பாரம்பரியமிக்க கார குழம்பு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சூப்பரான சுவையில் மணக்க மணக்க சாதத்தில் ஊற்றிச் சாப்பிடும்போது கிடைக்கும் திருப்தியே தனி. ஆனால், ஹோட்டல்களிலும் கல்யாண வீடுகளிலும் வைக்கப்படும் அந்தச் சுவை ஏன் நம் வீடுகளில் வருவதில்லை என்று பலரும் சிந்திப்பதுண்டு. குறிப்பாக சென்னையில் வைக்கப்படும் காரக்குழம்பு சுவை வித்தியாசமாக இருக்கும்.
அதற்கான ரகசியம் மிகவும் எளிமையானது. இந்தக் குழம்பை செய்யும்போது, வழக்கமான செய்முறையுடன் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சேர்த்தால், அதன் சுவை மற்றும் மணம் பன்மடங்கு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
புளி - ஒரு எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 2
கத்திரிக்காய் அல்லது முருங்கைக்காய் - 1 கோப்பை
குழம்பு மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
ரகசியப் பொருள் : வறுத்த வேர்க்கடலை மற்றும் எள் பொடி - 2 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு மண் சட்டி அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஊற்றவும். பாரம்பரிய முறையில் குழம்பு செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால்தான் அதன் அசல் சுவை கிடைக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். வெந்தயம் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மைய வதக்க வேண்டும். தக்காளி நன்கு குழைந்த பின், நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய் அல்லது முருங்கைக்காய் போன்ற காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இப்போது, குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெயிலேயே ஒரு நிமிடம் வறுக்கவும். இதனால் சமையலுக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
அடுத்து, கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டி, எண்ணெய் பிரிந்து வரும் வேளையில், நாம் முன்பே தயார் செய்து வைத்துள்ள அந்த ரகசியப் பொருளான 'வறுத்த வேர்க்கடலை மற்றும் எள் பொடியை' தூவி, மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
வேர்க்கடலை மற்றும் எள் சேர்ப்பதால் சமையலுக்கு ஒரு புதுவிதமான மணமும், லேசான இனிப்பும் கலந்த சுவையும் கிடைக்கும். இணையத்தில் உள்ள உணவு வல்லுநர்களின் கூற்றுப்படி, எள் மற்றும் வேர்க்கடலை இரண்டும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளை வழங்குவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் மேம்படுத்துகிறது. இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், மணக்கும் சென்னை ஸ்டைல் கார குழம்பு தயார்.