

பொதுவாகவே ராகி மாவு உடலுக்கு ஊட்டம் தருவதாகும். இதில் செய்யும் உணவுகளை எல்லா வயதினரும் சாப்பிடலாம். குறிப்பாக வயதானவர்களும், சர்க்கரை நோயாளிகளும் ராகி மாவில் செய்யும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக, சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ராகி மாவு பயன்படுத்தி எளிதாக செய்யும் உணவுகளில் களியும் ஒன்று. ஆனால் இப்போதெல்லாம் இந்த உணவை யாரும் செய்து சாப்பிடுவதில்லை. நவீன உணவு முறை கலாச்சாரத்தால் துரித உணவுகளுக்கு அடிமையாகி, நமது இந்த பாரம்பரிய உணவை மறந்து விட்டோம்.
சரி வாருங்கள் இந்தப் பதிவில் சுவையாக எப்படி ராகி களி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு ராகி மாவை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே கப்பில் ஒரு கப் அளவுக்கு தண்ணீர் எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவு கட்டி இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மாவு அளந்த கப்பில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீர் கொதித்த பிறகு கரைத்து வைத்துள்ள ராகி மாவு கலவையை அதில் சேர்க்க வேண்டும். இப்போது தீயை குறைவாக வைத்து தொடர்ந்து மாவை கலக்கிக் கொண்டே இருங்கள்.
5 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாகக் கலக்கினால் ராகி மாவு வெந்துவிடும். இப்போது கையில் கொஞ்சம் தண்ணீர் தொட்டு ராகி மாவை தொட்டுப் பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்படி ஒட்டாமல் இருந்தால் மாவு வெந்துவிட்டது என அர்த்தம். இறுதியாக ஓரளவுக்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு ஒருவர் சாப்பிடும் அளவிலான உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ராகி களி தயார்.
இத்துடன் உங்களுக்கு விருப்பமான குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அள்ளும், நாக்கு அங்கும் இங்குமாகத் துள்ளும். அந்த அளவுக்கு வேற லெவல் ரெசிபி இந்த ராகி களி. இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.