
தினம் தோசை இட்லி என்பதற்கு பதிலாக பூரி சப்பாத்தி வாரம் ஒரு தடவையாக நம் வீடுகளில் செய்வது வழக்கம். ஆனால் பூரி என்றால் உப்பி வருவதற்கும் சப்பாத்தி என்றால் மிருதுவாக வருவதற்கும் மெனக்கெடுவது உண்டு. ஒரு சிலருக்கு இது கைவந்த கலையாக இருக்கும் அவர்கள் செய்தால் மட்டும் எப்படி இப்படி வருகிறது என்று யோசிப்போம்.
இதோ பூரி சப்பாத்தி குறித்த சில வழிமுறைகள் மற்றும் செய்முறைகள்.
பூரி
பூரி செய்வதற்கு கோதுமை மாவு தவிர்த்து மைதா மாவையும் உபயோகிக்கலாம். கோதுமை மாவு பாதி மைதா மாவு பாதி என்று கலந்து செய்யலாம். பூரி மாவு மிருதுவாக இருக்க சிறிது வெண்ணைய் அல்லது சிறிது சூடு செய்த நல்லெண்ணெய் அல்லது ரீபைண்ட ஆயில் சேர்த்து பிசையவும்.
பால் அல்லது கெட்டியான தேங்காய் பால்விட்டு பிசைந்தால் இன்னும் சுவை கூடும். பூரி மாவை பிசைந்து ஒரு ஈரத்துணியை போட்டு மூடி அரைமணி நேரம் கழித்து பூரி செய்தால் மிருதுவாக இருக்கும்.
பூரி மாவு பிசையும்போது சிறிது ரவை சேர்த்தால் ஹோட்டல் பூரி போல் எவ்வளவு நேரம் ஆனாலும் அமுங்காது.
பூரி செய்முறை:
மைதா & கோதுமை மாவை சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு வெண்ணெய் சேர்த்து நன்கு சிறிது நேரம் பிசைந்துவிட்டு பின் தண்ணீர்விட்டு பிசைந்து 30 நிமிடம் கழித்த பின் வட்ட வடிவில் இட்டு கெட்டியான வாணலியில் எண்ணெயில் பொரித்து எடுக்கலாம் . பூரி தேய்க்கும்போது ஓட்டைகள் விழாமலும் தடிமன் சீராகவும் இருப்பதுடன் எண்ணெய் ஓரளவு நன்கு காய்ந்திருந்தால் மட்டுமே பூரி எழும்பி புஸ்ஸென வரும்.
சப்பாத்தி
பொதுவாக கோதுமை மாவில் சப்பாத்தி செய்யலாம். மைதாவிலும் சப்பாத்தி செய்யலாம். ஆனால் மைதா தேய்க்க இழுத்துக்கொண்டு வரும் என்பதாலும் சத்துக்காகவும் பெரும்பாலானோர் கோதுமை மாவில் மட்டுமே சப்பாத்தி செய்வது வழக்கம்.
சப்பாத்தி மாவு பிசைவதற்கு பெரும்பாலும் தண்ணீரை உபயோகப்படுத்தப்படுகிறது. வெதுவெதுப்பான நீரில் பால் கலந்து செய்யலாம். சப்பாத்தி மெதுவாக இருக்கும்.
மாவில் வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சிறிது சேர்த்து பிசையலாம். சப்பாத்தி மாவையும் பிசைந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டால் மாவு மெதுவாகி சப்பாத்தியும் மெதுவாக இருக்கும்.
செய்முறை:
கோதுமை மாவை சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். உப்பு வெண்ணைய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் விட்டு பிசைந்து ஈரத்துணியினால் மூடி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
உருண்டைகளை ஒன்று போல் எடுத்து கோதுமை மாவில் தோய்த்து கல்லில் சப்பாத்திகளை சற்று திடமாக இடவும்.
சப்பாத்திகளை கனமான தோசை சட்டியில் போட்டு இரு பக்கமும் சற்று உலர்ந்த மாதிரி வந்த பின் அதை சுற்றி தேக்கரண்டி நெய் விட்டால் சப்பாத்தி பந்து போல் எழும்பி வரும். சப்பாத்திக்கு சிறு தீ தான் இருக்க வேண்டும்.
சப்பாத்தி மடிக்கும்போது நடுவில் சிறிது எண்ணெய் விட்டு முக்கோணமாக்கி மடித்து மீண்டும் தேய்த்து போடும்போது சப்பாத்தி இதழ் இதழாக வருவதற்கு ஏதுவாக இருக்கும்.
சப்பாத்தியை நெய் ஒன்றும் விடாமல் வெறுமனே தோசை சட்டியில் இட்டு இருபுறமும் புரட்டி எடுத்து சப்பாத்தி கரி அடுப்பில் கனன்று கொண்டிருக்கும் தணல் மீது இடுக்கியின் உதவியால் போட்டு இருபுறமும் திருப்ப சப்பாத்தி பூரி மாதிரி எழும்பி வரும். இருபுறமும் சிறிது நெய் விட்டு சுடலாம். கறி அடுப்பு இல்லையெனில் கேஸ் ஸ்டவ்வின் மீது சுடலாம். சப்பாத்தி வேறொரு சுவையாக மணமாக இருக்கும். காஸ் அடுப்பில் சப்பாத்தி கனலில் சுடுவதற்கு என்று சில உபகரணங்களும் உண்டு.