் கருவேப்பிலை மற்றும் 1 ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தை மெதுவாகக் கிளறவும்.

கிளறிய உடனே சாப்பிடுவதை விட, குறைந்தது 2 மணி நேரம் ஊறவிட்டுச் சாப்பிட்டால்தான், அந்த "கட்டிச் சோறு" ருசி தெரியும். சாதம் புளியை நன்கு இழுத்துக்கொண்டு, சாப்பிட அமிர்தமாக இருக்கும். இதை வாழை இலையில் கட்டி வைத்தால் 2 நாட்கள் ஆனாலும் கெடாது. பயணம் செல்லும்போது இதுதான் பெஸ்ட் ஃப்ரெண்ட். இந்த வாரம் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள், நிச்சயம் எல்லோரும் பாராட்டுவார்கள்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com