
ரசத்தில் உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, ரசத்தை கொதிக்க வைத்து, மிளகு, ஜீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்துவிட்டால் போதும். உப்பு மட்டுப்படும்.
சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டிப்போட்டால் உப்பை அது உறிஞ்சி விடும்.
குழம்பில் உப்பு அதிகமாகி விட்டதா? கவலை வேண்டாம். எலுமிச்சம்பழ அளவு சாதத்தை உருட்டி, சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டி குழம்பில் போட்டுவிட்டால் அதிகப்படியான உப்பை சாதம் உறிஞ்சி விடும். அல்லது வாழைஇலை ஓரத்தில் இருக்கும் தண்டினை ஒரு தண்டு நறுக்கிப்போட்டால் உப்பு குறைந்துவிடும்.
தோசைமாவில் உப்பு அதிகமாகிவிட்டதா? இரண்டு கரண்டி அரிசி,அரைக்கரண்டி உளுத்தம் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து,மிக்ஸியில் மைய அரைத்து தோசைமாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும்.
கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு,பீட்ரூட், கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்கு சேரும். எனவே இந்தவகை பொரியல்களில் உப்பு அதிகமாகிவிட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்தால் போதும்.
பருப்பு சேர்க்காத பொடியில் உப்பு அதிகமாகிவிட்டால் (தனியாப்பொடி, கறி மசாலாப்பொடி போன்றவை) கறிவேப்பிலையை கொஞ்சம் எடுத்து,எண்ணெயில் வறுத்துப் பொடித்து, உப்பு கூடிப்போன பொடியில் கலந்துவிட்டால் உப்பு மட்டுப்படும்.
அரைத்து வைத்துள்ள இட்லி மாவில் உப்பு கூடிவிட்டால் ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து, ஐந்து நிமிடங்கள் பாலில் ஊறவைத்து இட்லி மாவுடன் சேர்த்து விட்டால் போதும். கூட்டு, கிரேவி போன்றவற்றில் உப்பு அதிகமாக இருந்தால் வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம் பருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணையில் வறுத்து, அல்லது வதக்கி மிக்ஸியில் அரைத்துச்சேருங்கள். மீண்டும் ஒருமுறை கொதிக்க விடுங்கள். உப்பு தேவையான அளவுக்கு மாறிவிடும்.
பொடிவகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக்கொஞ்சம் வாணலியில் வறுத்து, தனியாக பொடி செய்து நன்கு கலந்துவிடவும்.
பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால் தேங்காயைத் துருவிச்சேர்க்கலாம். அல்லது ஒரு கரண்டி பயத்தம்பருப்பை வெந்நீரில் கால் மணி நேரம் ஊறவைத்து, அதைப் பொரியலில் கலந்தாலும் உப்பு மட்டுப்படும்.
பொட்டுக்கடலை மாவு, அல்லது சோளமாவு இருந்தால் அவற்றை பாலில் கரைத்து சாம்பாரில் சேர்த்தால் உப்பின் ருசியை சரி செய்யலாம்.
வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாக இருக்கவேண்டும்.அப்போதுதான் கலந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.