தேவையான பொருட்கள் :
பனீர் - 300கிராம்,
சீரகச் சம்பா அல்லது பாசுமதி அரிசி - 1 கப்,
ஆயில் - பனீரை பொரிக்க தேவையான அளவு,
தக்காளி - 2,
வெங்காயம் - 2,
புளிப்பில்லாத தயிர் - 1 கப்,
பிரியாணி இலை - 4,
நெய் - 7 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - கைப்பிடி
புதினா - கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
முந்திரி - 50கிராம்,
உப்பு - தேவைக்கு
வறுத்து அரைப்பதற்கு :
மிளகாய் வற்றல் - 4,
பச்சை மிளகாய் - 2,
பட்டை - 1 சிறு துண்டு,
கிராம்பு - 2,
கசகசா - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் -2,
துருவிய தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை :
பனீரை சிறு துண்டுகளாக வெட்டி அதில் தலா அரை ஸ்பூன் தனியா, மஞ்சள், மிளகாய், தூள்களையும் சிறிது உப்பும் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு அதை எண்ணெய்யில் போட்டு பொரித்து வைக்கவும். கூடவே முந்திரியையும் பொரித்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரிசியைக் கழுவி 1 கப் நீரில் ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் ஏற்றி கொஞ்சம் நெய் ஊற்றி (தேங்காய் துருவல் தவிர) அரைக்கும் பொருட்களை அனைத்தையும் வறுத்து அதை ஆற விடவும். அது ஆறிய பின்பு மிக்சியில் அரைக்கும் போது தேங்காய் துருவலைச் சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் நெய் விட்டு அது சூடானதும் பிரியாணி இலையை போட்டு தாளிக்கவும், பின்பு நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். இப்போது இதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அரைத்த விழுதையும் தனியா, மிளகாய், மஞ்சள் தூள்களையும் புதினா, கொத்தமல்லித் தழைகளையும் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
வதக்கலில் இருந்து நெய் பிரிந்தவுடன் நீரில் ஊறிய அரிசியுடன் உப்பும் தயிரும் சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி விடவும்.
2 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் 10 நிமிடங்கள் வைத்து பின்பு இறக்கவும்.
விசில் நின்றவுடன் குக்கரை திறந்து பொரித்து வைத்துள்ள பன்னீர், முந்திரி, 1ஸ்பூன் நெய், சிறிது கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் அருமையான பனீர் பிரியாணி ரெடி
இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி , மற்றும் வெஜ் குருமா சரியான காம்பினேஷன்..!