

உணவு என்பது கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் செழுமையான கலாச்சாரத்திற்குப் பெயர் போன கேரள மாநிலத்தின் உணவு வகைகளின் சிறப்பை சொல்வதைவிட அவற்றை சுவைத்து பார்த்தால்தான் நன்கு உணரமுடியும். அறுசுவைகளும் நிறைந்த விருந்தாக இருக்கும் இந்த ஓணம் ஸ்பெஷல் உணவு. பண்டிகைகளும் உணவுகளும் நமது கலாச்சாரத்துடன் இணைந்தவை. அறுசுவையுடன் வயிற்றையும் மனதையும் நிறைக்கும் விருந்து தான் ஓணம் சத்யா.
மலையாள மாதமான சிங்கம் (ஆவணி) மாதத்தில், அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 26 வரை கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் முக்கிய நாளான திருவோணம் ஆகஸ்ட் 26 அன்று வருகிறது.
ஓணம் பண்டிகையின் மிக முக்கியமான சிறப்பு உணவு 'ஓணம் சத்யா'(Onam Sadhya) எனப்படும் பாரம்பரிய அறுசுவை சைவ விருந்து ஆகும். இது வாழையில் பரிமாறப்படும் 20 முதல் 30க்கும் மேற்பட்ட பாரம்பரிய சைவ உணவுகள் அடங்கிய பிரம்மாண்டமான விருந்தாகும்.
1. முக்கிய உணவுகள் (Main Course):
மட்ட அரிசி சோறு:
இது கேரளத்து பாரம்பரிய சிவப்பு நிற மட்ட அரிசி ஆகும். தவிடு கொண்ட கேரள மட்ட அரிசி என்பது தையாமின், ரிபோஃபிளேவின் மற்றும் நியாசின் போன்ற விட்டமின் சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.
பருப்புக்கறி:
நெய் மற்றும் தேங்காய் சேர்த்து செய்யப்படும் கெட்டியான துவரம் பருப்பு கறி, சாதத்தில் முதலில் பரிமாறப்படுவது இதுவே.
கேரள சாம்பார்:
வறுத்தரைத்த தேங்காய் மற்றும் பல்வேறு காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் மணம் மிகுந்த சாம்பார் இது.
ரசம்:
செரிமானத்துக்கு உதவும் புளி மற்றும் மிளகு சேர்த்த தக்காளி சூப்.
2) கூட்டு மற்றும் பொரியல் வகைகள் (Side Dishes):
அவியல்:
கேரட், பூசணி, வாழைக்காய் எனப் பல காய்கறிகள் மற்றும் தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்து, தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து செய்யும் மிக முக்கியமான கூட்டு.
தோரன்:
முட்டைகோஸ் அல்லது பீன்ஸ் போன்ற காய்கறிகளுடன் துருவிய தேங்காய் சேர்த்து செய்யப்படும் உலர் பொரியல்.
ஓலன்:
வெள்ளைப்பூசணி மற்றும் தட்டாம் பயிரை தேங்காய்ப் பாலில் வேகவைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்யப்படும் காரம் இல்லாத கறி.
காளன்:
சேனைக்கிழங்கு அல்லது நேந்திரம் பழத்தை கெட்டித் தயிர் மற்றும் வறுத்த தேங்காய் விழுதில் செய்யும் மிகவும் சுவையான உணவு.
எரிசேரி:
பரங்கிக்காய் மற்றும் தட்டாம் பயிரை வேகவைத்து, வறுத்த தேங்காய் சேர்த்து செய்யும் கூட்டு.
புளிசேரி:
புளிசேரி என்பது இனிப்பும் புளிப்பும் கலந்த தயிர் சார்ந்த ஒரு ருசியான உணவு வகை ஆகும்.
பச்சடி/கிச்சடி:
வெள்ளரிக்காய் அல்லது பீட்ரூட்டைத் தயிர் மற்றும் கடுகு தேங்காய் விழுதில் செய்யும் பச்சடி.
3) தொடுகறிகள் மற்றும் சிப்ஸ் (Appetizers and Condiments):
இஞ்சிக்கறி/புளி இஞ்சி:
இஞ்சி, புளி மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் ஊறுகாய் போன்ற மிகவும் ருசியான உணவு இது. செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
நேந்திரங்காய் சிப்ஸ் (உப்பேரி):
தேங்காய் எண்ணெயில் வறுத்த மொறுமொறுப்பான நேந்திரம் பழ சிப்ஸ்.
சக்க வரட்டி:
நேந்திரங்காயை சர்க்கரைப் பாகு, சுக்கு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து செய்யும் இனிப்பு சிப்ஸ்.
பப்படம்:
கேரளா பாணி பிரத்தியேக அப்பளம்.
4) இனிப்பு வகைகள் (Desserts):
ஓணம் பாயசம் அல்லது இனிப்பு இல்லாமல் ஓணம் சத்யா முழுமை அடையாது.
அடை பிரதமன்:
அரிசி அடை, வெல்லப்பாகு மற்றும் கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்து செய்யப்படும் ஓணத்தின் முதன்மைப் பாயசம்.
பாலடை பிரதமன்:
அரிசி அடை மற்றும் பால், சர்க்கரையை சுண்டக்காய்ச்சி செய்யப்படும் சுவையான இளஞ்சிவப்பு நிற பாயசம்.